Wednesday, 18 December 2013

லோக்பால் வந்தால் பிரதமர், சிபிஐக்கு சிக்கல்..!




டெல்லி: ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க லோக்பால் மசோதா, பெரும்பாலான கட்சிகள் முன்வைத்த திருத்தங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
அன்னா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து லோக்பால் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்தது. ஆனால் அந்த மசோதா வலுவானதாக இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.
தற்போது வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி ஹசாரே சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த நிலையில் மத்திய அரசும் முந்தைய லோக்பால் மசோதாவில் திருத்தங்களை மேற்கொண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. வரலாற்று சிறப்புமிக்க மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.

Friday, 8 November 2013

6 மாத குடும்பப் பஞ்சாயத்தை அரை மணி நேரத்தில் தீர்த்த நித்தியானந்தா

\\\\


Click Hereதந்தி டிவியில் சனிக்கிழமை இரவில் சுவாமி நித்தியானந்தா, நித்ய தர்மம் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். கோர்ட், கேஸ் என்று நித்தியானந்தாவுக்கே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன.. ஆனால் அதையெல்லாம் தாண்டி, இப்போது. பிற குடும்பங்களிடையே ஏற்படும் பிரச்சனைகளை கேட்டு ‘தீர்வு' வழங்கி வருகின்றார். கணவன் மனைவி பிரச்சினை, பிள்ளைகளை ஒதுக்கும் பெற்றோர்கள் என பல பிரச்சினைகளை கேட்டு தீர்வு சொல்கிறார்.Click Here

Thursday, 7 November 2013

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் மீண்டும் கலவரம்

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் மீண்டும் கலவரம்


முசாஃபர்நகர்: உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர் நகர் அருகே ஷாபூர் நகரில் இர்பான் என்ற வணிகர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்துள்ளது. 
அண்மையில் முசாஃபர் நகரில் ஏற்பட்ட கலவரத்தில் 49 பேர் பலியாகினர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக முகாம்களுக்குச் சென்றனர். இந்நிலையில் முசாஃபர் நகர் அருகே ஷாபூர் நகரில் இர்பான் என்ற வர்த்தகர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் ஷாபூர் நகரில் வன்முறையில் ஈடுபட்டனர். அங்குள்ள வீடு, கடைகள், வாகனங்களுக்கு அவர்கள் தீ வைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வன்முறை தொடர்பாக சிலரை கைது செய்தனர். மேலும் வன்முறை நீடிக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வன்முறையை தடுக்க முசாஃபர்நகர் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள். Topics: muzaffarnagar, tension, வர்த்தகர், சுட்டுக் கொலை, பதற்றம் 

Wednesday, 6 November 2013

ராஞ்சி சிறைச்சாலையில் மாதம் 420 சம்பளத்தில் லாலுவுக்கு தோட்ட வேலை



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


ராஞ்சி:கால்நடை தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவுக்கு ராஞ்சி சிறையில் மாதம் ரூ. 420 சம்பளத்தில் தோட்ட வேலை வழங்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு லாலு பிரசாத் முதல்வராக இருந்த கால கட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதாக அரசு கருவூலங்களில் போலி பில்கள் கொடுக்கப்பட்டு ரூ. 900 கோடி மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ மொத்தம் 52 வழக்குகள் பதிவு செய்தது. இதில் லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் ஒரு வழக்கில் ராஞ்சி சிபிஐ கோர்ட் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. லாலு பிரசாத் உள்பட 45 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் சிபிஐ கோர்ட்டிலும் பின்னர்  ராஞ்சி ஐகோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில் லாலு சிறையில் ராஜ வாழ்க்கை வாழ்வதாக குற்றம் சாட்டப்பட்டது. தினந்தோறும் அவரை நூற்றுக்

கணக்கானவர்கள் சந்தித்து வந்தனர். சிறை விதிகளை மீறி இதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. லாலுவை பார்க்க கூட்டம் கூட்டமாக தொண்டர்கள் வருவதை தொடர்ந்து சிறைக்கு வெளியே பல பெட்டி கடைகள் முளைத்தன. லாலுவுக்காக சிறை விதிகள் மீறப்படுவதை எதிர்த்து பொது நல வழக்கு தொடரப்பட்டது. இது நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில் லாலுவுக்கு சிறையில் தோட்ட வேலை அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நாள் ஒன்றுக்கு அவருக்கு ரூ.14 சம்பளமாக வழங்கப்படுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். ராஞ்சி சிறை சுமார் 52 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பரந்த புல்வெளிகள், பூந்தோட்டம் மற்றும் காய்கறி தோட்டம் சிறைக்குள் இருக்கிறது. இந்த தோட்டங்களை பராமரிக்கும் பணி லாலுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை அவர் மிகவும் மகிழ்ச்சியாக செய்வதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. வாரத்தில் ஒருநாள் அவருக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. 

லாலு பிரசாத் கடந்த 2004 முதல் 2009 வரையிலான கால  கட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல், அகமதாபாத் ஐஐஎம் போன்ற பிரபலமான கல்லூரிகளில் எம்பிஏ மாணவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார். சிறைக்கைதிகளுக்கு வகுப்புகள் நடத்துவது போன்ற எளிமையான பணி கொடுக்காமல் கஷ்டமான தோட்ட வேலையை லாலுவுக்கு கொடுத்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சிறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், லாலுவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜார்கண்ட் போலீஸ் எச்சரித்தது. ராஞ்சி சிறையில் 30 சதவீத கைதிகள் கொடூர குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள். 10 சதவீதம் பேர் மாவோயிஸ்ட்கள். பாதுகாப்பு காரணங்களுக்காகவே கைதிகளுக்கு பாடம் நடத்தும் பணி கொடுக்கப்படவில்லை என்றார்.

Thursday, 31 October 2013

நாமக்கல் வரலாறு


நாமக்கல்: (Namakkal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இது ஒரு நகராட்சியாகும். நாமக்கல் நகராட்சி ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றதாகும். இது "குப்பை இல்லா நகரம்" என்னும் சிறப்பையும் பெற்றதாகும்]. 2011ல் நகராட்சியானது கொண்டிசெட்டிபட்டி, கொசவம்பட்டி, பெரியப்பட்டி, காவேட்டிப்பட்டி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், தும்மங்குறிச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலைப்பட்டி, சின்ன முதலைப்பட்டி ஊர்களை இணைத்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் நகர்மன்றங்களின் எண்ணிக்கை 30லிருந்து 39 ஆக உயர்ந்துவிட்டது.


