Wednesday, 13 December 2017

உடுமலை ஆணவக் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை: ஒருவருக்கு ஆயுள்; மூவரை விடுவித்து நீதிமன்றம் உத்தர

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிரடி உத்தரவிட்டது. மேலும், ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், மூவரை விடுவித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடுமலை அருகிலுள்ள மடத்துக்குளம் தாலுகாவுக்கு உள்பட்ட குமரலிங்கம், சாவடி வீதியைச் சேர்ந்தவர் வேலுசாமியின் மகன் சங்கர் (22). திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்தவர் கௌசல்யா (20). பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த நிலையில், இரு வேறு ஜாதிகளைச் சார்ந்த இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கௌசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், 2016 மார்ச் 13-ஆம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த இத் தம்பதியை, வாகனங்களில் வந்த ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியது. படுகாயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சங்கர் உயிரிழந்தார். சிகிச்சைக்குப் பிறகு கௌசல்யா வீடு திரும்பினார்.
இக்கொலை தொடர்பாக உடுமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தனிப் படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கில், பேருந்து நிலையம் அருகிலுள்ள கடை ஒன்றின் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மிகவும் உதவியாக இருந்தன.
இந்நிலையில், கௌசல்யாவின் தந்தையான திண்டுக்கல் மாவட்டம், பழனி, திருநகரைச் சேர்ந்த பி.சின்னசாமி (41), உடுமலையில் படித்து வந்த கல்லூரி மாணவரான பழனி, கரிகாரன்புதூரைச் சேர்ந்த பிரசன்னா (எ) வி.பிரசன்னகுமார் (20) ஆகியோர் நிலக்கோட்டை நீதிமன்றத்திலும், கௌசல்யாவின் தாய் சி.அன்னலட்சுமி (36) தேனி நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.
இதுதவிர, கௌசல்யாவின் மாமா, திண்டுக்கல், ஆர்.எம்.காலனியைச் சேர்ந்த பி.பாண்டிதுரை (50), பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பி.ஜெகதீசன் (32), பழனி, ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த எம்.மணிகண்டன் (26), திண்டுக்கல், செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பி.செல்வகுமார் (26), புதுப்பட்டி, பொன்மாந்தூரைச் சேர்ந்த பி. தமிழ் கலைவாணன் (25), வாணிவிலாஸ் இறக்கம் பகுதியைச் சேர்ந்த எம்.மதன் (எ) மைக்கேல் (26), புதுப்பட்டி, காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கே.ஸ்டீபன் தன்ராஜ் (24), பட்டிவீரன்பட்டி, இளங்கோவடிகள் தெருவைச் சேர்ந்த எம்.மணிகண்டன் (40) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது கூட்டு சதி, கொடூர ஆயுதங்களுடன் கலகம் செய்தல், கொலை, கொலை முயற்சி, வன்கொடுமைத் தடுப்பு சட்டப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
உடுமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கு, 2016 ஜூன் 8-ஆம் தேதிமுதல் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
6 பேருக்கு தூக்கு தண்டனை: வழக்கில் கைது செய்யப்பட்ட அன்னலட்சுமி, பாண்டிதுரை, பிரசன்னகுமார் ஆகிய மூவரைத் தவிர, மற்ற அனைவரையும் குற்றவாளிகள் என்று அறிவித்தார் நீதிபதி. அதையடுத்து, குற்றம் சுமத்தப்பட்ட கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், தமிழ் கலைவாணன், மைக்கேல் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 9-ஆவது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், அன்னலட்சுமி, பாண்டிதுரை, பிரசன்னகுமார் ஆகியோரை விடுதலை செய்தார். வழக்கில் மொத்தமாக ரூ. 11 லட்சத்து 95 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, அந்தப் பணத்தை கௌசல்யா, சங்கரின் தந்தை வேலுசாமி ஆகியோருக்கு நிவாரணமாக அளிக்கவும், அபராதம் செலுத்தத் தவறினால் குற்றவாளிகள் கூடுதல் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். தண்டனை வழங்கப்பட்ட அனைவருக்கும் தீர்ப்பு நகல் வழங்கப்பட்டு, கோவை மத்திய சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
நீதி கிடைத்துள்ளது

'எனது கணவர் சங்கர் சிந்திய ரத்தத்துக்கு நீதி கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன்' என்றார் கௌசல்யா.
உடுமலை சங்கர் கொலை வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து சங்கரின் மனைவி கௌசல்யா, உடுமலையை அடுத்துள்ள குமரலிங்கம் கிராமத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
'சங்கர் சிந்திய ரத்தத்துக்கான நீதிக்கு ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தேன். அந்த வகையில் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன். இந்தத் தீர்ப்பு ஜாதியக் கொலைகளுக்கு எச்சரிக்கையாக இருக்கும். அதிலும் அதிகபட்ச தண்டனையாக பெரும்பாலான குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு ஜாதி வெறியர்களுக்கும், கௌரவக் கொலை செய்பவர்களுக்கும் இனிமேல் அச்சத்தையும், மனத் தடையையும் ஏற்படுத்தும்.
வழக்கில் இருந்து அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வேன்'.

Saturday, 2 December 2017

உத்தரப்பிரதேசம் இந்தியாவின் பாதுகாப்பற்ற மாநிலம்

உத்தரப் பிரதேசத்தில் 16 மேயர் பதவிகளில், 14 இடங்களைக் கைப்பற்றிய மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது பி.ஜேபி. இதை விடுங்கள்... தேசியக் குற்றப்பிரிவு ஆணையம் 2016-ம் ஆண்டு நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டது. இதில், உத்தரப்பிரதேசம்தான் தேசத்தில் நடக்கும் 14 சதவிகிதக் குற்றங்களுக்குக் காரணமாகவுள்ளது என்ற தகவல் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது.
இந்தியாவில் 2016-ம் ஆண்டில் மட்டும் 2.6 சதவிகித குற்றங்கள் அதிகரித்துள்ளன. அந்த ஆண்டு 48,31,515 குற்றங்கள் நாடு முழுவதும் நடந்துள்ளன. இது, 2015-ம் ஆண்டைவிட 21,000 அதிகம்.
குற்றங்களில், கடத்தல் குற்றங்கள்தான் முதலிடத்தில் உள்ளன. 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடத்தல் குற்றங்கள் 6 சதவிகிதம் அதிகரித்துள்ளன. கொள்ளைக் குற்றங்கள் 11.85 சதவிகிதம் குறைந்துள்ளன. இந்தியாவில் 2016-ம் ஆண்டு மட்டும் 30,450 பேர் கொலை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் அதிக சொத்துக் குவிப்பு குற்றங்கள் நடைபெறும் நகரமாக டெல்லி உள்ளது. ஆள் கடத்தல் குற்றங்களில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. சிறப்பு வழக்குகள் சென்னையில் அதிகம் பதிவாகியுள்ளன.

