Monday, 24 February 2014

இன்று நூற்றாண்டு காணும் பாம்பன் ரெயில் பாலம் உருவான வரலாறு

                                               இன்று நூற்றாண்டு காணும் பாம்பன் ரெயில் பாலம் உருவான வரலாறு

சென்னை:இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமேசுவரம் தீவு வழியாக பல நூற்றாண்டு காலமாக வர்த்தக தொடர்பு இருந்து வந்தது. தமிழ்நாட்டில்  இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தேயிலை தோட்ட வேலைக்காக இலங்கைக்கு சென்று வந்தனர்.

தமிழ் நாட்டில் இருந்து சிலவகை பொருட்களை கொண்டு சென்று கொழும்பு நகரில் விற்பனை செய்த தமிழக வணிகர்கள் அங்கிருந்து தேயிலை போன்ற பொருட்களை இங்கு கொண்டு வந்து வியாபாரம் செய்து வந்தனர்.  

அவர்கள் மண்டபத்தில் இருந்து படகுகள் மூலம் பாம்பன் வழியாக தனுஷ்கோடி துறைமுகம் சென்று அங்கிருந்து கப்பலில் இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கு சென்று வந்தனர்.

பயணிகள் வசதிக்காக மண்டபத்துக்கும், தனுஷ்கோடி துறைமுகத்துக்கும் இடையே (பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக) 1876-ம் ஆண்டு பாம்பன் கடல் மீது ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.   

இந்த பாலத்தின் வழியாக 1914-ல் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த ரெயில் பாலத்தின் அடியில் கடலில் கப்பல்கள் சென்று வருவதற்கு வசதியாக பின்னாளில் தூக்கு பாலமாக மாற்றி அமைக்கப்பட்டது.

மதுரையில் இருந்து செல்லும் ரெயில்கள் மண்டபத்தில் இருந்து கடல் பாலத்தின் மீது சென்று பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக தனுஷ்கோடி துறைமுகததுக்கு செல்லும்.

தனுஷ்கோடி துறைமுகம் பெரிய துறைமுகமாக விளங்கியது. மதுரையில் இருந்து வரும் ரெயில் தனுஷ்கோடி கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலுக்குள் சென்று நேரடியாக பயணிகளை இறக்கிவிடும் வசதியும் அப்போது இருந்தது.   

இந்த கடல் ரெயில் பாலத்தின் மொத்த தூரம் 2.45 கிலோ மீட்டர் ஆகும். கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்கள் ரெயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன. இந்த தூண்கள் கட்ட 4 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது.  

ஆங்கிலேய என்ஜினீயர் ஷெஷ்கர் கட்டியதால் இந்த ரெயில் பாலத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி தீவு அழிந்தது. ரெயில் பாதையும் சேதம் அடைந்தது. ராமேசுவரம் வரை உள்ள ரெயில் பாதை சீரமைக்கும் பணி நடந்தது. 1966-ம் ஆண்டில் மீண்டும் மண்டபம்-ராமேசுவரம் இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது.   

இந்த நிலையில் ராமேசுவரம் தீவுக்கு பஸ், கார்கள் சென்று வர வசதியாக மண்டபத்துக்கும், ராமேசுவரத்துக்கும் இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டது.   

அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி அடிக்கல் நாட்டினார். 1986-ம் ஆண்டு முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி வாகனங்கள் செல்லும் மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதற்கு மறைந்த இந்திராகாந்தி பெயர் வைக்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 2.23 கி.மீட்டர் ஆகும்.   

இந்த பாலத்தின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு நேரடி வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.   இந்த மேம்பாலம் இந்தியாவின் 2-வது மிக நீளமான கடல்பாலம் ஆகும். (முதல் பாலம் மும்பை பாந்திரா-வொர்லி இடையே உள்ளது.)   

இந்த மேம்பாலத்தையொட்டியே ரெயில் பாலம் உள்ளது. ரெயில் பாலம் பழமையானது என்பதால் கடல் அரிப்பை தடுக்க பாலத்தின் தூண்களில் 6 மாதத்துக்கு ஒருமுறை அலுமினியம் பூசப்பட்டு இந்த பாலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பாம்பன் ரெயில் பாலத்துக்கு இன்று நூறு வயதாகின்றது. நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில்வே துறை சார்பில் பாம்பன் ரெயில் பாலம் நூற்றாண்டு விழா தொடர்பான கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 

பாம்பன் பாலம் மற்றும் தனுஷ்கோடி ரெயில்பாதை உள்பட பல அரிய புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. பழந்தமிழரின் வரலாற்றை பதிவு செய்யும் விதமாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் பாம்பன் பாலத்தை இன்னும் பல நூறாண்டுகள் வாழ்க என வாழ்த்துவதுடன், அதனை பாதுகாப்பதும் நமது கடமையாகும்.

Friday, 21 February 2014

3 ஜெட் என்ஜின்களுடன் மணிக்கு 643 கிலோ மீட்டர் வேகத்தில் பாயும் அதிநவீன லாரி

                                           3 ஜெட் என்ஜின்களுடன் மணிக்கு 643 கிலோ மீட்டர் வேகத்தில் பாயும் அதிநவீன லாரி


ஒட்டாவாகனடாவின் ஓண்டாரியோ நகரில் நவீன வாகனங்களுக்கான கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பங்கேற்ற அதிநவீன லாரி பார்வையாளர்களின் கண்களை மட்டுமின்றி கருத்தையும் கவர்ந்திழுத்தது. 

இந்த லாரியின் உரிமையாளரான நியெல் டார்னெல் என்பவர் 1957-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘செவெர்லெட்’ லாரியின் வடிவமைப்பை மாற்றி, அதில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான 3 பழைய ஜெட் விமான என்ஜின்களை பொருத்தி, ஒரு மணி நேரத்தில் 643  கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் அசுர வாகனமாக மாற்றியுள்ளார். 