வரலாறு

"நாமகிரி" என்று அழைக்கப்படும் 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. இவ்வூரின் பழைய பெயர் 'ஆரைக்கல்' என்பதாகும். இப்பெயர் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாறையின் மீது கோட்டை ஒன்று உள்ளது இதை ராமச்சந்திர நாயக்கர் கட்டியது என கருதப்படுகிறது, இதை மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா அமைத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது. பின்னாளில் திப்பு சுல்தான் இப்பாறைக் கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார் என்றும் நம்பப்படுகிறது. மகாத்மா காந்தி அவர்களின் பொதுக்கூட்டம் இப்பாறை அருகே நடைபெற்றது. அரிசனம் இயக்கத்திற்கு ஆதரவு வேண்டி 1934 பிப்ரவரி 14 அன்று நாமக்கலில் மகாத்மா காந்தி பேசிய கூட்டத்திற்கு 15,000 மக்கள் வந்திருந்தனர்
இப்பாறையின் ஓரு புறம் அரங்கநாத பெருமாள் குகைக்கோயில் உள்ளது, மறுபுறம் நரசிம்ம பெருமாள் குகைக்கோயில் உள்ளது. இக்கோயில்கள் கிபி 784ல் அதியமான் மரபைச்சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

Thursday, 24 October 2013

இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்

 Indira-Gandhi-Airport.jpg


இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் (Indira Gandhi International Airport, (ஐஏடிஏ: DELஐசிஏஓ: VIDP))இந்தியத் தேசிய தலைநகர் வலயத்தில் அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். புது தில்லியின் மையப் பகுதியிலிருந்து 16 kilometres (9.9 மை) தொலைவில் தென்மேற்கு தில்லியில் அமைந்துள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவாகப் பெயரிடப்பட்டுள்ள இந்த வானூர்தி நிலையம் இந்தியாவின் மிகவும் நெருக்கடிமிக்க வானூர்தி நிலையமாகும்.புதியதாக கட்டப்பட்டுள்ள மூன்றாம் முனையத்தின் செயலாக்கத்திற்கு பிறகு இதுவே இந்தியாவினதும் தெற்காசியாவினதும் மிகப் பெரிய வானூர்தி நிலையமாக விளங்குகிறது. தற்போது 46 மில்லியன் பயணிகளை கையாளுகின்ற இந்த நிலையம் 2030ஆம் ஆண்டில் 100 மில்லியன் பயணிகளை கையாளும் என மதிப்பிடப்படுகிறது. இதுவும் மும்பையின் சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையமும் இணைந்து தெற்கு ஆசியாவின் வான் போக்குவரத்தில் பாதியளவை கையாள்கின்றன.இதனை பன்னாட்டு இடைவழி மையமாக மாற்ற இதன் இயக்கு நிறுவனம் தில்லி பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனம் (DIAL) திட்டமிட்டுள்ளது.
5220 ஏக்கராப் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தில்லி வானூர்தி நிலையம் தேசிய தலைநகர் வலயத்திற்கான முதன்மை குடியியல் பறப்பியல் மையமாக விளங்குகிறது. முன்னதாக இந்திய வான்படையால் இயக்கப்பட்டு வந்த இந்த நிலையத்தின் மேலாண்மை இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையத்திற்கு மாற்றப்பட்டது.மே 2006 இல் இந்த ஆணையம் வானூர்தி நிலையத்தை புதுப்பித்து இயக்குவதற்காக தில்லி பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனத்திற்கு கொடுத்தது. இது ஜிஎம்ஆர் குழுமத்தின் கூட்டு நிறுவனமாகும்.
2011இல் உலகில் 34வது நெருக்கடிமிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆண்டில் 34,729,467 பயணிகள் பயணித்த இந்தப் போக்குவரத்து முந்தைய ஆண்டினதை விட 17.8% கூடுதலாகும்

Wednesday, 23 October 2013

ஜாதி பஞ்சாயத்துகளை தடை செய்ய மகாராஷ்டிர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு



மும்பை:மகாராஷ்டிர மாநிலத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் ஜாதி பஞ்சாயத்துகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும், அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் ரெய்காட் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கணேஷ் அட்மரம், ஜெகனாத் வகாரே ஆகியோர் ஊர் கட்டுப்பாட்டை மீறி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதை தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து அவர்கள் இருவரையும் ஊரைவிட்டு விலக்கி வைத்தது. இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். ஜாதி பஞ்சாயத்து வழங்கிய பல்வேறு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் மும்பை ஐகோர்ட் ஒன்றாக விசாரித்தது. ஐகோர்ட் நீதிபதிகள் தர்மதிகாரி, ஜி.எஸ்.பட்டேல் அடங்கிய பெஞ்ச்  நேற்று தீர்ப்பு அளித்தது. 

ஊரைவிட்டு விலக்கி வைப்பது, உறவினர் விசேஷங்களில் கலந்து கொள்ள தடை விதிப்பது, மொட்டை அடித்து கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் நடத்துவது போன்ற அநாகரீகமான தண்டனைகளை வழங்கும் ஜாதி பஞ்சாயத்துகளை உடனடியாக தடை செய்ய வேண்டும். இது தொடர்பாக மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=49510#sthash.pHI9cvX1.dpuf

Tuesday, 15 October 2013

பில்லி சூனியம் எடுப்பதாக கூறி 1.3 கோடி மோசடி செய்த பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை


புனே:பில்லி சூனியம் எடுப்பதாக கூறி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் மனைவியிடம் ரூ.1.3 கோடி மோசடி செய்த பெண் மந்திரவாதிக்கு புனே நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பிரமோத் தேவதார். இவரது மனைவி சுஜாதா. பிரமோத், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது பக்கத்து வீட்டில் ருச்சா கோட்சே என்ற பெண் வசித்தார். பில்லி சூனியம், செய்வினை போன்ற மாந்திரிக காரியங்கள் செய்து பணம் சம்பாதித்து வந்தார். ராணுவ அதிகாரி பிரமோத்தை பிடிக்காத சிலர் அவருக்கு பில்லி சூனியம் வைத்திருப்பதாக சுஜாதாவிடம் ருச்சா கோட்சே கூறினார். அவருக்கு வைக்கப்பட்ட பில்லி சூனியத்தை அகற்றி விட்டால் அவரை பிடித்த நோய் சரியாக விடும் என ஆசை காட்டினார். 

 பில்லி சூனியத்தை எடுப்பதற்காக ருச்சாவுக்கு கடந்த 2009ம் ஆண்டு மே 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை பல தவணைகளில் மொத்தமாக ரூ. 1.3 கோடி தொகையை சுஜாதா கொடுத்துள்ளார். ஆனால், அவருடைய கணவருக்கு பிடித்த நோய் சரியாகவில்லை. இந்நிலையில் 2009 டிசம்பர் மாதம் பிரமோத் இறந்து விட்டார். இதை தொடர்ந்து கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு சுஜாதா கேட்டார். இதற்காக ரூ.20 லட்சம் மற்றும் ரூ.40 லட்சம் காசோலைகளை ருச்சா கொடுத்தார். இது வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. இதை தொடர்ந்து, ருச்சா மீது சுஜாதா போலீசில் புகார் செய்தார்.