உத்தரப்பிரதேசம் இந்தியாவின் பாதுகாப்பற்ற மாநிலம்:

உத்தரப்பிரதேசம்தான் இந்தியாவில் நடக்கும் குற்றங்களில் அதிக பங்கை வைத்துள்ளது. பின்வரும் குற்றங்களில் டாப் இடம் உத்தரப்பிரதேசத்துக்குத்தான்.
1. இந்தியாவில் சைபர் க்ரைம் குற்றங்கள் அதிக அளவில் நடைபெறும் மாநிலம் - 2,639 வழக்குகள்
2. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் அதிகம் உள்ள மாநிலம் - 4,954 வழக்குகள்
3. குழந்தைகள் அதிக அளவில் கடத்தப்படும் மாநிலம் - 9,657 வழக்குகள்
4. பெண்கள், கணவன் மற்றும் உறவினர்களால் பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்களில் 3-வது இடம் - 11,156 வழக்குகள்
5. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இந்திய அளவில் 2-வது இடம் - 4,816 வழக்குகள்
6. இந்தியாவில் அதிக அளவில் பெண்கள் கடத்தப்படும் மாநிலம் - 12,994 வழக்குகள்
7. பொதுவெளியில் பெண்கள் பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்களில் 2-வது இடம் - 11,335 வழக்குகள்
இப்படிப் பல குற்றங்களில் முதல் மூன்று இடங்களுக்குள் உத்தரப்பிரதேசம் உள்ளது. அதேபோல், இந்தியாவில் அதிக மதக்கலவரங்கள் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறுகின்றன. 2017-ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம்வரை மட்டும் மதக்கலவரங்கள் சிறியதும், பெரியதுமாய் 60 சம்பவங்கள் உ.பி-ல் நடைபெற்றுள்ளன. இதில், 16 பேர் இறந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில்தான் சில மாதங்களுக்கு முன்பு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் மருத்துவமனையில் இறந்தன. இந்தியாவில் நிறைய ஆழ்துளைக் கிணறு மரணங்கள் நடக்கும் மாநிலங்களிலும் உத்தரப்பிரதேசமே முதலிடம் வகிக்கிறது.

Lashkar-e-Taiba தலைவர் Hafiz Muhammad Saeed வீட்டுக் காவலில் இருந்து விடுவித்து பாகிஸ்தான் நீதிமன்றம்

மும்பையில் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா தலைவர் ஹஃபீஸ் சயீதை வீட்டுக் காவலில் இருந்து விடுவித்து பாகிஸ்தான் நீதிமன்றம், உத்தரவிட்டிருப்பது எந்தவித அதிர்ச்சியையோ, வியப்பையோ ஏற்படுத்தவில்லை. ஆரம்பம் முதலே அவரது கைதும், அவரை வீட்டுக் காவலில் வைத்திருந்ததும் வெறும் கண்துடைப்புதான் என்பது உலகத்துக்கே தெரியும்.
ஹஃபீஸ் சயீது மீது எந்தவொரு பயங்கரவாதக் குற்றச்சாட்டின் அடிப்படையிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. பொது ஒழுங்குக்குப் பங்கம் விளைவிக்க முயன்றார் என்கிற வலுவில்லாத குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவர்மீது குறிப்பிட்ட எந்தவிதக் குற்றச்சாட்டும் அரசால் முன்வைக்க முடியாததைக் காரணம் காட்டி, இப்போது பாகிஸ்தான் நீதிமன்ற நீதிபதிகள் அவரது நான்காண்டு வீட்டுக் காவலை விலக்கி இருக்கின்றனர்.
1990-இல் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பை உருவாக்கியதைத் தொடர்ந்து, பல்வேறு பயங்கரவாதச் செயல்களுக்கான திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றுவதிலேயே சயீதின் கவனம் முழுவதும் இருந்தது. 1993 முதல் இந்திய ராணுவத்தின் மீதும், பொதுமக்கள் மீதும் தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தியவர் ஹஃபீஸ் சயீது என்று அமெரிக்க உளவுத்துறையின் கோப்புகள் தெரிவிக்கின்றன. 2001 நாடாளுமன்றத் தாக்குதலுக்கும், 2006-இல் மும்பை ரயில் நிலையத்தில் நடந்த தொடர் வெடிகுண்டுத் தாக்குதலுக்கும் லஷ்கர்-ஏ-தொய்பா காரணமாக இருந்திருக்கிறது. 2001 டிசம்பர் 13 இந்திய நாடாளுமன்றத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, டிசம்பர் 21-ஆம் தேதி பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்ட ஹஃபீஸ் சயீது மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டார். இந்தியாவின் கடுமையான கண்டனத்தைத் தொடர்ந்து மே மாதம் கைது செய்யப்பட்டு, அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். 2006 மும்பை ரயில் நிலையத் தாக்குதலைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, லாகூர் உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 28-ஆம் தேதியே விடுதலை செய்யப்பட்டு விட்டார். அதே நாள் மீண்டும் கைது செய்யப்பட்டாலும், மீண்டும் நீதிமன்ற உத்தரவின்படி அக்டோபரில் வெளியில் வந்துவிட்டார்.
இப்படி ஹஃபீஸ் சயீது பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்படுவதும், நீதிமன்றம் அவரை விடுவிக்க உத்தரவிடுவதும் தொடர்கதை. இதன் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவமும், ராணுவத்தை அனுசரித்து நடக்கும் நீதித்துறையும் இயங்குகின்றன என்பதுதான் உண்மை. ஹஃபீஸ் சயீதை நீதிமன்றம் விடுவித்திருப்பதன் பின்னணியில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் கட்டுப்பாட்டில் உள்ள அரசியல் தலைமைக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் அதிகாரப் போட்டிதான் காரணம் என்றுகூடச் சொல்லலாம்.
ஹஃபீஸ் சயீதின் மீது வலுவான ஆதாரங்களுடன் குற்றச்சாட்டைப் பதிவு செய்யவோ, அதனடிப்படையில் அவரைக் கைது செய்யவோ முடியவில்லை என்பது, நவாஸ் ஷெரீபின் கரம் வலுவிழந்திருக்கிறது என்பதன் அறிகுறி. அதேபோல, நீதிமன்றம் சயீதை விடுவித்திருப்பது பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகரித்து வரும் செல்வாக்கை உணர்த்துகிறது.
நவாஸ் ஷெரீபின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சி இரண்டையுமே வலுவிழக்கச் செய்வது என்பதுதான் ராணுவத்தின் திட்டம். இவற்றிற்கு மாற்றாகப் பல சிறிய கட்சிகளை ராணுவம் மறைமுகமாக ஊக்குவித்து வருகிறது. கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் கட்சியும் அதில் ஒன்று. லஷ்கர்-ஏ-தொய்பாவையே ஓர் அரசியல் இயக்கமாக மாற்றும் திட்டத்துக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் ஆசி இருக்கிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கும் நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவால் விடுதலை செய்யப்பட்டிருக்கும். ஹஃபீஸ் சயீது தனது தீவிரவாத முகத்துக்கு மேல் அரசியல்வாதி முகமூடி அணிந்து கொண்டாலும் வியப்படையத் தேவையில்லை.
ஹஃபீஸ் சயீது தண்டிக்கப்பட்டால், பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது என்று பொருள். ராணுவத்தால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்படுபவைதான் லஷ்கர்-ஏ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள். இந்த அமைப்புகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதன் மூலம் தனது கட்டுப்பாட்டில் பாகிஸ்தானின் ஆட்சியாளர்களை வைத்துக் கொண்டிருக்கிறது அந்த நாட்டு ராணுவம். அதனால், ஹஃபீஸ் சயீது விடுவிக்கப்பட்டது எதிர்பாராததல்ல.
ஒவ்வொரு முறை ஹஃபீஸ் சயீது விடுவிக்கப்படும்போதும், அடுத்த சில வாரங்களில் எங்கேயாவது தீவிரவாதத் தாக்குதல் நடப்பது என்பது கடந்தகால அனுபவம். ஆப்கானிஸ்தானில் இந்தியாவால் நிறைவேற்றப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும்,
ஈரானில் இந்திய உதவியுடன் அமைக்கப்பட்டிருக்கும் சபாஹர் துறைமுகமும் தாக்குதலுக்கு ஆளாகாமல் பாதுகாப்பதில் நாம் கவனமாக இருந்தாக வேண்டும்.
ஹஃபீஸ் சயீது அரசியல் கட்சி தொடங்கி ஆட்சியையும் கைப்பற்றினால், பாகிஸ்தானில் இதுவரை அரசு ஆதரவுடன் பயங்கரவாதம் இருந்ததுபோய் வருங்காலத்தில் பயங்கரவாதிகளால் அரசு நடத்தப்படும் நிலைமை ஏற்படக்கூடும். அதுதான் கவலையாக இருக்கிறது!