இன்றைய சாலைகளில் ஓடும் கனரக லாரி என்ஜின்களின் அதிகபட்ச குதிரை இழுவைத் திறன் (ஹார்ஸ் பவர்) 400 ஹெச்.பி.க்கும் குறைவாகவே உள்ள நிலையில், நியெல் டார்னெல் உருவாக்கியுள்ள இந்த அதிநவீன லாரியின் இழுவைத் திறன் 36 ஆயிரம் ஹெச்.பி. என்று மதிடப்பிடப்பட்டுள்ளது. 

இந்த திறனுடன் ஆறரை வினாடியில் கால் மைல் தூரத்தை கடந்து ’ஷாக்வேவ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த லாரி புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த கணக்கீட்டின்படி பார்த்தால் ஒரு மணி நெரத்தில் 400 மைல் (643 கிலோ மீட்டர்) தூரத்தை இந்த லாரி சுலபமாக கடந்து விடும் என்பது தெளிவாகிறது என்று வாகன துறை பொறியாளார்கள் (ஆட்டோமொபைல் என்ஜினீயர்கள்) வியக்கின்றனர்.

Tuesday, 18 February 2014

நாமும் முன்னேறுவோம்


சீனாவின் வடபகுதியில் 2016-2020ம் ஐந்தாண்டு கால திட்டத்தில், கடலுக்கு அடியில் 123 கிமீ நீளம் கொண்ட ரயில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த ரயில் பாதையில், முழுமையாக சரக்குகள் ஏற்றப்பட்ட ஒரு ரயில், மணிக்கு 220 கிமீ வேகத்தில் செல்ல முடியும் என்பது விசேஷம். இது மட்டுமின்றி, சீனாவில் எங்கு பார்த்தாலும் பாலங்கள், தொழிற்சாலைகள், கட்டிடங்கள் என்று விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டில் உள்கட்டமைப்பு பணிகளுக்காக 16,800 கோடி அமெரிக்க டாலர்களை சீனா ஒதுக்கியுள்ளது. சீனாவில் இன்னும் 15 ஆண்டில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், அப்போது அங்கு உற்பத்தி குறையலாம் என்றும் வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால், எந்த தொழிலை எடுத்து கொண்டாலும் அதில் முதலிடத்தை பிடிக்கும் வகையில், அரசே தேவையான முயற்சிகளை சீனாவில் எடுத்து வருகிறது. அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7.7 சதவீதம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, இன்னமும் 5 சதவீதத்தை ஒட்டியே உள்ளது.

சீன பொருட்கள் இந்தியாவில் வந்து குவிவதால், இந்திய வர்த்தகர்களின் வாய்ப்புகள் பாதிக்கப்படுகிறது என்று சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இரும்பு தாது முதல் பல்வேறு கச்சா பொருட்களை இந்தியாவில் இருந்து வாங்கிக் கொண்டு சென்று, அதை உற்பத்தி பொருட்களாக மீண்டும் மாற்றி, இந்தியாவுக்கே அனுப்பி விற்கிறது சீனா. டாடா நிறுவனத்திடம் கார் உதிரி பாகங்களை தயாரித்து, அதை பல மடங்கு லாபத்துடன், இந்தியாவிலேயே விற்கிறது ஜிஎம் கார் கம்பெனி. திருப்பூர் பனியன்கள், டிசர்ட்கள், பிராண்ட் பெயருடன் அமெரிக்காவில் இருந்து வந்தால் அதிக காசு கொடுத்து வாங்குவதும் இங்குதான்.

குறைந்த விலை, தரமான பொருட்கள் என்ற மந்திரத்தை மட்டும் வைத்து கொண்டு வியாபாரிகள் செயல்பட்டால், எல்லா கடை வீதிகளும் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருக்களாக மாறும் என்பதில் ஐயமில்லை. அதேசமயம், உற்பத்தி பொருட்களை, விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு தேவையான வசதிகளை, சந்தை வாய்ப்புகளையும் வியாபாரிகளுக்கு ஏற்படுத்தி தரவேண்டியது அரசின் கடமை. வரி ஒன்றை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், இதையும் செய்யும்போது, தானாகவே அரசின் வருவாய் உயர்வதோடு, நாட்டின் வளர்ச்சியிலும் முன்னேற்றம் ஏற்படும்.

டாடாக்களையும், பிர்லாக்களையும் வளர்த்து விடுவதுடன், மூர்மார்க்கெட் வியாபாரிகளும் ஆலைகளை தொடங்கும் அளவுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தால்தான் சீனாவில் இருந்து இறக்குமதியாவது நின்று, இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாவது அதிகரிக்கும்.

Monday, 17 February 2014

டூத் பேஸ்ட்-டில் உள்ள கெமிக்கல் குழந்தைகளின் மூளையை பாதிக்கும்



பாரிஸ்: டூத் பேஸ்ட் உள்பட பல்வேறு பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள், குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹார்வர்ட் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் பிலிப்பி கிரேண்ட்ஜீன், கேன் ஸ்கூல் ஆப் மெடிசின் கல்லூரியில் பணிபுரியும் ஆய்வாளர் பிலிப் லாண்ட்ரிகன் ஆகியோர், நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். தங்களது ஆய்வில் தெரிய வந்த உண்மைகள் குறித்து இருவரும் கூறியதாவது:குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் ரசாயன பொருட்களின் எண்ணிக்கை கடந்த 2006ம் ஆண்டு 6 ஆக இருந்தது. இப்போது 12 ஆகியுள்ளது. டூத் பேஸ்ட்டில் உள்ள புளோரிட் உள்பட பல்வேறு ரசாயன பொருட்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன. கடந்த 2006ம் ஆண்டு எத்தனால், லெட், மெத்தில்மெர்க்குரி, பைபெனில்ஸ், ஆர்செனிக் மற்றும் டோலின் ஆகிய ரசாயன பொருட்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிப்பதாக கண்டறியப்பட்டன. இப்போது மெக்னீசியம், புளோரிட், குளோர்பைரிபோஸ், டெட்ராகுளோரோ எத்திலீன் உள்பட மேலும் 6 ரசாயன பொருட்கள் சேர்ந்துள்ளன.