ருச்சா மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு புனே நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இதில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. பில்லி சூனியம் எடுப்பதாக கூறி, ரூ.1.3 கோடி மோசடி செய்த பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் அண்மையில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Saturday, 12 October 2013

ஒரு தலை காதல் விபரீதம்



எல்லா துறைகளிலும் பெண்கள் இப்போது எவ்வளவோ முன்னேறி விட்டனர். ஆணுக்கு பெண் சரிநிகர் சமம் என்பது இப்போதைய உலகில் உறுதி செய்யப்பட்டு விட்டது என்று நாம் சொல்லலாம். ஆனால், இன்னமும் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதையும், இது ஆணாதிக்க உலகம் என்பதையும் அவ்வப்போது நடக்கும் சம்பவங்கள் காட்டுகின்றன. அதிலும் ஒரு தலை காதலால் அப்பாவி பெண்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் ஆசிட் வீச்சால் உயிரிழந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வினோதினியின் தாயாரும் இப்போது தற்கொலை செய்து விட்டார்.    ஒருவரின் ஒருதலை காதலால் அப்பாவி பெண்ணின் குடும்பமே சரிந்து விட்டது.

காரைக்கால் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஜெயபாலன் (50). இவரது மனைவி சரஸ்வதி (44). இவர்களது மகள் வினோதினி (27), சாப்ட்வேர் இன்ஜினியர். கோட்டுச்சேரியை சேர்ந்த கான்ட்ராக்டர் சுரேஷ் (30) என்பவர் வினோதினியை ஒருதலையாக காதலித்தார். வினோதினிக்கு அவரை பிடிக்கவில்லை. அவரது காதலை ஏற்க மறுத்தார். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ், கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி வினோதினி முகத்தில் ஆசிட் வீசினார். இதில் கண்களை இழந்து படுகாயம் அடைந்த வினோதினி சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி உயிரிழந்தார். 

காரைக்கால் போலீசார் சுரேசை கைது செய்து காரைக்கால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவருக்கு கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. அதன்பின் ஜெயபாலனும், அவரது மனைவி சரஸ்வதியும்,  மயிலாடுதுறை அருகே திருக்கடையூர் தெற்கு வீதியில் உள்ள வீட்டில் வசித்தனர். ‘வினோதினியை காதலிப்பதாக கூறிய சுரேசை ஆரம்பத்திலேயே கண்டித்து இருந்தால் அவர் வினோதினியை கொலை செய்து இருக்க மாட்டார்’ என்று கணவரிடம் சரஸ்வதி கூறி புலம்பியிருக்கிறார். இதனால், கணவன், மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதங்கள் நடந்து மோதலை ஏற்படுத்தி விட்டது. ஒரு கட்டத்தில் மிகவும் மனமுடைந்த சரஸ்வதி விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன் தினம் இறந்தார். 

அப்பாவி பெண் வினோதினி நன்கு படித்து உயர்ந்த இடத்திற்கு வந்த நிலையில், அவருக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்படாத ஒருவரால் அவரது குடும்பமே சீர்குலைந்து விட்டது மிகவும் மோசமானது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க ஆரம்பத்திலேயே கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். -

Monday, 7 October 2013

கண் தானம் செய்ய உறுதி ஏற்போம்


கௌதமன்:கண் தானம் குறித்து சென்னை சங்கர நேத்ராயலா மருத்துவமனையின் மருத்துவ சமூகவியலாளர் அ.போ.இருங்கோவேள் கூறுவதாவது: நம் பிறப்புக்கும் வாழ்க்கைக்கும் அர்த்தம் இருப்பது போல மரணமும் அர்த்தம் உள்ளதாக அமைய வேண்டும். மரணத்துக்கு பின்னால் நாம் செய்யக்கூடிய புண்ணிய காரியம் கண் தானம். பார்வை இழப் பால் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும் நாடு இந்தியா. உலகில் பார்வை இழந்த 4 பேரில் ஒருவர் இந்தியராக இருக்கிறார். பார்வை இழப்புக்கு முதல் காரணம் கண் புரை, அடுத்தது கார்னியல் பார்வை கோளாறுகள். கார்னியா மாற்று ஆபரேஷன் செய்வதால் இந்த பாதிப்பை சரிசெய்ய முடியும். மரணம் அடைபவர்கள் கண்களை தானமாக வழங்கினால் கார்னியா மாற்று ஆபரேஷன் செய்து பலருக்கும் பார்வை கிடைக்க செய்ய முடியும். கண்ணாடி அணிபவர்கள், கேடராக்ட் ஆபரேஷன் செய்தவர்கள்கூட கண் தானம் செய்யலாம். மரணம் அடைந்த 6 மணி நேரத்துக்குள் கண்ணை அகற்ற வேண்டும்.

அப்போதுதான் ஆபரேஷனுக்கு பயன்படும். ஆபரேஷனுக்கு பயன்படாத கண்கள் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும். மரணம் அடைந்தவரின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை அருகே உள்ள கண் வங்கியை தொடர்பு கொண்டு தெரிவித்தால் உரிய நேரத்தில் மருத்துவர் குழு வருவார்கள். அதுவரை, இறந்தவரின் கண்களை மூடி அதன் மீது ஈரமான பஞ்சை வைப்பது நல்லது. தலைக்கு மேல் மின்விசிறி சுழல்வதை நிறுத்தி வைக்கலாம். இறந்தவரின் தலையை 2 தலையணை வைத்து உயர்த்தி வைக்கலாம். மருத்துவ குழுவினர் 20 முதல் 30 நிமிடத்தில் சுவடு தெரியாத வகையில் கண்களை பாதுகாப்பாக அகற்றிவிடுவார்கள். கண்தானம் வழங்க அனைவரும் உறுதி ஏற்போம். சென்னையில் கண் தானம் வழங்குவதற்கான போன் எண்கள்:
044-28281919, 28271616. இமெயில்: eyebank@snmail.org. முகவரி: சி யு ஷா கண் வங்கி, சங்கர நேத்ராலயா, 18, கல்லூரி சாலை, சென்னை-6.

Sunday, 22 September 2013

இலங்கை வடக்கு மாகாண தேர்தல் : தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி!


கொழும்பு: இலங்கை வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இக்கூட்டமைப்பின் தலைவர் விக்னேஸ்வரன் முதல்வராகிறார்.இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். கடைசியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கவுன்சிலுக்கு 1988ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அப்போதே விடுதலை புலிகள் பெரும்பாலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்ததால், அவர்களின் மிரட்டலை தொடர்ந்து ஒரே ஒரு அரசியல் கட்சி மட்டுமே அப்போதைய தேர்தலில் கலந்து கொண்டது. அதன்பின்னர் அங்கு மாகாண கவுன்சில் தேர்தலே நடக்கவில்லை.