2008 மும்பை தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க உள்துறை இவரை சர்வதேச பயங்கரவாதி என்று அறிவித்தது.

Friday, 24 November 2017

ஜிம்பாப்வேயில் ஆட்சி மாற்றம்!

Celebrations break out in Zimbabwe's capital as Robert Mugabe's resignation after 37 years in power is announced in parliament.


ஜிம்பாப்வேயில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்தாவிட்டாலும் எதிர்பாராதது என்றுதான் கூற வேண்டும். கடந்த 37 ஆண்டு காலமாக ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் அசைக்க முடியாத தலைவர் என்று கருதப்பட்ட 93 வயது அதிபர் ராபர்ட் முகாபே பதவி விலகி ஆட்சி மாற்றத்திற்கு வழிகோலியிருக்கிறார். இது அவர் விரும்பி ஏற்றுக்கொண்ட பதவி விலகல் அல்ல. சூழ்நிலையின் கட்டாயத்தால் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த ஏழு ஆண்டுகளில் ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. நீண்ட நாள் அதிபர்கள் பலரும், அசைக்க முடியாத சக்தி என்று கருதப்பட்டவர்களும் தூக்கியெறியப்பட்டிருக்கின்றனர் அல்லது பதவி விலகி இருக்கிறார்கள். நைஜர் அதிபர் மம்மாடெள தஞ்சா, டுனீசியாவின் சைன் எல் அபிபைன் பென் அலி, எகிப்தின் ஹோஸ்னி முபாரக், ஐவரி கோஸ்டின் லாரண்ட் பேக்போ, லிபியாவின் மும்மார் கடாஃபி, மாலத்தீவின் அம்மாடோ டெளமானி தோரே, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் ஜெனரல் பிரான்கோயிஸ் போஸிúஸ, எகிப்தின் முகம்மது மோர்ஸி, பர்கினா பாய்úஸாவின் பிளேஸ் காம்ப்போரே, ஜாம்பியாவின் யாஹியா ஜமேய் ஆகியோரைத் தொடர்ந்து இப்போது ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேயின் தலையும் உருண்டிருக்கிறது.
ஜிம்பாப்வேயில் அரசியல் நெருக்கடி கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே இருந்து வருகிறது. ஜிம்பாப்வே என்கிற நாடு ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் இருக்கிறது. ஆங்கிலமல்லாமல் 16 அதிகாரபூர்வ மொழிகளுடன், ஹராரேயைத் தலைநகரமாகக் கொண்ட ஜிம்பாப்வேயின் மொத்த மக்கள்தொகை 1.6 கோடி. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடி 1965-இல் ரொடீஷியா என்ற பெயரில் தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டாலும்கூட, ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து ஜிம்பாப்வே முழுமையாக விடுபடவில்லை. 15 ஆண்டுகால கொரில்லா யுத்தத்தின் முடிவில் 1980-இல் ஜிம்பாப்வேயில் மக்கள் ஆட்சி மலர்ந்து, ஜிம்பாப்வே குடியரசு உருவானது.
வெள்ளையர்களுக்கு எதிராக கொரில்லா யுத்தம் நடத்தி ஜிம்பாப்வேயை குடியரசாக மாற்றிய பெருமை ராபர்ட் முகாபேவுக்கு உண்டு. 1980-இல் பிரதமராகவும், 1987 முதல் அந்த நாட்டின் அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ராபர்ட் முகாபே, கடந்த 37 ஆண்டு காலமாக ஏறத்தாழ ஒரு சர்வாதிகாரியாகவே செயல்பட்டு வந்தார். ஆனாலும்கூட, மக்கள் மத்தியில் ஜிம்பாப்வேக்கு காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை வாங்கித் தந்தவர் என்பதால் செல்வாக்கு இருந்துவந்தது.
ஒரு காலத்தில் இரும்புக் கரம் கொண்டு தன்ûன் எதிர்க்க யாரும் இல்லை எனும் அளவிலான சர்வாதிகாரியாகத் திகழ்ந்த முகாபேயின் செல்வாக்கு கடந்த 10 ஆண்டுகளாக சரியத் தொடங்கியது. வயோதிகமும், உபாதைகளும் அவரை உடல்ரீதியாக பலவீனப்படுத்தின என்றால் பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்து, வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது. மக்கள் மத்தியில் முகாபேவுக்கு எதிரான மனநிலை அதிகரித்து வந்தது.
இந்த நிலையில்தான் கடந்த மாதம் அதிபர் முகாபே துணை அதிபர் எமர்சன் நங்கக்வாவை பதவியிலிருந்து அகற்றினார். ஜிம்பாப்வே சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து முகாபேவுக்கு இரண்டாவது இடத்தில் இருந்து வந்த போராளியான நங்கக்வாவை கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலரும் ஆதரிக்க முற்பட்டனர். அதற்குக் காரணம், முகாபேயின் 52 வயது மனைவியான கிரேஸ் முகாபே, அதிபரின் வயோதிகம் காரணமாகத் தன்னை அவரது வாரிசாக நியமிக்க வற்புறுத்தி வருகிறார் என்பதுதான்.
முகாபேயின் பதவி விலகலைத் தொடர்ந்து அதிபராகப் பதவியேற்க இருக்கும் எமர்சன் நங்கக்வா எந்த அளவுக்கு தன்னிச்சையுடன் செயல்பட முடியும் என்று தெரியவில்லை. ஜிம்பாப்வே ராணுவம், வாரிசு அரசியல் உருவாவதை விரும்பாததால்தான் அதிபர் முகாபேவுக்கு எதிராகத் திரும்பியது. ராணுவப் புரட்சி என்று குறிப்பிட்டால் சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்காது என்பதாலும், ஜிம்பாப்வே மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்பதாலும் ஜெனரல் சிவெங்கா தலைமையிலான ராணுவம் அடக்கி வாசித்திருக்கிறது. விரைவிலேயே தேர்தல் அறிவிக்கப்படும் என்று நம்பலாம்.
முகாபேயின் ஆட்சி ஜிம்பாப்வேக்கு வளமையை ஏற்படுத்தவில்லை என்றாலும்கூட, அவரது சர்வாதிகாரத் தலைமையை மக்கள் முற்றிலுமாக நிராகரித்துவிடவில்லை. ஏனைய ஆப்பிரிக்க நாடுகளைப்போல, அவருக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடவில்லை. புதிய ஆட்சியின் செல்வாக்கு குறித்து தேர்தலுக்குப் பிறகுதான் தெளிவான முடிவை எட்ட முடியும். இப்போதும்கூட கருப்பர் இன பாட்டாளி மக்கள் மத்தியில் முகாபேவுக்கு மிகுந்த செல்வாக்கு இருக்கிறது என்பதும், அதுதான் படித்த இளைஞர்கள் மத்தியில் அவரது ஆட்சிக்கு எதிராக ஏற்பட்டிருந்த ஆத்திரத்துக்கு அணை போட்டது என்பதும் மறுக்க முடியாதவை.
இந்தியாவைப் பொருத்தவரை, கி.பி.1500 முதல் ஜிம்பாப்வேயுடன் நமக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. என்றாலும்கூட, இரு நாட்டுக்கு இடையேயான வர்த்தகம் இப்போது வெறும் 250 மில்லியன் டாலர் மட்டுமே. ஆனாலும் ஜிம்பாப்வேயின் மீதும் ஆப்பிரிக்க நாடுகளின் மீதும் இந்தியா அக்கறைக் காட்டாமல் இருக்க முடியாது. இந்த நாடுகளின் விடுதலைப் போராட்டத்திற்கு நாம் பின்துணையாக இருந்திருக்கிறோம். ஜிம்பாப்வேயில் ஜனநாயகம் மலருமானால், அதற்காக மகிழ்ச்சி அடைவதில் இந்தியர்கள் முன்னணியில் இருப்பார்கள்.
 