இந்த ரசாயனங்கள் எல்லாம் பூச்சி கொல்லி மருந்தாகவும், டிரை கிளீனிங் போன்றவற்றும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பொருட்கள் டூத் பேஸ்ட் உள்பட பல பொருட்களில் சேர்க்கப்படுகின்றன. இதனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஆட்டிசம், கவனக் குறைபாடு, கற்றலில் குறைபாடு ஆகியவற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை இதுபோன்ற பாதிப்புக்கு ஆளாகிறது என்று தெரிய வந்துள்ளது.இந்த ரசாயன பொருட்கள் குழந்தைகளின் அறிவு திறனை சிதைத்து விடுகின்றன. அவர்களுடைய நடத்தையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதை தடுக்க வளர்ந்து வரும் நாடுகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரசாயன பொருட்கள் அனைத்தையும் சோதனை செய்து கட்டுப்பாடுகள் கொண்டு வரவேண்டியது அவசியம். அத்துடன், மார்க்கெட்டில் புதிய பொருட்கள் அறிமுகமாகும் போது அதில் உள்ள ரசாயனங்கள் குறித்து உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும்.இவ்வாறு பிலிப்பி கிரேண்ட்ஜீன், பிலிப் லாண்ட்ரிகன் ஆகியோர் கூறியுள்ளனர். - See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=53259#sthash.Cl5mSqMf.dpuf

Saturday, 15 February 2014

இரத்தத்தை சுத்தம் செய்யும் கோவைக்காய்


கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. 

இரத்தம் சுத்தமடைய:


காற்று, நீர், இவற்றின் மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவு (பாஸ்ட்புட்)களாலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் பித்த அதிகரிப்பு காரணமாக இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் உருவாகிறது. இவர்கள் கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.

கண் நோய் குணமாக:


கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.

தோல் கிருமிகள் நீங்க: 


தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது. கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.

உடல் சூடு :
 தற்போது கோடைக் காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. இதனால் சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களால் உடலின் தட்ப வெப்ப நிலையும் மாறுபடுகிறது. இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் உருவாகிறது. இதற்கு கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும் .

வியர்க்குரு
வை தடுக்க

சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருகளாக நீர்கோர்த்துக்கொள்ளும். இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. இவர்கள் கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்

தாது புஷ்டியாக


இன்றைய மன அழுத்த பிரச்சனையால் சிலர் தாதுவை இழந்துவிடுகின்றனர். இதனால் இவர்கள் மண வாழ்க்கைக்கு செல்ல பயங்கொள்கின்றனர். மேலும் சிலரோ இதை மறைத்து திருமணம் செய்து பின்னாளில் மணவாழ்க்கை கசந்து விவாகரத்து கோரி நிற்கின்றனர். இப்பிரச்சனை தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.

கோவையின் பயனை உணர்ந்து அதனைப் பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமான உடலைப் பெறலாம்

Wednesday, 12 February 2014

சிதம்பர ரகசியம்

சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று வடிவங்களில் வீற்றிருக்கிறார். இம்மூன்று விதங்களிலும் ஒருசேர அருள்பாலிக்கும் தலம் சிதம்பரம். இங்கு லிங்கரூபமாக இருக்கும் திருமூலநாதர் அருவுருவ வடிவமாவார். நடராஜரின் திருமேனி உருவ வடிவமாகும்.

சிதம்பர ரகசியமாக இருக்கும் வெட்டவெளி சிவனின் அருவவடிவமாகும். நடராஜரின் வலப்பக்கத்தில் ஒரு சிறுவாசல் உள்ளது. அதை திரையால் மூடி இருப்பர். பூஜையின் போது அத்திரையை அகற்றி கற்பூர ஆரத்தி காட்டுவர். 

அப்போது இறைவனின் திருவுருவம் எதையும் காண முடியாது. ஆகாய ரூபமாக இறைவன் இருப்பதை இவ்வழிபாடு காட்டுகிறது. இறைவன் ஆகாயம் போல் பரந்து விரிந்தவன். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. 

இறைவனும் முதலும் முடிவும் இல்லாதவன் என்பதை இது காட்டுகிறது. தங்கத்தால் செய்யப்பட்ட வில்வமாலை ஒன்றை மட்டும் அவ்விடத்தில் காணலாம். இதையே சிதம்பர ரகசியம் என்பர்.

இன்றும் கூட தெருவில் பணம் கிடந்தால் குனிந்து எடுக்க தயங்க மாட்டேன்: உலக கோடீஸ்வரர் பில் கேட்ஸ் விளக்கம்


நியூயார்க்:உலகின் பெரும் செல்வந்தராக கருதப்படும் மைக்ரோ சாப்ட் அதிபர் பில் கேட்சின் ஒட்டு மொத்த வர்த்தக முதலீடு 72 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் அவருக்கு வட்டியாக மட்டும் ஒவ்வொரு வினாடியும் 114.16 டாலர்கள் கிடைத்து வருவதால் அவரது முதலீடு ஒவ்வொரு வினாடியும் உயர்ந்து கொண்டே வருகிறது.

இதன் வாயிலாக வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபமும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து பெருகிக் கொண்டே போகிறது. வருமானத்தின் பெரும்பகுதியை உலக நாடுகளின் போலியோ ஒழிப்பு, எய்ட்ஸ் நோய்க்கு எதிரான பிரசாரம் போன்றவற்றுக்காக செலவிட்டு வரும் அவர் இன்றும் கூட அன்றாடம் தான் சாப்பிட்ட தட்டுகளை இரவு வேளைகளில் தானே சுத்தம் செய்து வைப்பதில் மனநிறைவு கொள்கிறார்.

இந்நிலையில், அமெரிக்க அரசின் உளவு பார்க்கும் நடவடிக்கை, கேட்ஸ் அறக்கட்டளையின் தொண்டுகள், மற்றும் தனது தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் தொடர்பாக சமூக வலைத்தளத்தின் வாயிலாக நேற்று ‘ஆன் லைன்’ மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் சரமாரியாக பதில்களை அள்ளி வீசினார்.