இந்நிலையில், 2009ம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பை முழுமையாக இலங்கை ராணுவம் ஒழித்தது. பல ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போரும் முடிவுக்கு வந்தது. அதன்பின், வடக்கு மாகாணத்தில் முறைப்படி தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை நிலை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தன. தன் மீதான குற்றச்சாட்டுகளை பின்தள்ளவும், வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தி சர்வதேச அரங்கில் இலங்கை மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்கவும் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்த அதிபர் ராஜபக்சே முடிவு செய்தார். அதன்படி வடக்கு, வடமேற்கு, மத்திய மாகாணங்களில் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

வடக்கு மாகாணத்தில் உள்ள 36 இடங்களுக்கு 906 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாகாண சபைகளுக்கு 142 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை மொத்தம் 43 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த வடக்கு மாகாண தேர்தலை, உள்ளூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 2,000 பார்வையாளர்கள் கண்காணித்தனர். இந்நிலையில் அமைதியாக முறையில் நேற்று வாக்கு பதிவு நடந்தது. இந்தியா சார்பில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று வாக்கு பதிவை பார்வையிட்டார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத் தீவு, வவுனியா ஆகிய வடக்கு மாகாண மாவட்டங்களில் 850 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மக்கள் ஆர்வமுடன் வாக்கு சாவடிகளில் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மொத்தம் 65 சதவீத வாக்குகள் பதிவானது. தமிழ் மக்களின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில், முதல்வர் வேட்பாளராக முன்னாள் நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் போட்டியிட்டார். இந்த கூட்டமைப்பு கட்சிக்கு வீடு சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (யூ.பி.எப்.ஏ.) கட்சிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில்தான் நேரடி மோதல் இருந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று மாலை முதலே எண்ணப்பட்டன. இதில் யாழ்ப்பாணத்தில் 14 இடங்களிலும், முல்லைத்தீவில் 4 இடங்களிலும், கிளிநொச்சியில் 3 இடங்களிலும், மன்னாரில் 3 இடங்களிலும், வவுனியாவில் 4 இடங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 36 இடங்களில் 28ல் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றது. இதனால் மூன்றில் இரண்டு பங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தகுதி பெற்றது.அதிபர் ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 7 இடங்களில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. தவிர இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை கைப்பற்றியது. தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றியை தொடர்ந்து விக்னேஸ்வரன் முதல்வர் ஆகிறார்.

முதல்வராகும் நீதிபதி:

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முதல்வராக உள்ள சி.வி.விக்னேஸ்வரன், கடந்த 1939ம் ஆண்டு அக்டோபர் 23 தேதி கொழும்பில் பிறந்தார். சட்டம் பயின்று கடந்த 1979ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி நீதித் துறை பணியில் சேர்ந்தார். அதன் பின் மாவட்ட நீதிபதியாக, ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2001ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டார். கடந்த 2004ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது தந்தை கனக சபாபதியும் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்.

Ôமக்கள் எங்கள் பக்கம்Õ : தமிழ் தேசிய கட்சி மகிழ்ச்சி

தமிழ் தேசிய கட்சி எம்.பி.யும் செய்தித் தொடர்பாளருமான சுரேஷ் பிரேம சந்திரன் கூறியதாவது:
தேர்தலில் 28 கைப்பற்றி உள்ளோம். இதன் மூலம் போனஸ் இடங்களாக கூடுதலாக 2 இடங்கள் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும். உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணம் முழுவதும் அதிபர் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள், ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. ராணுவமும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தலில் செயல்பட்டது. எனினும், தேர்தலில் தமிழ் தேசிய கட்சி அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பது நிரூபணமாகி உள்ளது

Saturday, 21 September 2013

தள்ளாடும் வயது; தளராத உறுதி 110 வயது அண்ணன் 108 வயது தங்கை வேலை செய்து பிழைக்கும் ஆச்சரியம் - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=48545#sthash.xmv3jMoP.dpuf



வலங்கைமான்:திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா தெற்கு பட்டம் ஊராட்சி குப்பனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு 110 வயதாகிறது. தினமும் கூலி வேலைக்கு சென்று வருமானம் ஈட்டி வருகிறார். ஆரோக்கியமாக உள்ளார். அப்பகுதியில் முள்வேலி அமைக்கும் பணி மற்றும் வயல்களில் நாற்று பறிக்கும் பணிகளை செய்கிறார். கண் பார்வை நன்கு  உள்ளது. காது சரியாக கேட்பதில்லை. ‘இது நாள் வரை ஆஸ்பத்திரிக்கு போனதில்ல.. ஊசி போட்டதில்ல.. மருந்து, மாத்திரை சாப்பிட்டதில்லேஎன்கிறார் பொக்கை சிரிப்புடன்.

இவரது மனைவி ஆச்சியம்மாள் (85), மகன் சவுந்தரராஜன். இவருக்கு திருமணமாகி விட்டது.  மனைவி, மகன், மருமகள், பேரன், பேத்தி ஆகியோருடன் ரங்கசாமி சந்தோஷமாக வசிக்கிறார். இவரது தங்கை ரவுணம்மாளுக்கு 108 வயதாகிறது. கணவர்  இறந்து விட்டதால் ரங்கசாமியுடன் வசிக்கிறார். 10 ஆடுகளை வாங்கி மேய்த்து வருகிறார். விவசாய வேலைகளையும் கவனிக்கிறார். இவரும் ஆஸ்பத்திரிக்கே சென்றதில்லை என்பது ஆச்சரியம்.

Tuesday, 20 August 2013

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி 35 பேர் பலி பீகாரில் இன்று காலை சோகம்



பாட்னா:பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் ரயில் ஏறுவதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் மீது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். பீகார் மாநிலம், கஹாரியா மாவட்டத்தில் உள்ள கத்யானி ஸ்தன் என்ற ஊரில் புகழ்பெற்ற சிவன் கோயில் உள்ளது. நேற்று விடுமுறை என்பதால் இங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் இன்று காலை ஊர் திரும்புவதற்காக அங்குள்ள ரயில் நிலையத்திற்கு வந்தனர். அப்போது 2வது பிளாட்பாரத்தில் பாசஞ்சர் ரயில் நின்று கொண்டிருந்தது. அதில் ஏறுவதற்காக முதல் பிளாட்பாரத்திலிருந்து குதித்து தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

 அப்போது அந்த தண்டவாளத்தில், சாகர்சா பாட்னா ராஜ்ராணி எக்ஸ்பிரஸ் ரயில் மிக வேகமாக வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ரயில், தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் மீது மோதியது. இதில் பலர் உடல் சிதறி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் மரண ஓலமிட்டனர். ரயில் நிலையம் முழுவதும் பரபரப்பானது. இதற்கிடையே, எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் தண்டவாளத்தை கடப்பதை கவனிக்காமல் வேகமாக வந்த அந்த ரயிலின் டிரைவர் மீது கோபமடைந்த பயணிகள், அவரை இன்ஜின் பெட்டியிலிருந்து வெளியே பிடித்து இழுத்தனர். அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். ரயில் நிலைய அதிகாரிகள் தலையிட்டு அவரை மீட்டனர். இருப்பினும் ஆத்திரம் தீராத பயணிகள் அவர்களை சிறைபிடித்தனர்.