Sunday, 29 October 2017

இப்படியும் நடந்திருக்கிறது இந்தியாவில் (யவத்மால் எச்சரிக்கை!)


மரபணு மாற்றப் பயிர்களால் ஏற்படும் பாதிப்புக்கு சமீபத்திய எடுத்துக்காட்டு மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் மரணங்கள். யவத்மால் பகுதியைச் சார்ந்த விவசாயிகள் பெரும்பாலும் பருத்தி உற்பத்தியாளர்கள். கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான யவத்மால் விவசாயிகள் தங்களது பருத்திப் பயிருக்குப் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும்போது அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 23-க்கும் அதிகமான விவசாயிகள் பூச்சிமருந்தில் உள்ள விஷவாயுத் தாக்குதலால் மரணமடைந்திருக்கிறார்கள்.
மரபணு மாற்றப்பட்ட பருத்தியும் ஏனைய பயிர்களும் பல்வேறு வகையான பூச்சிகளால் தாக்கப்படாது என்பதுதான் மரபணு மாற்றப்பட்ட விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தரும் உறுதிமொழி. விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு மாறினால் பல மடங்கு அதிகரித்த விளைச்சல் கிடைக்கும் என்பதும், அந்தப் பயிர்களைப் பூச்சிகள் தாக்காது என்பதும் மரபணு மாற்றப் பயிர்களுக்கு விவசாயிகளைக் கவர்ந்திழுக்க அவர்கள் போடும் தூண்டில்.
கடந்த சில வருடங்களாகவே கிழக்கு மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த யவத்மால் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட பருத்தியைப் பயிரிடத் தொடங்கிவிட்டிருக்கிறார்கள். முதல் மூன்று, நான்கு ஆண்டுகள் விளைச்சல் அதிகமாகக் கிடைத்தது என்பதும் உண்மை. ஆனால், சமீபகாலமாகப் பருத்தியின் விளைச்சல் குறைந்துவருவதும் அதிகமான உரம் தேவைப்படுவதும் கண்டறியப்பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலமான பயிர்களைப் பூச்சிகள் தாக்காது என்பதும் பொய்த்துவிட்டிருக்கிறது.
வழக்கத்துக்கு விரோதமாக இந்த ஆண்டு பருத்திச் செடிகள் அதிக உயரம் வளரத் தொடங்கிவிட்டன. ஏறத்தாழ ஆறடி உயரம் வரை வளர்ந்துவிட்டிருக்கின்றன. ஏன் இந்த திடீர் உயரம் என்பதற்கு காரணம் தெரியவில்லை. இந்தப் பயிர்களை வழக்கத்தைவிட அதிகமாகப் பூச்சிகள் தாக்கவும் செய்திருக்கின்றன. அதனால், பூச்சிக்கொல்லி மருந்தைத் தங்கள் தலைக்கு மேலே தூக்கிப்பிடித்துத் தெளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் பல விவசாயிகள் மருந்தின் நெடியைச் சுவாசிக்க நேர்ந்திருக்கிறது. இத்தனைக்கும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பவர்கள், முகமூடி அணிந்தோ, மூக்குப்பகுதியைத் துணியால் பாதுகாத்தபடியோதான் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட அல்லது மரணமடைந்த அத்தனை விவசாயிகளுமே பருத்திப் பயிர்களின் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும்போது அதன் விஷவாயுவைச் சுவாசித்ததால் பாதிக்கப்பட்டவர்கள். போஸ்ட்மார்ட்டம் அறிக்கையின்படி, மரணமடைந்த அனைவருமே பூச்சிக்கொல்லி மருந்தில் பயன்படுத்தப்படும் ஆர்கனோ பாஸ்பரஸ் என்கிற ரசாயனக் கலவையால் தாக்கப்பட்டு நுரையீரல் பாதிப்புக்கு ஆளானவர்கள். சிலருக்குக் கண் பார்வை மங்கிப்போய் சில நாள்களுக்குப் பிறகு தான் பார்வை திரும்பியிருக்கிறது.
இந்த ஆண்டு தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் கடந்த ஆண்டிலிருந்து மாறுபட்டவையா என்று விசாரித்தபோது அந்த பூச்சிக்கொல்லி மருந்துகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று விற்பனையாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் விவசாயிகள் தங்களது பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது என்பது புதிதொன்றுமல்ல. அதனால் அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்த வேண்டிய அவசியம் கிடையாது. வழக்கத்துக்கு மாறாக திடீரென்று இந்த ஆண்டு பயிர்களின் உயரம் அதிகரித்ததுதான் பிரச்னைக்குக் காரணமாக இருக்க வேண்டும் என்கிறது அரசின் விவசாயத் துறை.
2001 முதல் இதுவரை யவத்மால் பகுதியில் 3,920 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்திய விவசாயிகளின் தற்கொலைத் தலைநகரம் என்று வேடிக்கையாக யவத்மாலை அழைப்பது உண்டு. இப்போது பூச்சிக்கொல்லி விஷத்தால் தாக்கப்பட்டும் விவசாயிகள் மரணமடைந்து பிரச்னையை மேலும் தீவிரமாக்கி இருக்கிறார்கள்.
அமெரிக்க சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பயன்படுத்துவதால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்று அறிக்கையே வெளியிட்டிருக்கிறார்கள். மரபணு மாற்றப் பயிர்களால் அதிக விளைச்சல் கிடைக்கும் என்கிற வாதமும் பொய்யானது என்று பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல், அவற்றால் விளைநிலம் தரிசாவதுடன் பல்வேறு பக்க விளைவுகளும் ஏற்படுவதாக கண்டறியப்பட்டிருக்கின்றன.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிரான விவாதம் கடந்த பல ஆண்டுகளாகவே இருந்தாலும், தனது முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனைப்போல, மான்சாட்டோ உள்ளிட்ட மரபணு மாற்றப்பட்ட விதைகளை விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளுக்குத் தரும் அழுத்தம் இன்னும்கூடக் குறைந்தபாடில்லை.
மரபணுமாற்ற விதைகள் விற்பனையாளர்கள் மிகவும் சாமர்த்தியமாக மக்கள் கருத்தை உருவாக்குவதில் சமர்த்தர்கள். ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதிலும், ஊடகங்களை நம்ப வைப்பதிலும் தேர்ந்தவர்கள். மரபணு மாற்ற விதைகளைப் பயன்படுத்தத் தொடங்கினால் சொந்தமாக விதை சேகரித்து வைத்துக்கொள்ள முடியாது. அதனால், நாம் நிரந்தரமாக விதைகளுக்கு அவர்களை நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்திய விவசாயமே அவர்களது கட்டுப்பாட்டில் அடிமைப்படும் நிலைக்குத் தள்ளப்படும்.
யவத்மால் விவசாயிகளின் நிலைமை, இந்தியாவுக்கு எழுப்பப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி!