இவற்றில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த பில் கேட்ஸ், ‘இன்றும் கூட தெருவில் 100 டாலர் நோட்டு கிடந்தால் அதை குனிந்து எடுக்க நான் தயங்க மாட்டேன். இதற்காக எனது நேரம் செலவாவதை பற்றி கவலைப்பட மாட்டேன்’ என்று அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

செம்பருத்தி பூவின் மருத்துவ பயன்கள்



செம்பருத்தி மூலிகை தைலத்தின் மகத்துவத்தையும், அதை எப்படி பயன்படுத்தினால் அதன் பலன் முழுமையாக நமக்கு கிடைக்கும் என்பதை இங்கு காண்போம். செம்பருத்தி மலர்கள் 25 எடுத்து மர உலக்கையால் இடித்து சாறெடுக்கவும், 

அதற்கு சம அளவு நல்லெண்ணை சேர்த்து காய்ச்சவும், சிவப்பு நிறம் இறங்கி தைலப்பதம் வந்ததும் வடிகட்டி ஆறவிட்டு எடுத்து வைக்கவும். இந்த தைலத்தை கூந்தலுக்கு பூசி வர, கூந்தல் கருமையாக செழித்து வளரும். இளநரை கூட மாறிவிடும். உடல் 

சூடு தணிய : 

தண்ணீரை காய்ச்சி குடிப்பது தான் சுகாதாரம். செம்பருத்தி பூவை நீரிலிட்டு காய்ச்சி அருந்தி வர உடல் சூடு தணியும். கண் எரிச்சல் இருக்காது. குளுமை வேண்டினால் செம்பருத்தி தான் நல்ல சாய்ஸ். 

இதய நோயை விரட்ட : 

செம்பருத்தி பூக்களை சேகரித்து நிழலில் வைத்து காயவிடவும். மொறு மொறுவென காய்ந்ததும் மிக்சியில் இட்டு அரைத்து தூளாக்கி சலித்து கொள்ளவும். இந்த தூளை ஒரு டம்ளர் பசும் பாலில் விட்டு காய்ச்சி தினமும் ஒருவேளை அருந்தி வர, தாது புஷ்டி ஏற்படும். உடலில் மினுமினுப்பு ஏற்படும். ஒரு டம்ளர் செம்பருத்தி தூளை ஒரு டம்ளர் நீரில் சேர்த்து அரை டம்ளராக சுண்டக்காய்ச்சி தினமும் அருந்தினால் இதய நோய் உங்களை நெருங்கவே நெருங்காது. 

மாதவிடாய் கோளாறு : 

ஒரு டம்ளர் பசும்பாலில் ஒரு தேக்கரண்டி செம்பருத்தி தூள் ஒரு தேக்கரண்டி தேன், தேக்கரண்டி ரோஜா இதழின் பொடி சேர்த்து 48 நாட்கள் அருந்தி வர மாத விடாய் கோளாறுகள் குணமாகும். குறிப்பாக வெள்ளைப்பாடும், அதிக உதிரப்போக்கு போன்ற பெண்களின் பிரச்சினைகள் உடனடியாகத் தீரும். 

கருப்பை பலம் பெற : 

கிராமப்புறங்களில் சிறுமிகள் பூப்படைந்ததும், செம்பருத்தி பூவை நெய்யில் வதக்கி சாப்பிட தருவார்கள். இதனால் அவர்களுடைய கருப்பை சம்பந்தப்பட்ட உறுப்புகள் பலம் பெறுவதோடு நல்ல வனப்பும் பெற்று அழகோடு மிளிர்வார்கள். 

இரும்பு டானிக் : 

செம்பருத்தி வேரை உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். ஒரு தேக்கரண்டி செம்பருத்தி வேர் பொடியும் 2 ஆடு தொடா இலைகளை சேர்த்து குடிநீரில் காய்ச்சி வடிகட்டி அருந்த இருமல் உங்களிடம் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் பறந்துவிடும். 

எதுவும் வேண்டாங்க! தோட்டத்து பக்கம் போக நேரும் போதெல்லாம், ஒரு செம்பருத்தி பூவையோ, மொட்டையோ பறித்து மென்று சாப்பிட்டு விடுங்கள் இரும்பு டானிக் சாப்பிட்ட அளவுக்கு புஷ்டி கிடைக்கும்.