இந்நிலையில், பயணிகள் பலியான தகவல் அறிந்த உள்ளூர் போலீசாரும், மீட்பு படையினரும் விரைந்து வந்தனர். வன்முறை கூட்டத்தை சமாதானப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த விபத்தில் 35 பேர் வரை உயரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும், இன்னும் முழு விவரம் வெளிவரவில்லை. விபத்து பற்றி ரயில்வே தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

Monday, 19 August 2013

செவ்வாய் கிரகத்துக்கு பயணம் 1800 இந்தியர்கள் முன்பதிவு



மும்பை: அறிவியல் வளர, வளர மனிதர்களின் சாதனைகளும் வளர்ந்தபடியே உள்ளன. மனிதர்கள் விரைவிலேயே பூமியைவிட்டு வெளியே வேற்று கிரகங்களில் வசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு விடும் என்று பெரும்பாலானோர் நம்புகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இப்போதே நிலாவுக்கு பயணத் திட்டம், நிலாவில் நிலம் வாங்கும் திட்டம், செவ்வாய் பயணத் திட்டம் என இணையதளங்களில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் ஏராளமான ஆர்வலர்கள் இந்த திட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நெதர்லாந்தை சேர்ந்த மார்ஸ் ஒன் என்ற நிறுவனம் 2020ல் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கு பயண திட்டங்களை வடிவமைத்துள்ளது. இதையடுத்து செவ்வாய் கிரகத்துக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவு கட்டணம் 7 டாலர் என அறிவித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 1 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்தியர்கள் சிலரும் செவ்வாய் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த மே மாதம் இந்த திட்டத்தில் வெறும் 5 இந்தியர்கள் மட்டுமே முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால் ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Thursday, 11 July 2013

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியுமா? மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

கிணத்துக்கடவு: கோவை அருகே செட்டிக்காபாளையத்தில் அர்ஜூன் பொறியியல் கல்லூரி திறப்பு விழா நேற்று நடந்தது.  கல்லூரி தலைவர் சூர்யநாராயணன் தலைமை தாங்கினார். முதல்வர் விஜயராகவன் முன்னிலை வகித்தார். செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:

சந்திராயன் விண்கலம் ஒன்றை செலுத்துவதற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் 69 விண்கலங்களை விண்ணில் செலுத்தின. சந்திரனில் தண்ணீர் இருக்கிறதா? என்று ஆராய்ந்து வந்தன. அவர்களால்  சந்திரனில் தண்ணீர் இருப்பதை கண்டறிய முடியவில்லை.

இந்நிலையில் உலக அளவில் 70வதாக சந்திராயன்&1 விண்கலத்தை சந்திரனில் ஆராய்ச்சி செய்ய இந்தியா அனுப்பியது. அங்கு தண்ணீர் இருப்பதை சந்திராயன் &1  விண்கலம் கண்டறிந்து இந்தியாவுக்கு தகவல்களை அளித்தது. இதனால் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மீது மற்ற நாடுகளின் பார்வை திரும்பியுள்ளது.

43 ஆண்டுகளாக தொடர்ந்து சந்திரனுக்கு விண்கலத்தை ஆய்வுக்காக செலுத்தி வந்த அமெரிக்கா, சந்திராயன் கண்டறிந்ததை மீண்டும் ஒரு விண்கலம் அனுப்பி அது உண்மை என நிரூபித்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் இந்தியாவுக்கு சந்திராயன் பெருமையை சேர்த்துள்ளது.  அந்த விண்கலத்திற்கு திட்ட இயக்குனராக பணியாற்றியது பெருமையளிக்கிறது.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியுமா என்று ஆராய்ந்து வருகிறோம். விரைவில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பப்படுகிறது. அதற்கான பணிகள் நடக்கிறது. 2 அல்லது 3ம் தலை முறைக்குள் சந்திரன், செவ்வாய் கிரகங்களில் இந்தியர்கள் குடியேறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது. இவ்வாறு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

Wednesday, 12 June 2013

கொலையை தூண்டும் பேராசை எண்ணம்




தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை அடுத்து, நகைக்கு ஆசைப்பட்டு செயின் பறிக்கும் சம்பவங்களும், கொலைகளும் அதிகம் நடந்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் பெரும்பாலும் திருடர்களும் கொள்ளையர்களும்தான் ஈடுபட்டு வந்தனர். தற்போது, உறவினர்களும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். மதுரை அருகே நகைக்காக மாமியாரை கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்திருக்கிறார் மருமகள். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை அருகே உள்ள திருநகரை சேர்ந்தவர் குமராண்டி. இவரது மனைவி முத்துப்பிள்ளை. 65 வயது மூதாட்டி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குமராண்டியை விட்டு பிரிந்த முத்துப்பிள்ளை, விளாச்சேரியில் தனியாக வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்தார். தனது நகைகளை விளாச்சேரியிலுள்ள வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்தார். லாக்கர் சாவியை தனது கழுத்தில் அணிந்திருக்கும் செயின்களுடன் சேர்த்து தொங்க விட்டிருப்பார். இவர், தனது  வீட்டில் கயிறால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். நகைக்காக இவரை மர்மநபர்கள் கொலை செய்ததாக சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையே, முத்துப்பிள்ளையின் தங்கை தாழைபேச்சி, மருமகள் ராஜேஸ்வரி மீது சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் புகார் கொடுத்தார். திருநகர் போலீசார் முத்துப்பிள்ளை உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனை அனுப்பினர். மருமகள் ராஜேஸ்வரியிடம் நடத்திய விசாரணையில், நகைகளுக்கு ஆசைப்பட்டு எனது மாமியார் முத்துப்பிள்ளையை கொல்ல திட்டம் தீட்டினேன். அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தேன். அதை குடித்து மயங்கிய அவரின் கழுத்தை கயிறால் இறுக்கி கொன்றேன் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீசார் ராஜேஸ்வரியை கைது செய்தனர்.

செலவு அதிகமாக இருக்கிறது, ஆனால் போதுமான வருமானம் இல்லாத நிலை. இதுதான் அடுத்தவரின் பொருளுக்கு ஆசைப்பட வைக்கிறது. யாருக்கு தெரியப் போகிறது என்ற தைரியத்தில் தப்பான வழிகளில் ஈடுபடுகின்றனர். திருட்டில் ஆரம்பிக்கும் இந்த தீய பழக்கம், கொலை செய்யவும் துணிச்சலை கொடுத்து விடுகிறது. அப்போது உறவினராச்சே என்றுகூட பார்ப்பதில்லை. ஆசை கண்ணை மறைத்து விடுகிறது. அந்த ஆசையே அவர்களை பாவத்தில் தள்ளி விடுகிறது. சிக்கிக் கொள்ளும்போது, தீராத பழியுடன் சிறைக்குப் போக நேரிடுகிறது. ஆசையை வென்றால் ஆபத்தில்லை.         TAMILMURASU.ORG

அரசு நிலங்களை ஆக்கிரமித்தால் ‘குண்டாஸ்’ ச.சட்டநாதன்

சென்னை:அரசு நிலங்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்கிறது.  பல்வேறு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அளித்துள்ள பரிந்துரையை ஏற்ற தமிழக அரசு, சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடிப்பதற்கான செலவையும், ஆக்கிரமிப்பு நபரிடமே வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகவிருக்கிறது.பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடியிருப்புகள் பெருகாததால், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு இடங்கள், மேய்க்கால் புறம்போக்கு, கைவேலி புறம்போக்கு போன்ற புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி குடியிருந்து வருகின்றனர். இதில் ஏரி புறம்போக்குகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து பட்டா வழங்கப்பட்டது. மற்ற புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் அரசின் புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகள் பெருகியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