Saturday, 28 October 2017

சுதந்திர இந்தியாவில் இப்படியொரு சட்டமா?


ஒரு விசித்திரமான அவசரச் சட்டத்தை முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான ராஜஸ்தான் அரசு கொண்டுவந்திருக்கிறது. இந்த அவசரச் சட்டம் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டும் கூட, கடந்த ஒன்றரை மாதமாக அப்படி ஓர் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது வெளியில் கசியாமல் ரகசியமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறது எனும்போது, அரசின் நோக்கத்தை மேலும் சந்தேகிக்கத் தூண்டுகிறது.
செப்டம்பர் 7-ஆம் தேதி ராஜஸ்தான் அரசு, "குற்றவியல் சட்டங்கள் (ராஜஸ்தான் மாநில திருத்தம்) அவசரச் சட்டம் 2017' என்ற அவசரச் சட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள், முன்னாள் - இன்னாள் நீதிபதிகள் உள்ளிட்டோர் மீது, மாநில அரசின் உரிய முன் அனுமதி இல்லாமல், எந்தவித விசாரணையும் மேற்கொள்ள முடியாது. அதேபோல, அரசு ஊழியர் மீது லஞ்ச - ஊழல் குற்றச்சாட்டு எழுந்தாலோ வேறு எந்த ஒரு குற்றம் சாட்டப்பட்டாலோ அவரது குற்றம் உறுதி செய்யப்படும்வரை அவரது பெயர், புகைப்படம், முகவரி, குடும்ப உறுப்பினர்களின் விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பத்திரிகைகளோ, தொலைக்காட்சி ஊடகங்களோ வெளியிடக் கூடாது. மீறி வெளியிட்டால் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கும், இந்த அவசரச் சட்டம் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எந்தவித அடிப்படை ஆதாரமுமின்றி தனிநபர்கள் (அமைச்சர்கள், சட்டப்
பேரவை உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சிகள்), அமைப்புகள் மீதான குற்றச்சாட்டுகளையோ, கருத்துகளையோ ஊடகங்களில் அல்லது சமூக வலைதளங்களில் தெரிவிக்கக் கூடாது. குறிப்பாக, மாநில அரசின் கொள்கைகள், திட்டங்களை எந்த இடத்திலும் அரசுப் பணியாளர்கள் விமர்சிக்கக் கூடாது. இதனை மீறி எவரேனும் நடந்தால் அவர்கள் மீது துறைரீதியாக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அரசின் அனுமதி இல்லாமல் பணியிலோ, பொறுப்பிலோ உள்ள அரசு ஊழியர்கள் மீதோ, பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகள் மீதோ, அவர்கள் பணிக்கால நடவடிக்கை குறித்த எந்தவித விசாரணையையும் அரசின் முன் அனுமதி பெறாமல் மேற்கொள்ள முடியாது என்கிறது இந்த அவசரச் சட்டம். இதற்கு முன்னால் மகாராஷ்டிர மாநிலத்தில் இதேபோல ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்றாலும்கூட, அந்தச் சட்டத்தில் விசாரணைக்கு எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்குத்தான் அரசின் முன் அனுமதியை அந்தச் சட்டம் வழிவகுக்கிறது. அந்தச் சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
வசுந்தரா ராஜே சிந்தியா அரசின் அவசரச் சட்டம், மகாராஷ்டிர அரசின் அவசரச் சட்டத்தை ஒன்றுமில்லாததாக்கி இருக்கிறது. விசாரணைக்கு அரசு அனுமதி வழங்குவது வரை, ஊடகங்கள் அதுகுறித்த எந்தவித செய்தியையும் வெளியிடக் கூடாது என்று தடை பிறப்பிக்கப்பட்டதுடன் நில்லாமல், அதை மீறினால் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் வழங்க முற்பட்டிருக்கிறது.
அரசு ஊழியர்கள் என்கிற வளையத்துக்குள் முதலமைச்சரும், அவரது அமைச்சரவை சகாக்களும் வருகிறார்கள். ஏதாவது ஊழல் குறித்த ஆதாரங்கள் கிடைத்தாலும்கூட, அதை வெளியிடவோ, அது குறித்து தகவல்களை மக்கள் மன்றத்தில் பதிவு செய்யவோ, ஊடகங்களுக்கு இந்த அவசரச் சட்டத்தின் மூலம் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
கடந்த 70 ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் குறித்து விசாரிக்கவோ, வழக்கு தொடரவோ, தண்டிக்கவோ பகீரதப்பிரயத்தனத்தை மேற்கொண்டும்கூட மிகக் குறைவான வழக்குகளில்தான் அவர்கள் சிக்கி தண்டனை பெற்றிருக்கிறார்கள். துணைச் செயலர் பதவிக்கு மேலே உள்ள அரசு ஊழியர்களின் தவறுகள் குறித்து, விசாரணை நடத்த அரசின் முன் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இருப்பதுதான் அதற்குக் காரணம். இதனால், குறிப்பிட்ட அதிகாரி பணி ஓய்வு பெறும்வரை விசாரணையை தொடங்க முடிவதில்லை. காரணம், அரசு காலவரம்பில்லாமல் அனுமதி வழங்குவதை ஒத்திப்போட்டு விடுகிறது.
உச்சநீதிமன்றம் இதற்கு முன்னால் இரண்டு முறை இதுபோல முன் அனுமதி பெற வேண்டிய கட்டாயத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மத்திய புலனாய்வுத் துறை அரசின் முன் அனுமதி பெற வேண்டிய கட்டாயத்தால் பல ஊழல் அரசு ஊழியர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும், ஒருவருடைய பதவியின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு விசாரணையிலிருந்து வெவ்வேறு விதமான பாதுகாப்பு வழங்குவது தவறு என்றும் 2014-இல் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
அதேபோல, 2016-இல், எந்த வழக்காக இருந்தாலும் காவல்துறையினருக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. நீதிமன்ற வழக்கு விசாரணைக்குத்தான் அரசின் முன் அனுமதி தேவையே தவிர, காவல்துறையினரின் விசாரிக்கும் உரிமைக்கோ, முதல் தகவல் பதிவுக்கோ எந்தவிதத் தடையும் கூடாது என்று உச்சநீதிமன்றம் அந்த வழக்கில் தெளிவுபடுத்தியிருக்கிறது.
ராஜஸ்தான் அரசின் அவசரச் சட்டம், முன் அனுமதி வழங்குவதற்கு 180 நாட்கள், அதாவது, ஆறு மாத அவகாசத்தை அரசுக்கு வழங்குகிறது. இந்த ஆறு மாதத்தில் தடயங்களை அழிக்கவும், விசாரணையை திசை திருப்பவும் ஊழல்வாதிகளால் முடியும் என்பது ஊரறிந்த ரகசியம்.
ஊடகங்களுக்கும் இடித்துரைப்பாளர்களுக்கும் விசாரணை அமைப்புகளுக்கும் வாய்ப்பூட்டுப் போட்டு ஊழலுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவே இப்படியொரு சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. பேச்சுரிமை வழங்கப்பட்டிருக்கும் சுதந்திர இந்தியாவில் இப்படியொரு சட்டமா?