மாங்குரோவ் காடு, கல்நண்டு வளர்ப்பில் புதிய சாதனை


மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறது நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் புளியந்துறை கிராமத்தைச் சேர்ந்த இளஞ்செழியனின் புதிய முயற்சி.
இயற்கையாக வளரும் மாங்குரோவ் செடிகளைச் செயற்கை முறையில் நட்டு வளர்த்து அதில் அடுத்த சாதனையாக கல்நண்டுகளை வளர்த்து இரட்டைச் சாதனை படைத் திருக்கிறார் இந்த இளஞ்செழியன்.
புதிய மாற்றங்களுக்கு வழி
இந்தியாவில் கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடற்கரையோரத்தில் செயற்கை முறையில் மாங்குரோவ் காடுகள் வளர்ப்பும், அதில் கல்நண்டு வளர்ப்பும் இதுதான் முதன்முதலான மற்றும் புதிய முயற்சி. இது வெற்றி பெற்றிருப்பது இனிவரும் காலங்களில் பல்வேறு மாற்றங்களுக்கு வழிவகுப்பதாக அமையும்.
இளஞ்செழியன் தன்னுடைய 1 ஏக்கர் நிலத்தில் சதுப்பு நிலக்காடு (மாங்குரோவ் செடிகள்) நட்டு கடந்த 7 ஆண்டுகளாக வளர்த்து வந்தார். செடிகள் வளர்ந்து பெரிதானவுடன் 10 மாதங்களுக்கு முன் அதில் 3 கிராம் எடை கொண்ட 6 ஆயிரம் கல்நண்டு குஞ்சுகளை விட்டு வளர்த்து வந்தார். தற்போது அவை ஒவ்வொன்றும் 800 கிராம் எடையுடன் பெரிதாக வளர்ந்து அவருக்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தந்துள்ளன.
அவிசின்யா, ரைசோபோரா
இறால், கல்நண்டு, கொடுவா மீன் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இளஞ்செழியன். புளியந்துறை கடற்கரையோரத்தில் கடந்த 2006-ம் ஆண்டு இவருக்குச் சொந்தமான சுமார் 1 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் உதவியுடன் சதுப்பு நிலத்தில் அவிசின்யா, ரைசோபோரா ஆகிய மாங்குரோவ் செடிகளை நட்டு வளர்த்து வந்தார். அதில்தான் கல்நண்டு வளர்ப்பையும் மேற்கொண்டு தற்போது சாதனை படைத்திருக்கிறார்.
இந்தச் சாதனையை உலகறியச் செய்ய திங்கள்கிழமை கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுடன் இணைந்து கல்நண்டு அறுவடைத் திருவிழாவைத் தொடங்கினார்.
விழாவில் கடல் பொருள் ஏற்றுமதி ஆணையத்தின் துணை இயக்குநர் வில்சன், உதவி இயக்குநர்கள், பேராசிரியர்கள் மற்றும் பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குநர் கதிரேசன், கல்நண்டு வளர்ப்பு ஆராய்ச்சியாளர் அஜ்மல்கான் உள்பட ஏராளமான தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.
ஒரு கிலோ கல்நண்டு ரூ.1,200
1 கிலோ எடைகொண்ட ஒரு கல்நண்டு 1,200 ரூபாய் வரையிலும் விலை போவதால் இந்த முயற்சி மிகப்பெரிய வரவேற்பை கடல்வாழ் உயிரின வளர்ப்பு ஆர்வலர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. 3 சதவிகிதம்தான் கல்நண்டு குஞ்சுகள் பிழைக்கும் என்ற நிலையையும் மாற்றி 15 சதவிகிதம் குஞ்சுகள் பிழைத்து வளர்ந்து கை கொடுத்திருப்பதும் ஒரு புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.
நாகை மாவட்டம், சீர்காழி வட்டம் புளியந்துறை கிராமம், கல்நண்டு

வர்த்தகப் பற்றாக்குறை குறைந்தது



நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை ஜனவரி மாதத்தில் 50 சதவீதம் குறைந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 992 கோடி டாலராகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 1,897 கோடி டாலராக இருந்தது.
டிசம்பர் மாதத்தைவிட ஜனவரியில் வர்த்தகப் பற்றாக்குறை குறைந்துள்ளது. டிசம்பரில் அது 1,014 கோடி டாலராக இருந்தது.
செவ்வாய்க்கிழமை மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அட்டவணையில் இந்தியாவின் ஏற்றுமதி 3.79 சதவீதம் அதிகரித்து 2,675 கோடி டாலராக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஏற்றுமதி 2,578 கோடி டாலராக இருந்தது.
ஜனவரி மாதத்தில் இறக்குமதி 18 சதவீதம் குறைந்ததும் பற்றாக்குறை குறைவுக்கு முக்கியக் காரணமாகும். ஜனவரியில் இறக்குமதி செய்யப்பட்ட பொருளின் மதிப்பு 3,657 கோடி டாலராகும். தங்கம் இறக்குமதியில் 77 சதவீதம் குறைந்தது இதற்கு முக்கியக் காரணமாகும்.
தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி 77 சதவீதம் சரிந்து 172 கோடி டாலர் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இவை இரண்டின் இறக்குமதி 749 கோடி டாலராக இருந்ததாக வர்த்தகத்துறைச் செயலர் ராஜீவ் கெர் தெரிவித்தார்.
நடப்பு நிதி ஆண்டில் கடந்த 10 மாதங்களில் தங்கம், வெள்ளி இறக்குமதி மதிப்பு 2,900 கோடி டாலராகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் 4,670 கோடி டாலருக்கு தங்கம், வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இப்போது 37 சதவீத அளவுக்கு தங்கம், வெள்ளி இறக்குமதி குறைந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் (2013-14) ஏற்றுமதி 25,708 கோடி டாலராகும். முந்தைய ஆண்டு இது 24,319 கோடி டாலராக இருந்தது.
கடந்த 10 மாதங்களில் இறக்குமதி 37,704 கோடி டாலராக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இறக்குமதி 40,899 கோடி டாலராக இருந்தது. ஆண்டுக்காண்டு 7 சதவீத அளவுக்கு இறக்குமதி குறைந்து வந்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜனவரி வரை யிலான காலத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 11,995 கோடியாகும். முந்தைய ஆண்டில் இதே காலத்தில் 16,580 கோடி டாலராக இருந்தது.
ஜனவரி மாதத்தில் எண்ணெய் இறக்குமதி 1,318 கோடி டாலராகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் 1,455 கோடி டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி 13,814 கோடி டாலராகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இறக்குமதி அளவு 13,649 கோடி டாலராக இருந்தது.
எண்ணெய் அல்லாத பிற பொருள்கள் இறக்குமதி கடந்த ஜனவரி மாதத்தில் 2,348 கோடி டாலராகும். இது முந்தைய ஆண்டு இதே காலத்தைவிட 22 சதவீதம் குறைந்தது. முந்தைய ஆண்டில் இது 3,008 கோடி டாலராக இருந்தது.
ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் கச்சா எண்ணெய் அல்லாத பிற பொருள்களின் இறக்குமதி மதிப்பு 23,890 கோடி டாலராகும். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 12.3 சதவீதம் குறைவு. முந்தைய ஆண்டில் இது 27,249 கோடி டாலராக இருந்தது.

குளித்தலை விவசாயி அபாரம் சூரிய சக்தி மூலம் 20 ஏக்கரில் விவசாயம்


குளித்தலை:கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த நச்சலூரை சேர்ந்தவர் பாலசுந்தரம் (60), விவசாயி. இவருக்கு நச்சலூர் பகுதியில் 100 ஏக்கர் வயல் உள்ளது. அதில் கரும்பு, நெல், தென்னை சாகுபடி செய்துள்ளார். ஆற்று நீரை வாய்க்கால் வழியாக நிலம் முழுவதற்கும் பாய்ச்ச முடியாமல், மின் மோட்டாரை கொண்டு சாகுபடி செய்து வருகிறார். தற்போது மின்சாரம் தடைப்பட்டு வருவதால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெற சூரிய மின்சக்தி பேனல்களை அமைத்தார். 