அரசு நிலங்களில் பெரிய அளவில் வீடுகளை கட்டி எந்த அச்சமுமின்றி ஆக்கிரமிப்பாளர்கள் வசித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பில் வீடு கட்டும்போது ஏரி போன்ற நீராதாரங்களுக்கு நீர் செல்லும் வழிகளை அடைத்து விட்டனர். இதனால் நீர்நிலைகளில் மழை நீர் சேரவில்லை. மேலும் புறம்போக்கில் வசிப்பவர்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

இதையடுத்து ஆக்கிரமிப்பில் வசிப்பவர்களை அப்புறப்படுத்தவும், சம்பந்தப்பட்ட இடத்தை அரசுத்துறை பொறுப்பில் பாதுகாக்கவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதே வகையில் காஞ்சிபுரம் கலெக்டர் சித்திரசேனன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் சென்னையையொட்டிய காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளில் ஆய்வு நடத்தியபோது 160 ஏக்கர் பரப்பிலான அரசு நிலங்கள் தனியாரால் ஆக்ரமிக்கப்பட்டு வீடுகள் மற்றும் மனைகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நிர்வாகத்தினர் முதல் கட்டமாக 15 ஏக்கரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை பொக்லைன் மூலம் இடித்து தள்ளி இடத்தை மீட்டனர். இந்த இடத்தின் மதிப்பு ரூ.100 கோடி. மீதமுள்ள ஆக்கிர மிப்புகளை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் சென்னை மற்றும் சென்னையையொட்டிய இதர மாவட்ட எல்லைகளில் ஓடும் கூவம், பக்கிங்காம், அடையாறு, கொசஸ்தலையாறு போன்ற ஆறுகளின் கரைகளிலும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவரங்களும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. இதை யடுத்து நீர் நிலைகளையொட்டிய ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியிலும் மாவட்ட நிர்வாகத்தி னர் மற்றும் வருவாய்த்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் சில சிரமங்கள் ஏற்பட்ட நிலையில் இது குறித்து பல்வேறு மாவட்டங்களில் ஆட்சித்தலைவர்கள், தமிழக அரசுக்கு பரிந்துரைகளை அனுப்பினர். அந்த பரிந்துரைகளில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டுவோர், அரசு நிலங்களை ஆக்ரமித்து நீர் ஆதாரங்களுக்கு நீர் செல்வதை தடுப்போர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். ஆக்கிரமிப்பில் இருந்து இடிக்கப்படும் கட்டிடங்களுக்கான இடிப்பு செலவை சம்பந்தப்பட்ட நபரிடமே வசூலிக்கலாம் என்று பரிந்துரைத்தனர்.இந்த பரிந்துரைகளை பெற்ற தமிழக அரசு விரைவில் இதற்கான அறிவிப்புகளை வெளியிட உள்ளது. வருங்காலத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமிப்போர் மீது குண்டாஸ் பாயும் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, 17 May 2013

பாகிஸ்தான் தேர்தலில் ஆச்சரியம் ! வாக்காளர்களை விட வாக்கு வாக்கு பதிவு அதிகம்


இஸ்லாமாபாத்: கடந்த 11ம் தேதி பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பிரதமராக 3வது முறை நவாஸ் பதவியேற்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 8,119 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 49 சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட, வாக்குப் பதிவு அதிகமாக நடந்துள்ளது. இதனால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்தலின் போது கள்ள வாக்கு பதிவு செய்யப்பட்டது, பல வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டன போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இந்நிலையில் அதிக வாக்குகள் பதிவானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பஞ்சாபில் 32 வாக்குச் சாவடிகள், சிந்துவில் 10, கைபர் பக்துன்கவா நகரில் 6 மற்றும் பலுசிஸ்தானில் ஒரு வாக்குச் சாவடிகளில் அளவுக்கதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளன. ஒராங்கி, மாடல் காலனி, மலீர் காலனி, ஷா பைசல் காலனி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில்தான் இதுபோல் முறைகேடு நடந்துள்ளது.

ஒரங்கி நகரில் ஒரு வாக்குச் சாவடியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 1,349. ஆனால், பதிவான வாக்குகள் 2,508. இதே நகரில் மற்றொரு வாக்குச் சாவடியில் வாக்காளர் எண்ணிக்கை 1,230. ஆனால், பதிவான வாக்குகள் 1,4,84. இப்படி 49 சாவடிகளில் அளவுக்கதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் புகார் : ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்கள் கைது




புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் புகாரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்களை டெல்லி போலீசார் நேற்று இரவில் அதிரடியாக கைது செய்தனர். அவர்களுடன் 7 புக்கிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎல் டி&20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்  சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் என 9 அணிகள் விளையாடி வருகின்றன. தற்போது இந்த அணிக்கு இடையே லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதுவரை நடைபெற்ற போட்டிகள் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் முதல் இடத்திலும், சென்னை சூப்பர்கிங்ஸ் 2ம் இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 3ம் இடத்திலும் உள்ளன. இந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. நேற்று மும்பையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில் மும்பை அணி வெற்றி பெற்றது.

 இந்நிலையில் மும்பையில் தங்கியிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்தை நேற்று இரவு டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவருடன் இந்த அணியை சேர்ந்த அஜித் சந்த்லியா மற்றும் அங்கீத் சவான் ஆகியோரையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர்கள் இன்று டெல்லி கொண்டு வரப்படுகிறார்கள். அவர்களுடன் 7 புக்கிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  முன்னதாக டெல்லியில் 3 புக்கிகளையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

ஸ்பாட் பிக்சிங் புகார் அடிப்படையில் ஸ்ரீசாந்த் மற்றும் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீசாந்த் இந்திய கிரிக்கெட் அணி சார்பாக 53 ஒரு நாள் போட்டிகளிலும், 27 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். சந்த்லியா, அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். சவான், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர். சந்த்லியா இதற்கு முன்பு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். சவான், மும்பை அணிக்காக விளையாடி இருக்கிறார். தற்போது இவர்கள் மூவரும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகின்றனர்.