Tuesday, 19 September 2017

அனிதாவின் மரணத்துக்கு யார் பொறுப்பேற்பது அரசே?

பெரும் கனவுடன் மருத்துவப் படிப்புக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரியலூர் மாணவி அனிதா இறுதியாக நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டுவிட்டார். தன்னுடைய உயிரைத் தானே மாய்த்துக்கொண்டுவிட்டார். பல நூற்றாண்டுகள் சாதிய அழுத்தம், சூழ நின்ற ஏழ்மையின் மத்தியில், இந்தச் சமூகத்துக்காக அந்த மாணவி தன்னுள் அணைய விடாமல் பாதுகாத்துச் சுடர் விட வைத்திருந்த கல்விக் கனவுத் தீபம் இறுதியில் அவருக்குள்ளுயே அணைந்து, அவரோடு மண்ணில் புதைந்துபோவதற்கு அரசாங்கம் புதிதாகக் கொண்டுவந்த பொது நுழைவுத் தேர்வு (நீட்) காரணமாக அமைந்துவிட்டது.
மாநிலங்களின் கல்வி உரிமை மீதான நேரடியான தாக்குதலான இந்தப் புதிய நுழைவுத் தேர்வை ஆரம்பம் முதலாகவே தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள் பலரும் கடுமையாக விமர்சித்துவருகிறார்கள். இந்தப் புதிய நுழைவுத் தேர்வானது சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் அழுத்தப்பட்டிருக்கும் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை எவ்வளவு மோசமாகப் பாதிக்கக் கூடியது என்பதையும் தொடர்ந்து சுட்டிக்காட்டிவந்தார்கள். முதல்வர் பொறுப்பில் ஜெயலலிதா இருந்தவரை இந்த விஷயத்தில் ஓரளவுக்கேனும் ஓங்கி ஒலித்துவந்த தமிழகத்தின் உரிமைக் குரல், அவருடைய மறைவைத் தொடர்ந்து சுருதி இறங்கத் தொடங்கியது. தங்களுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக எதையும் பறிகொடுப்பது எனும் பாதையை ஜெயலலிதாவுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவருடைய கட்சியினர் தேர்ந்தெடுத்த பின் அதில் உடனடியாகச் சிக்கிக்கொள்பவர்களானார்கள் தமிழக மாணவர்கள்.
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள், மருத்துவர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்று தமிழகம். ‘நாடு முழுவதற்கும் ஒரே தேர்வு’ எனும் அடிப்படையில் கொண்டுவரப்படும் ‘நீட்’ மாதிரியான தேர்வுகள் எப்படியான கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும் என்றுணர்ந்து தேசிய அளவில் இதை ஒரு விவகாரம் ஆக்கியிருக்க வேண்டும் தமிழகம். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கேற்றபடி தாங்கள் நடந்துகொள்வதாலேயே தமிழகத்துக்கு ‘தேர்வு விலக்கு’ பெற்று விடலாம் என்று பகல் கனவு கண்டுகொண்டிருந்தனர் அதிமுக ஆட்சியாளர்கள்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இடையிலேயே ‘நீட் தேர்வு’ நடந்தது. தேர்வு முடிவுகள் வெளியாயின. பிளஸ் 2 தேர்வில் 1176/1200 மதிப்பெண்கள் பெற்றிருந்தவர் அனிதா. மருத்துவப் படிப்பில் சேர அவர் பெற்றிருந்த கட் ஆஃப் மதிப்பெண்கள் 196.75%. ஆனால், நீட் தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண்கள் 86/700. இப்படிப் பல மாணவ, மாணவிகள் மோசமான பாதிப்புக்குள்ளான செய்திகள் வெளியாயின. எதுவும் தமிழக ஆட்சியாளர்களை உலுக்கியதாகத் தெரியவில்லை. ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றிய இரண்டு மசோதாக்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டும், மத்தியில் ஆளும் பாஜக அரசு அவற்றைக் கிடப்பில் போட்டுவிட்டது. இடையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்னுடைய வேட்பாளருக்கான ஆதரவை அதிமுகவிடம் அப்படியே வாங்கிக்கொண்டது பாஜக. அப்போது கூட இந்த விஷயத்தை வலியுறுத்திப் பேசிக் காரியம் முடிக்கும் எண்ணம் அதிமுகவினரிடம் இருந்ததாகத் தெரியவில்லை. கடைசியில், நடப்புக் கல்வியாண்டுக்கு விலக்கு அளிக்க வகைசெய்யும் அவசரச் சட்டத்தின் வரைவை மத்திய அரசின் ஒப்புதலுக்குத் தமிழக அரசு அனுப்பி வைத்தது.
பொதுவெளியில், ‘கண்டிப்பாக இந்த ஆண்டு விலக்கு பெற்றுத்தந்துவிடுவோம்’ என்று மத்திய அமைச்சர்களை வைத்துப் பகிரங்கமாக உறுதிமொழியளிக்கச் செய்துவிட்டு, அதற்கு நேர்மாறாக நீதிமன்றத்தில் நடந்துகொண்டது மத்திய அரசு. ‘தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும்’ என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்க, ‘இதனால் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விளைவாக, உடனடியாக ‘நீட் தேர்வு’ முடிவுகள் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்ப உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஆக, இரண்டு அரசாங்கங்களும் மாற்றி மாற்றி அடுத்தவர் கோட்டுக்குப் பந்தை அடித்துக் கடைசியில் நொந்து நூலாகிப்போனார்கள் தமிழக மாணவர்களும் பெற்றோரும். இப்படிப்பட்ட பின்னணியில்தான் அனிதாவின் மரணம் நடந்திருக்கிறது. எதற்குமே தற்கொலை தீர்வில்லை. தற்கொலை என்பது மிக மிகத் தவறான முடிவு. ஆனால், “அனிதாவை அந்த முடிவை நோக்கித் தள்ளியதில் மத்திய, மாநில அரசுகளுக்கு முழுப் பொறுப்பு இருக்கிறது” என்று அவருடைய குடும்பத்தினர் குற்றம்சாட்டினால், அந்த உண்மையை எப்படி இரு அரசுகளாலும் தார்மிகரீதியாக மறுக்க முடியும்? பிளஸ் 2 தேர்வு முடிந்ததில் தொடங்கி தமிழகத்தில் மருத்துவக் கல்விக் கனவிலிருந்த மாணவர்களும் பெற்றோர்களும் கடந்த ஐந்து மாதங்களாக எப்படி அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பதை அவர்களுடைய தரப்பில் அமர்ந்து பார்த்தால்தான் உணர முடியும்.
அதிகாரப் போட்டியே வேலை என்றாகிவிட்டால், பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓடுவது ஒன்றே இலக்காகிவிடும் என்பதையே முதல்வர் பழனிசாமி இனியாகிலும் உணர வேண்டும். மாநிலத்தில் உள்ள பலம் மட்டும் இன்றி, மக்களவையிலும் 37 உறுப்பினர்களுடன் நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக அமர்ந்திருந்தும் ‘நீட் விவகார’த்தில் தமிழக அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவானது அதிமுகவின் அரசியல் தோல்வியின் விளைவே தவிர வேறு அல்ல. அதிமுகவுக்குள் நடந்துவரும் அதிகார யுத்தத்தில் தமிழகம் இன்னும் எத்தனையெத்தனை உயிரோட்டமான விஷயங்களைப் பலி கொடுக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சமே ஏற்படுகிறது. ஒன்று திறமையாக ஆளுங்கள் அல்லது விலகுங்கள். மாநில உரிமைகளை உங்களுடைய சுயநலனுக்காகப் பறிகொடுக்காதீர்கள்.
ஒரு அனிதாவை இனி என்ன கொடுத்துப் பெற முடியும் தமிழகம்!