அதன் மூலம் பகல் நேரங்களில் தடையற்ற மின்சாரம் கிடைத்தது. அதை கொண்டு தேவையான அளவுக்கு நிலங்களுக்கு நீர் பாய்ச்சி வருகிறார். குளித்தலை பகுதியில் சோலார் மூலம் மின்சக்தியை பெற்று வேளாண் சாகுபடி நடைபெறுவது இதுவே முதல் முறை. இதுகுறித்து பாலசுந்தரம் கூறுகையில், Ôமொத்த நிலத்தில் 20 ஏக்கரில் மட்டும் தென்னை மற்றும் கரும்பு சாகுபடி செய்துள்ளேன். தற்போது கூடுதல் மின்சாரம் தேவைப்படுவதால் 20 ஏக்கரில் உள்ள தென்னை, கரும்பு சாகுபடிக்கு ஆழ்குழாய் கிணற்றில் 10 ஹெச்.பி மோட்டார் பொருத்தி உள்ளேன். மோட்டாரை இயக்க தனியார் நிறுவனம் மூலம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள, 250 வாட்ஸ் திறன் கொண்ட சூரிய சக்தி பேனல்களை அமைத்தேன். இதன்மூலம் தற்போது பகலில் தடையின்றி தொடர்ந்து 8 மணி நேரம் மோட்டாரை இயக்கி  நிலத்துக்கு நீர் பாய்ச்சி வருகிறேன் என்றார்.

Tuesday, 11 February 2014

கார் கண்ணாடிகளில் பயன்படுத்தக்கூடிய புதிய ஜப்பானியத் தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம்

கார் கண்ணாடிகளில் பயன்படுத்தக்கூடிய புதிய ஜப்பானியத் தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம்
ஹைதராபாத்:கார்களில் பயணம் செய்வோர் தங்களை சூரியக் கதிர்களின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள கார் கண்ணாடிகளில் ஓட்டும் கறுப்புத் திரையை பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2012ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தடை செய்தது.

குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் வெய்யிலின் கடுமையிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் விதமாக ஒரு புதிய நானோ தொழில்நுட்பத்தை ஜப்பான் அறிமுகம் செய்துள்ளது.  'ஸ்டே கூல்'என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பம் இன்று ஹைதராபாத்தில் விற்பனையைத் தொடங்க உள்ளது.


நிறமற்ற திரவமான இதனை காரின் உட்புறத்திலிருந்து கண்ணாடிகளில் ஸ்ப்ரே செய்யும்போது அதிலுள்ள நானோ துகள்கள் கண்ணாடிகளில் இரண்டு மைக்ரான் அளவிற்கு படலமாகப் படிந்து காரின் உட்புறம் வெப்பம் தாக்காமல் பாதுகாக்கும்.


காரினுடைய ஏர்-கண்டிஷனரின் சக்தியையும் இந்தத் தொழில்நுட்பம் 30 சதவிகிதம் மிச்சப்படுத்தும். இதற்காகும் செலவு சதுர மீட்டருக்கு ரூ. 8000 என்பதால் இது அனைவருக்கும் கட்டுப்படியாகக் கூடிய ஒரு விலையாகவே இருக்கும் என்று உலகளவில் இதற்கான காப்புரிமையைப் பெற்றுள்ள பியுமின் குளோபல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஆஷ் ராய் தெரிவித்தார்.


இந்தியாவில் நடைபெற உள்ள 2014-ம் ஆண்டின் ஆட்டோ மொபைல் எக்ஸ்போ கண்காட்சியிலும் இந்த ஸ்டே கூல் தொழில்நுட்பம் இடம்பெறும் என்று அவர் கூறினார்.  இந்தத் தொழில்நுட்பம் ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பமாக ஜப்பானிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் மகேந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அங்கீகரிக்கப்பட்ட கார் சர்வீஸ் சென்டர்கள் மூலம் இந்நிறுவனம் தங்களின் வர்த்தக சேவையைத் தொடங்க உள்ளது.

Friday, 7 February 2014

நைஜீரியாவில் மனித இறைச்சி விற்பனை


நைஜீரியா:நைஜீரியாவில் அனம்பிரா மாகாணத்தில் ஒஸ்–ஒக்வுடு பகுதி உள்ளது. இங்குள்ள ஓட்டலில் மனித இறைச்சி விற்பனை செய்வதாக ஒனித்ஷா போலீசுக்கு தகவல் கிடைத்தது.
உடனே, அந்த ஓட்டலில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பிளாஸ்டிக் பையில் 2 மனித தலைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களும் இருந்தன. இது குறித்து ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, மனிதர்களை கொன்று இறைச்சி சமைத்து விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டனர். எனவே, ஓட்டல் உரிமையாளர், 6 பெண் ஊழியர்கள், 4 ஆண் ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.

Thursday, 6 February 2014

ரஷ்ய ஒலிம்பிக்கை சீர்குலைக்க டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருள் கடத்த சதி அமெரிக்கா எச்சரிக்கை



வாஷிங்டன்:ரஷ்யா செல்லும் விமானங்களில் டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருட்களை கடத்தி, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இதை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதையடுத்து ரஷ்யா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து ரஷ்யா செல்லும் விமானங்களில் டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருட்கள் கடத்தி ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளதாக அமெரிக்க உள்துறை அமைச்சக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவுக்கு விமானங்கள் இயக்கும் ஏர்லைன்ஸ் நிறுவ னங்களுக்கு அவசர தகவல் அனுப்பி உள்ளனர். அதில், ரஷ்யா செல்லும் விமானங்களில் டூத் பேஸ்ட் டியூப்களில் சிறுசிறு வெடிபொருள் கருவிகளை கடத்தி, விமானத்திலேயே அவற்றை அசம்பிள் செய்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருட்களை கடத்தி, சோச்சி நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியின் போது தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. எனவே, ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.