ஸ்பாட் பிக்சிங் என்பது ஒரு போட்டியில் எத்தனை நோ பால், எத்தனை ஒயிட் பால் என்பதை தீர்மானிக்கும் சூதாட்டம் ஆகும். வீரர்கள் ஒத்துழைப்புடன் புக்கிகள் இதனை தீர்மானித்து அதன் அடிப்படையில் சூதாட்டம் நடத்துவார்கள். புக்கிகளுடன் ஒத்துழைக்கும் வீரர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பாட் பிக்சிங் புகாரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 3 வீரர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐபிஎல் போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், வீரர்கள் கைதாகியிருக்கும் சம்பவம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவிப்பு

ஸ்பாட் பிக்சிங் புகாரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த 3 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஸ்பாட் பிக்சிங் புகார் தொடர்பாக எங்கள் அணியை சேர்ந்த 3 வீரர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. முழு விவரங்கள் எங்களுக்கு தெரியவில்லை. எதையும் உறுதி செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். இதுதொடர்பாக பிசிசிஐயுடன் பேசி வருகிறோம். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் கைது செய்யப்பட்டுள்ள 3 வீரர்களையும் போட்டியில் விளையாட உடனடியாக தடை செய்ய ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Saturday, 6 April 2013

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு 10 சதவீத வீடு, நிலம் ஒதுக்கீடு


வாஷிங்டன்: வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பஞ்சாப் மாநில அரசு 10 சதவீதம் வீடு மற்றும் நிலம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்கு அமெரிக்க பஞ்சாபி அசோசியேஷன் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வட அமெரிக்க பஞ்சாபி அசோசியேஷனை சேர்ந்த சாட்நாம் சிங் சாகல் கூறியதாவது:
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு நிலம் வழங்குவது குறித்து, பஞ்சாப் அரசு நல்ல முடிவை எடுத்துள்ளது. பஞ்சாப் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் நேற்று இந்த திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தை அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி வீடு, நிலம் வழங்க வேண்டும். நியாயமான அடிப்படையில் நீதியை நிலைநாட்டும் வகையில் நிலம், வீடு வழங்க வேண்டும்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் குடும்பத்தினர் அவர்களது சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க அரசு தேவையான உதவி செய்யவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இவர்களுக்கு மாநில அரசு நிலம், வீடு வழங்குவது மட்டும் முக்கியம் அல்ல, அதை பாதுகாக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவேண்டும்.
இவ்வாறு சாட்நாம் சிங் கூறினார்.

1 நாளுக்கு 1 லட்சம் சம்பளம் வாங்கும் குழந்தை நட்சத்திரம்


சென்னை: ‘சித்திரையில் நிலாச்சோறுÕ என்ற படத்தில் நடிக்க 1 நாளைக்கு ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கி நடித்தார் குழந்தை நட்சத்திரம் சாரா.
‘பயணங்கள் முடிவதில்லை‘, ‘வைதேகி காத்திருந்தாள்‘, ‘ராஜாதிராஜா‘ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஆர்.சுந்தர்ராஜன். 12 வருடங்களுக்கு பிறகு தற்போது ‘சித்திரையில் நிலாச்சோறு‘ என்ற படத்தை இயக்கி உள்ளார். அவர் கூறியதாவது:
சித்ரா பவுர்ணமியன்று வெட்டவெளியில் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிடும் வழக்கம் பல கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. அப்படியொரு தினத்தன்று எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது அது என்ன என்பதுடன், அம்மாவை இழந்த ஒரு  பெண் குழந்தையை தந்தை எப்படி கஷ்டப்பட்டு வளர்க்கிறார் என்பது கதையின் கரு. மலையாளத்தில் ‘ஆரஞ்ச்‘ படத்தில் நடித்த பிரகாஷ் ஹீரோ. ‘பேராண்மை‘ வசுந்தரா ஹீரோயின். ‘தெய்வத்திருமகள்‘ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு நடிக்க தெரிந்த குழந்தை வேண்டும் என்பதற்காகவே சாராவை அழைத்து வந்தோம். 1 நாளைக்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் தர வேண்டும் என்று அவரது பெற்றோர் கேட்டனர். அதற்கு சம்மதித்தோம். சம்பளம் கொடுத்ததற்கு நிறைவை தரும் வகையில் சாரா நடித்திருக்கிறார். பூமிகா, அபிதா, கோவை சரளா, ராதாரவி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசை. ராஜராஜன் ஒளிப்பதிவு. முருகேசன், பழனிசாமி, பாலசுப்ரமணியன் தயாரிப்பு.

Monday, 11 March 2013

2 ரகசிய கேமராவில் உருவம் பதிவு : ஐதராபாத்தில் குண்டு வைத்தவன் அடையாளம் கண்டுபிடிப்பு


ஐதராபாத்: ஐதராபாத்தில் குண்டுவெடிப்பு தாக்குதலில் சந்தேகத்துக்கு இடமான ஒருவரின் உருவம் 2 ரகசிய கேமராக்களில் பதிவாகி இருப்பதாக ஆந்திர டிஜிபி தினேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திர தலைநகர் ஐதராபாத்தின் தில்சுக் நகரில் கடந்த மாதம் 21ம் தேதி 2 இடங்களில் அடுத்தடுத்து பயங்கர குண்டுகள் வெடித்து சிதறின. முதல் குண்டு கோனார்க் தியேட்டர் அருகிலும் 2வது குண்டு வெங்கடாத்ரி தியேட்டர் அருகிலும் வெடித்தது. சைக்கிளில் இந்த குண்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த குண்டு வெடிப்பில் 17 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் சதி இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கு விசாரணை ஆந்திர போலீசிடம் இருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது.

டெல்லி சிறையில் உள்ள இந்திய முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 2 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு அவர்களை கொண்டு வந்து விசாரித்தனர். இதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில், குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் உள்ள ரகசிய கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆந்திர போலீசார் ஆய்வு செய்து வந்தனர். இதில் கோனார்க் தியேட்டர் அருகே உள்ள டிராபிக் சிக்னலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சந்தேகக்கு இடமான வகையில் சைக்கிளை ஒருவர் தள்ளி கொண்டு செல்வது பதிவாகி உள்ளது. இதே நபர் அங்குள்ள கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகி உள்ளார். அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்புக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சந்தேகப்படும் சைக்கிள் ஆசாமியின் படத்தை விரைவில் வெளியிடுவார்கள் என ஆந்திர டிஜிபி தினேஷ் ரெட்டி செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.

Saturday, 9 March 2013

சீனா குற்றச்சாட்டு : பணம் கொடுத்து தீக்குளிக்க தூண்டுகிறார் தலாய் லாமா

பீஜிங்: சீனாவை கண்டித்து தீக்குளிக்க புத்தமத துறவிகளுக்கு பணம் கொடுத்து தலாய் லாமா தூண்டுகிறார். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தை விடுவித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று புத்தமதத்தினர் போராடி வருகின்றனர். புத்தமதத் தலைவர் தலாய் லாமா, திபெத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில், சீனாவின் அடுக்குமுறையை கண்டித்து இளம் புத்த துறவிகள் பலர் தொடர்ந்து தீக்குளித்து வருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து இதுவரை 100க்கும் மேற்பட்ட துறவிகள் தீக்குளித்து இறந்துள்ளனர்.

இதனால் சீனாவுக்கு நெருக்கடி முற்றி வருகிறது. இந்நிலையில், சீனா நியமித்துள்ள திபெத் தலைவர் பத்மா சோலிங் கூறியதாவது: தீக்குளிப்பது ஒழுக்க கேடானது. சட்ட விரோதமானது. மனிதாபிமானமற்ற செயல். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ அல்லது தீக்குளிப்பதை தடுத்து நிறுத்தவோ தலாய் லாமா போன்ற புத்தமதத் தலைவர்கள் முயற்சி எடுக்கவில்லை. அதற்கு பதில் பணம் கொடுத்து தீக்குளிக்க தூண்டி வருகின்றனர். இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இவ்வாறு பத்மா சோலிங் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவை கண்டித்து திபெத்தின் சிசுவான், கன்சு, கியுன்காய் பகுதிகளை சேர்ந்த துறவிகள்தான் பலர் தீக்குளித்து இறந்துள்ளனர்.