நவோதயா பள்ளி: என்ன செய்யப் போகிறோம்?

 நவோதயா பள்ளி: என்ன செய்யப் போகிறோம்?.

வரலாற்றைத் திருப்புகிற தீர்ப்பொன்று வந்திருக்கிறது. “தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க அனுமதியளிக்கப்படுகிறது. 8 வாரத்துக்குள் இதற்கான தடையில்லாச் சான்றிதழ்களைத் தமிழக அரசு வழங்க வேண்டும். மாவட்டம்தோறும் அதற்கான இடத்தை ஒதுக்கி, உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்துதருவதில்தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று ஆணையிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
கணிசமான மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ள தீர்ப்பு இது என்பதில் சந்தேகமில்லை. ‘இந்தி படிக்க நமக்கிருந்த தடை தகர்ந்துவிட்டது’ என்ற மகிழ்ச்சியல்ல அது. தமிழகத்தில் ஒரே பாடத்திட்டம் நடைமுறையில் இல்லை. அரசுப் பள்ளிகள், சமச்சீர் கல்வித்திட்டத்தைப் பின்பற்றுகிற மெட்ரிக் பள்ளிகள், அதைப் பின்பற்றாத மெட்ரிக் பள்ளிகள், மத்திய பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிற கேந்திரிய பள்ளிகள், தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள், சர்வதேச(?) பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிற குளோபல் பள்ளிகள் என்று 6 வகையான பள்ளிகள் இருக்கின்றன. மாநிலப் பள்ளிகளைவிட, மத்திய பள்ளிகள் தரமானவை என்றும், மத்திய பள்ளிகளைவிட சர்வதேசப் பள்ளிகள் தரமானவை என்றும் நம்பப்படுகிறது. ஏழைகளுக்கு ஒரு பள்ளி, நடுத்தர வர்க்கத்தினருக்கு வேறு பள்ளி, உயர் வர்க்கத்துக்கு வேறு பள்ளி என்ற வேறுபாடு இருக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளியைவிடக் குறைந்த கட்டணத்தில், மத்திய பாடத்திட்டக் கல்வி கிடைத்தால் ஏழை, நடுத்தர மக்கள் வரவேற்கவே செய்வார்கள். அவர்களில் பலர் கேந்திரிய பள்ளிகளுக்கு முயற்சித்து, ஒரு சீட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ரூ. 2 லட்சம் கேட்கிறார்கள் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு பின்வாங்கியவர்கள்.
இந்த நேரத்தில் நவோதயா பள்ளிகள் ஏன் தமிழகத்தில் மட்டும் அனுமதிக்கப்படவில்லை என்ற வரலாற்றை அதை விரும்புகிற மக்களுக்கு சொல்லிக்காட்ட வேண்டிய கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது.
இந்தித் திணிப்பும் இந்தி எதிர்ப்பும் கடந்த 80 ஆண்டுகளாக நடந்துவரும் தொடர்கதை. “இந்தியா ஒரே நாடாக நீடிக்க வேண்டும் என்றால், இந்தியே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும்” என்று மத்திய அரசு தொடர்ந்து சொல்கிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களோ, “மாநில மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக அறிவித்துவிட்டால், ஏன் இந்தியா பிளவுபடப் போகிறது?” என்ற நியாயமான எதிர்வாதத்தை முன்வைக்கின்றன.

ராஜாஜி காலத்திலிருந்து...

தேசியவாதியான ராஜாஜி 1937-ல் முதல்வரானார். “இந்தியா விரைவில் விடுதலை பெறும். இதுவரையில் ஆங்கிலம் ஆட்சிமொழியாக இருந்தாலும், விடுதலைக்குப் பிறகு கண்டிப்பாக நம் தலைவர்கள் இந்தியைத்தான் ஆட்சிமொழியாக்குவார்கள். எனவே, முன்கூட்டியே தமிழர்களை இந்தி படிக்க வைத்துவிட்டால், பின்னாளில் அவர்களுக்குப் பாதிப்பு குறைவாக இருக்கும்” என்று கருதினார் ராஜாஜி. அரசுப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டுவந்தார். அவருக்கு முன்பே சென்னை மாகாணத்தை 17 ஆண்டுகள் ஆண்டுவிட்ட (1920 முதல் 1937 வரை) நீதிக்கட்சியினரோ தொடர்ந்து இந்தித் திணிப்பை எதிர்த்து வந்தவர்கள். இளம் தலைமுறையும் ‘திராவிட நாடு’ கனவில் இருந்ததால், இந்தியைக் கடுமையாக எதிர்த்தனர். விளைவாக, முதல் இந்தி எதிர்ப்புப் போர் 1938-ல் தொடங்கியது. இந்தித் திணிப்பு திரும்பப் பெறப்பட்டதால், போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்தியா விடுதலை பெற்று, குடியரசாக மாறியதும் அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அந்தச் சட்டம் ராஜாஜி கணித்தபடியே, “அனைத்திந்திய ஆட்சி மொழியாக இருக்கும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை ஆட்சிமொழியாக்க வேண்டும்” என்று சொன்னது. ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் பலருக்கு இந்தி தெரியாது என்பதால், எல்லோரையும் தயார்படுத்துவதற்காகக் கால அவகாசம் அளித்து, 1965 ஜனவரி 26-ம் தேதி இந்தியை நாட்டின் ஆட்சிமொழியாக மாற்றுவது என்று சட்டம் போட்டார்கள். இந்தி இந்தியாவின் தனி ஆட்சிமொழியாக (ஆங்கிலம் அறவே நீக்கப்படும்) முடிசூட்டப்போகிறது என்றதும், தமிழகம் கிளர்ந்தெழுந்தது. தமிழ்நாட்டில் காங்கிரஸை ஒட்டுமொத்தமாகத் தூக்கியெறிந்தார்கள் தமிழக மக்கள். இந்தித் திணிப்பு எதிர்ப்பு அரசு (திமுக) ஆட்சிப்பொறுப்பேற்றது. வாக்காளர்களின் விருப்பப்படி, இருமொழிச் சட்டத்தை நிறைவேற்றினார் அண்ணா. அதாவது, தமிழகத்துக்குத் தாய்மொழி தமிழ், தொடர்பு மொழி ஆங்கிலம் மட்டும் போதும். பள்ளிகளில் இவ்விரு மொழிகள் மட்டுமே கற்பிக்கப்படும் என்று சட்டம் போட்டார். அதை அப்படியே தொடர்ந்தார் கருணாநிதி.