Tuesday, 4 February 2014

பாட்டி வைத்தியம்


வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தாலே தலைவலி நீங்கிவிடும். அல்லது வெங்காயத்தை பாதியாக அறுத்து நெற்றில் தேய்த் தாலும் தலைவலி குறையும். உள்ளங்கையில் தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக அந்த இடத்தில் நெய்யை தடவினால் எரிச்சல் அடங்கிவிடும். சீழ் பிடிக்காது. புளி ஏப்பம் நிற்க சமஅளவு சீரகமும், உப்பும் சேர்த்து வாயில் போட்டு மென்று தண்ணீர் குடிக்க வேண்டும். 

அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவற்றைக் குறைக்க மிளகு அருமருந்து. மிளகு சாப்பிடுவதால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. அது வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைச் சரிசெய்கிறது. ஆனால் அல்சர் உள்ளவர்கள் மிளகை அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. 
அப்போது புளி ஏப்ப பிரச்னை தீர்ந்துவிடும். ஆப்பிள் தோல் சீவாமல் சுத்தமாக கழுவி அப்படியே சாப்பிட்ட வேண்டும். ஆப்பிள் தோலில் வைட்டமின் ஏ உள்ளது.  பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும். கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும். தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.
சுக்கு, மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குண மாகும். பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும். இப்பகுதிக்கு சுவாரசியமான தகவல்கள், மருத்துவ குறிப்புகளை புகைப்படத்துடன் கரும்பு சோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும். விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.

Sunday, 2 February 2014

துபாயில் 'டிராம்' சேவை அறிமுகம்: நிலையங்களின் அருகில் 'ஏ.சி.' மேம்பாலங்கள்


துபாய்:செல்வ செழிப்புமிக்க வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாய் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கேளிக்கை பூங்காக்கள், பல்லடுக்கு வணிக வளாகங்கள், ஆகியவற்றை உருவாக்கி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

சமீபத்தில் கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுத்த சர்வதேச வர்த்தக திருவிழாவை வெற்றிகரமாக நடத்தியுள்ள துபாய் அரசு விரைவில் துபாய் நகரின் வீதிகளில் அதிநவீன 'டிராம்' (ரெயில்களை போல் தண்டவாளத்தின் மீது சாலைகளின் குறுக்கேயும் ஓடும்) வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

முதல்கட்டமாக 11 நிலையங்களின் வழியாக 10.6 கிலோ மீட்டர் தூரம் வரை டிராம் பாதைகள் அமைக்கப்பட்டு, இதற்கான சோதன ஓட்டமும் வெற்றிகரமாக நடந்துள்ளது. துபாய் மெரினா மால் நிலையத்தில் இருந்து போலீஸ் பயிற்சி கழகம் வரையிலான இந்த வழித்தடத்தில் 11 டிராம்கள் இயக்கப்பட உள்ளது.

படிப்படியாக இந்த தூரத்தை 17 நிலையங்களை கடந்து 14.6 கிலோ மீட்டராக நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், துபாய் மெரினா மால் நிலையத்தின் ஓரமாக பயணிகளின் வசதிக்காக புதிய மேம்பாலத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் முழுக்க, முழுக்க குளிர்சாதன வசதி கொண்டதாக அமைக்கப்படும்.

விரைவில் அனைத்து டிராம் நிலையங்களின் அருகிலும் குளிர்சாதன வசதி கொண்ட இத்தகைய மேம்பாலங்கள் உருவாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் முதல் மோனோ ரயில் சேவை மும்பையில் தொடங்கியது


உலகின் மிக பழமையான 83 வயது ஃப்ளமிங்கோ பறவை மரணம்


மெல்போர்ன்:ஃப்ளமிங்கோஸ் என்றழைக்கப்படும் பூநாரைகள், நாரை வகையை சேர்ந்த பறவையினமாகும். கரையோரப் பறவையாகிய இவ்வகை நாரைகள் ‘போனிகொப்டிரஸ்’ அபூர்வ இனத்தை சேர்ந்தவை.

இவ்வகை ஃப்ளமிங்கோ பறவையில் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் வனவிலங்கு காப்பகத்தில் வளர்த்து, பராமரிக்கப்பட்டு வந்தது. 1933-ம் ஆண்டு அடிலெய்ட் வனவிலங்கு காப்பகத்துக்கு இந்த பறவை வந்ததாக இங்குள்ள ஆவணங்களில் பதிவாகியுள்ளது.

எனினும், இது எந்த நாட்டில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டது? என்பது தொடர்பான தகவல்களுக்கான எந்த ஆதாரமும் காணப்படவில்லை. இரண்டு வயது குஞ்சாக இங்கு வந்த இந்த ஃப்ளமிங்கோ பறவை, ‘கிரேட்டர்’ என்ற பெயருடன் 80 ஆண்டுகளுக்கும் மேலாக பார்வையாளர்களை கவர்ந்து வந்தது.

கடந்த 2008-ம் ஆண்டு சில விஷமிகள் கிரேட்டரை அடித்து படுகாயப்படுத்திய போதிலும் வெகு வேகமாக குணமடைந்து, தனது ஒய்யார நடையழகால் அடிலெய்ட் வனவிலங்கு காப்பகத்துக்கு அழகு சேர்த்து வந்தது. சமீப காலமாக, முதுமையால் கண்பார்வை மங்கி, உடல் நலம் குன்றிய கிரேட்டர், சோர்வாக காணப்பட்டதையடுத்து வன விலங்கு காப்பக மருத்துவர் குழு சில நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

எனினும், சிகிச்சை பலனளிக்காததால் அதன் உடல்நிலை மேலும் மோசமடைந்து கிரேட்டர் துடிப்பதை பார்த்து பரிதாபப்பட்ட மருத்துவர்கள், கருணை அடிப்படையில் செயற்கை முறையில் இந்த உலகத்தை விட்டு விடையளித்து கிரேட்டரை வழியனுப்பி வைத்தனர்.

முதிர்ந்த வயதான கிரேட்டரை காப்பாற்ற வேறு சிகிச்சை முறைகள் ஏதுமில்லாததால் இந்த வருத்தத்துக்குரிய முடிவை எடுக்க நேர்ந்ததாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உலகிலேயே அதிக வயதான கிரேட்டரின் குஞ்சுகளில் ஒன்றான 'சில்லி' மட்டும் தற்போது அடிலெய்ட் வன விலங்கு காப்பகத்தை சுற்றிச் சுற்றி வருகிறது.