Tuesday, 26 February 2013

கால் விரல் மூட்டுகளில் 2 கி.மீ நடந்து 8ம் வகுப்பு மாணவன் உலக சாதனை : ரத்தம் கசிந்தும் மனம் தளரவில்லை கருத்துகளை தெரிவிக்க


கோவை: கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் சண்முகசுந்தரம் மகன் ஸ்ரீசைலேஷ்(14). குனியமுத்தூர் நிர்மல்மாதா பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். கால்விரல்களை மடக்கி மூட்டுகளில் நடக்கப்போவதாக அறிவித்தார். கோவை சுந்தராபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டப வளாகத்தில் நேற்று இந்த நிகழ்ச்சி நடந்தது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் வரை ஓய்வெடுக்கவில்லை. 10 நிமிடம் மட்டுமே ஓய்வு எடுத்த பின்னர் நடக்க ஆரம்பித்தார். அடுத்த 400 மீட்டர் நடக்கும் போது சோர்ந்தாலும் தளரவில்லை. 1600 மீட்டர் தூரத்தை எட்டிய போது கால் விரல்களில் ரத்தம் கசிந்தது. தொடர்ந்து மாணவர் நடப்பாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டது.
 மனம் தளராத ஸ்ரீசைலேஷ், 10 நிமிடம் ஓய்வெடுத்துக்கொண்டு கால்களில் பேண்டேஜ் துணிகளை சுற்றி மீதி தூரத்தையும் கடந்தார்.

ஒரு மணி நேரம் 2 வினாடிகளில்  சாதனையை முடித்தார். காலில் தொடர்ந்து ரத்தம் கசியவே சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். சாதனை நிகழ்ச்சியை எலைட் உலக சாதனை நிறுவனத்தின் ஆய்வாளர் ஸிரோன்வால் லால், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி(சிங்கப்பூர்) சேர்ந்த ஆய்வாளர் லாரன்ஜோ மைக்கேல் தாமஸ் ஆகியோர் நடுவர்களாக இருந்து ஆய்வு செய்து உலக சாதனை படைத்ததை உறுதிப்படுத்தினர். 14 வயதிற்குட்பட்டவர்களில் இதுபோன்ற சாதனையை யாரும் இதற்கு முன் செய்யவில்லை. மாணவனுக்கு வேளாண் துறை அமைச்சர் செ.தாமோதரன், நிர்மல்மாதா கான்வென்ட் பள்ளி முதல்வர் ரோஸ்லின் புல்லேலி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

Tuesday, 12 February 2013

பிலிம் சொருகினால் மாம்பழம் அழுகாது : நானோ டெக் ஆராய்ச்சி தீவிரம்

கோவை-: மாம்பழங்கள் கெடாமல் பாதுகாக்க நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி நடந்து வருகிறது என்று வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: உற்பத்தியாகும் மாம்பழங்களில் 30 சதவீதம் அழுகி வீணாகிவிடுகின்றன. நானோ தொழில்நுட்பம் மூலம் நானோ பிலிம்களை மாங்காய்களில் புகுத்தினால், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்குமா என்று தீவிர ஆராய்ச்சி நடந்து வருகிறது. மாம்பழங்களில் கூன் வண்டுகள் புகுவதை தடுக்க இந்திய அணுசக்தி ஆணையம் மூலம் ஆராய்ச்சி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. 

சிறு, குறு தானியங்களின் ஊட்டச்சத்துகளை அதிகரித்து தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் வினியோகிக்க கனடா ஆராய்ச்சி நிலையம், திட்டக்குழு ஆகியவை தமிழக அரசிடம் பரிந்துரைத்துள்ளது. இத்திட்டம் தற்போது தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மானாவாரி நிலங்களில் சிறுதானிய பயிர்களில் உற்பத்தியை அதிகரிக்க வேளாண் பல்கலை, கர்நாடக பல்கலை, எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி குழுமம் ஆய்வு செய்து வருகின்றன. தானியங்களில்  உமிநீக்கும் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை விவசாயிகளிடம் வரவேற்பு பெற்றுள்ளது. விரைவில் தமிழகத்திலும் இந்த இயந்திரம் அறிமுகப்படுத்தப்படும்.

Tuesday, 29 January 2013

வடகொரியாவில் பஞ்சம், பசி, பட்டினியால் விபரீதம் : குழந்தையை கொன்று வேகவைத்து தின்ற தந்தை






ஒசாகா: வடகொரியாவில் பட்டினியால் தவித்த தந்தை, தனது மகன்களை கொன்று அவர்களது உடல்களை வேகவைத்து சாப்பிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வடகொரியாவில் பஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், பட்டினியால் கிடக்கும் பலர் விபரீத முடிவுகளை எடுப்பதாகவும் ஏசியா பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் பிரபல சண்டே டைம்ஸ் பத்திரிகையிலும் வெளியாகியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: வடகொரியா ஏவுகணை சோதனை நடத்த அமெரிக்கா உள்பட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், அணு ஆயுத சோதனையிலும் வடகொரியா ஈடுபடுவதாக பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதனால், இந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும் பல இடங்களில் மக்கள் பட்டினியில் தவிப்பதாகவும் பல ஆண்டுகளாக பரபரப்பு செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், பட்டினியில் தவித்த ஒருவர் உணவுக்காக கல்லறையில் இருந்து பேரன் சடலத்தை தோண்டி எடுத்துள்ளார். இன்னொருவர் தனது குழந்தையை சாகடித்து வேகவைத்து சாப்பிட்டுள்ளார். இப்போது 2 குழந்தைகளை கொன்று சமைத்து சாப்பிட்ட ஒருவர் தூக்கிலிடப்பட்டுள்ளார் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகளை வடகொரிய தலைவர்கள் இதுவரை உறுதி செய்யவும் இல்லை, மறுக்கவும் இல்லை. குறிப்பாக வடகொரியாவின் ஹவாங்கே நகரில் விவசாயிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இதுபோல் நர மாமிசம் உண்ணும் சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளன.

இது நாடு முழுக்க பரவும் அபாயம் உள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் மீடியாக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. சர்வதேச மீடியாக்கள் அவ்வளவு எளிதில் செய்திகளை சேகரித்துவிட முடியாது. அதனால், உள்ளூர் மக்களையே பிரபல மீடியாக்கள், பத்திரிகைகள் நிருபர்கள் போல பயன்படுத்தி கொள்கின்றன. போலீசில் உள்ள இன்பார்மர்கள் போல உள்ளூர் மக்களில் சிலர் அவ்வப்போது செய்திகளை அளித்து வருகின்றனர். ஹவாங்கே பகுதியில் இருந்து செய்தி அளிக்கும் ஒருவர் கூறுகையில், என் கிராமத்தில் 2 குழந்தைகளை கொன்று சாப்பிட முயன்ற தந்தையை கடந்த மே மாதம் போலீசார் சுட்டுக் கொன்றனர் என்று தெரிவித்துள்ளார்.

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...