ஆஸ்திரேலியா நாட்டில் தற்போது எஞ்சியுள்ள ஒரே ஃப்ளமிங்கோ இனப் பறவை சில்லி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கிரேட்டர் ஒய்யார நடை பயின்ற குட்டையின் அருகே அதன் நினைவாக சிலை ஒன்றினை அமைக்க அடிலெய்ட் வன விலங்கு காப்பக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பெட்ரோலுக்கு விடையளிக்கும் நேரம் நெருங்கி விட்டது: 20 பைசாவில் ஒரு கிலோ மீட்டர் செல்லும் ‘கிவாமி பைக்’ அறிமுகம்

புதுடெல்லி:ஜப்பானின் பிரபல எலெக்ட்ரிக் (மின்சார சக்தி) பைக் தயாரிப்பு நிறுவனமான ‘டெர்ரா மோட்டார்ஸ்’ மின்சக்தியின் மூலம் இயங்கும் 1000 சி.சி. ஆற்றல் கொண்ட நவீனரக இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

‘கிவாமி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் பைக், ’லித்தியம் இயான்’ பேட்டரி மூலம் இயங்கக்கூடியது. 6 மணி நேரத்துக்கு இந்த பேட்டரியை ‘ரீ-சார்ஜ்’ செய்வதன் மூலம், மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகம் வரை, தொடர்ந்து 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு தங்குதடை இன்றி செல்ல முடியும்.

கடந்த ஆண்டில் மட்டும் ஜப்பானில் 20 ஆயிரம் ‘கிவாமி’ பைக்குகளை விற்று சாதனை படைத்துள்ள டெர்ரா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது இந்திய சந்தையிலும் கால் பதித்துள்ளது. இந்தியாவில் 30 கோடி ரூபாயை முதலீடு செய்து விற்பனையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் 'கிவாமி' பைக்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டோரு டோகுஷிகே தெரிவித்தார்.

'இந்த வாகனத்தின் பேட்டரியை சராசரி மொபைல் சார்ஜர் பாயின்டிலும் ரீ-சார்ஜ் செய்து கொள்ளலாம். முழுமையாக (6 மணி நேரம்) ரீ-சார்ஜ் செய்வதற்கு வெறும் 6 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும். இந்த ஆற்றலை கொண்டு 3 ஆயிரம் முறை வரை ‘ஸ்ட்ராட்’ செய்து சுமார் 200 கிலோ மீட்டர் வரை 'நான் ஸ்டாப்' ஆக பயணிக்கலாம்’ என்றும் இந்த பைக்கின் அறிமுக விழாவில் அவர் நிருபர்களிடம் கூறினார்.

முதல் கட்டமாக நேரடியாக ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யவும், 2015-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவிலேயே தயாரிப்பை தொடங்கவும் டெர்ரா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. நேரடியாக இறக்குமதி செய்யப்படும் ‘கிவாமி’ பைக்கின் அறிமுக விலை டெல்லி சந்தை நிலவரப்படி 18 லட்சம் ரூபாய் என்றும், இந்தியாவில் உற்பத்தி தொடங்கிய பிறகு இந்த விலை வெகுவாக குறையும் எனவும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் வாடகை வீட்டில் குடியிருப்போர் ஒரு யூனிட்டிற்கு 6 ரூபாய் வரை செலுத்துகிறார்கள். இந்த வகையில் கணக்கிட்டாலும், 6 யூனிட் ரீ-சார்ஜுக்கு 36 ரூபாய் செலவாகும். இந்த குறைந்த செலவில் 200 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம் என்ற அறிவிப்பை வைத்து பார்க்கப் போனால், ஒரு கிலோ மீட்டருக்கான எரிபொருள் செலவு வெறும் 18 பைசா தான் என்பது மகிழ்வூட்டும் செய்திதான் என்றாலும், 18 லட்சம் ரூபாய் விலை என்பது சாமானிய மக்களுக்கு சற்று அதிர்ச்சியளிக்கும் தகவலாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

எருமை மாடுகளை தேடி அலைந்த போலீஸ் அதிகாரிகள்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பண்ணை வீட்டில் இருந்து காணாமல் போன எருமை மாடுகளை போலீஸ் உயர் அதிகாரிகள் தேடி அலைந்து கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் சிறுபான்மை துறை அமைச்சராக இருப்பவர் அசம்கான். சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான இவர், அகிலேசுக்கு அடுத்த நிலையில் கருதப்படுபவர். ராம்பூர் அருகே பைசாபுரா கிராமத்தில் அசம்கானுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. அங்கு ஏராளமான எருமை மாடுகள் கட்டி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று 7 எருமை மாடுகளை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்த தகவல் அமைச்ச ருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அமைச்சரிடம் இருந்து ராம்பூர் எஸ்பி சாதனா கோஸ்வாமிக்கு உத்தரவு பறந்தது.

எஸ்பி தலைமையிலான போலீஸ் படை எருமையை தேடி விரைந்தது. மேலும் சில போலீஸ் அதிகாரிகளும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். எருமைகளை கண்டுபிடிக்க மோப்ப நாய் படையும் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் ஊருக்கு வெளியே வயல்களுக்கு நடுவில் உள்ள ஒரு இடத்தை சுற்றி சுற்றி வந்தது. அப்பகுதியில் நடத்திய சோதனையில் கிராமத்துக்கு சற்று தள்ளி இருந்த ஒரு கட்டிடத்தில் 7 எருமைக ளையும் மர்ம நபர்கள் சங்கிலியால் கட்டியிருப்பதை எஸ்பி சாதனா கோஸ்வாமியே கண்டுபிடித்தார். உடனடியாக தன்னுடன் வந்த போலீசாரிடம் எருமைகளை அவிழ்த்து கொண்டு வரும்படி உத்தரவிட்டார். ஒரு கும்பல் திட்டமிட்டு எருமைகளை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...