இந்தியின் நுழைவு

நெருக்கடிநிலை 1975-ல் நடைமுறைக்கு வந்தது. மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலுக்குப் போனது. என்.சி.சி.யில்கூட இந்தியில் கட்டளையிடக் கூடாது என்ற நிலை மாறி, தமிழே இல்லாமல் இந்தி, ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கிற பள்ளிகளும் தமிழகத்துக்குள் நுழைந்தன. அதனைத் தடுக்கும் அதிகாரமின்றி விழித்தது தமிழக அரசு. மாநில அரசு அங்கீகாரம் அளிக்கும் பள்ளிகளில் மட்டும், இந்தியைத் தடுக்கிறது தமிழக அரசு. அதன் ஒரு பகுதிதான் நவோதயா பள்ளிகளைத் தடுத்ததும்.
அது மத்திய அரசுப் பள்ளிதானே என்று சிலர் கருதலாம். இல்லை, மாநில அரசின் பங்களிப்புடன் கூடிய பள்ளி. மாநில அரசு 30 ஏக்கர் நிலத்தை இலவசமாகத் தருகிறது. கூடவே, புதிய கட்டிடம் கட்டப்படும் வரையில் வாடகையில்லாமல் ஒரு பள்ளிக்கட்டிடத்தையும், ஆசிரியர்களுக்கான குடியிருப்பையும் மாநில அரசே வழங்க வேண்டும். இவ்வளவு உதவிகளைச் செய்கிறபோது, எங்களது இருமொழிக் கொள்கையை ஏற்றால் என்ன என்பது தமிழக அரசின் வாதம். “6 முதல் 10 வரையில் தமிழையும்தானே கற்பிக்கிறோம். 11, 12-ல் வேண்டும் என்றால் தமிழையும் விருப்பப்பாடமாகத் தேர்வு செய்துகொள்ளலாம்” என்றது மத்திய அரசு. எல்லாம் சரி, விருப்பப் பாடமாகத் தமிழைத் தேர்வுசெய்துகொள்ளலாம் என்றால் எல்லோரும் தமிழைத் தேர்வுசெய்வார்களா என்ற கேள்வி இருக்கிறதல்லவா? தமிழுக்கு முன்னுரிமை அல்லவா கொடுத்திருக்க வேண்டும்!
மத்திய அரசின் வாதத்தை ஏற்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது, நவோதயா பள்ளிகளைத் திறக்கலாம் என்று. அதிமுக என்ன செய்யப் போகிறது?

முழுதாக நனைக்கப்போகிறதா?

நம்மைப் போலவே மொழியுணர்வு மிக்க பல மாநிலங்கள் நீண்ட காலமாக நவோதயா பள்ளிகளை எதிர்த்துவந்தன. கல்வி பொதுப் பட்டியலுக்குப் போனதும், முழுசாக நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று தங்கள் முடிவைக் கைவிட்டுவிட்டன. (கடைசியாக அந்தப் பட்டியலில் சேர்ந்தது மேற்கு வங்கம்.) ஆனால், தமிழகம் இன்னமும் முழுசாக நனையவில்லை. தமிழ் மக்களை இந்தியால் முழுதாக நனைக்க முடியாது! வரைபடரீதியான, வரலாற்றுரீதியான உண்மை இது. ‘தமிழக அரசு முழுதாக நனைக்கப்போகிறதா?’ என்பதுதான் கேள்வி.
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தால் ஆட்சிக்கு வந்த திமுக, நவோதயா பள்ளிகளை அனுமதித்தால் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும், ஆளாகியிருக்கும். அதிமுக அனுமதித்தால் அந்த அளவுக்கு விமர்சனம் வராதுதான். ஆனால், “அண்ணா நிறைவேற்றிய இருமொழிக் கல்விச் சட்டம் நடைமுறையில் இருக்கும் ஒரு மாநிலத்தில், இந்தியை முதலில் அனுமதித்தது அண்ணா பெயரை வைத்துக்கொண்டிருந்த அதிமுகதான்” என்று வரலாற்றில் பதிவாகும்.
தாங்கள் பாஜக ஆதவாளர்களாக இருக்கலாம், ஆனால், பாஜக இல்லை என்பதை நிரூபிக்க எடப்பாடி அரசுக்கு வரலாறு தந்திருக்கும் வாய்ப்பு இது.
இன்னொரு விஷயம். ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் வெறுமனே நவோதயா பள்ளிகளை எதிர்ப்போம் என்று சொன்னால் மட்டும் போதாது. இந்தி எதிர்ப்பு முழக்கத்தால் ஆட்சியைப் பிடித்த நாம், கேரளத்தைப் போல மத்திய அரசுப் பள்ளியே என்றாலும், மாநில மொழி கட்டாயம் என்று இங்கே சட்டமியற்றத் தவறிவிட்டோம் என்ற உண்மையையும் ஒப்புக்கொள்ள வேண்டும். மக்களின் கனவான ஒரே பாடத்திட்டம் வேண்டும் என்றால், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரி ஒரே குரலில் பேச வேண்டும். மாநில அரசிடம் அனுமதி பெற்ற தனியார் பள்ளிகள் பல, திருட்டுத்தனமாக இந்தி கற்பிப்பதைக் கண்டும் காணாமல் இருக்காமல், துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால், பணக்காரர்கள் படிக்கிற தனியார் பள்ளிக்கு ஒரு நீதி, ஏழைகள் சேர வாய்ப்புள்ள நவோதயா பள்ளிகளுக்கு ஒரு நீதி என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்!.



Saturday, 26 August 2017

பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட குற்றவாளிக்காக 30 பேர் படுகொலை!

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவருக்கான தண்டனை என்னவென்பது வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் குர்மீத்.
இந்தத் தீர்ப்பு மற்றும் கைது நடவடிக்கை காரணமாக ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களின் பல பகுதிகளில் போலீஸ் மற்றும் துணைராணுவப் படையினர் வன்முறைகளை எதிர்கொள்ள தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங், ஆசிரமத்திலுள்ள இரு பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தார் என்பதுதான் அவர் மீதுள்ள குற்றச்சாட்டு.
பெயரிடப்படாத ஒரு கடிதத்தில் தொடங்கியது இந்த வழக்கின் விதை. அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில் அதை எழுதிய சந்யாசினி கூறியது இதுதான். இவரைத் தனது அறைக்கு வருமாறு குர்மீத் ராம் ரஹீம் சிங் கூறினாராம். அங்கு சென்றபோது பாபா படுக்கையில் இருந்தார். அவருக்கு அருகே ஒரு ரிவால்வர் இருந்தது. அப்போது தொலைக்காட்சியில் ஆபாசப்படம் ஓடிக் கொண்டிருந்தது. அந்த சூழலில் தன்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறியிருந்தார் சந்யாசினி. அதற்குப் பின் மூன்று வருடங்களுக்கு மிரட்டலுடன் பாலியல் பலாத்காரம் தொடர்ந்ததாகவும், இந்த அநீதி தன்னைப்போல் மேலும் 35 பெண்களுக்கு நடைபெற்றது என்றும் சொல்லியிருந்தார்.
இதைத் தொடர்ந்து சில மாதங்களில் அந்த ஆசிரமத்தைச் சேர்ந்த ரஞ்சித் சிங் என்பவர் கொலை செய்யப்பட்டார். கடிதம் அனுப்பப்பட்டதற்குப் பின்னணியில் இவர் இருந்திருப்பார் என்ற செய்தி பரவ... பரபரப்பு கூடியது.
மேற்படி கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கு நடத்தத் தீர்மானித்தது. இந்த விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்தது. டி.எஸ்.எஸ். அமைப்பை விட்டு விலகியிருந்த 18 சந்யாசினிகளை விசாரித்தது சிபிஐ. அவர்களில் இருவர் தாங்களும் குர்மீத் ராம் ரஹீம் சிங்கால் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறினர். ஆசிரமத்தில் நடக்கும் சட்டமீறலான விஷயங்களைக் குறித்து தொடர்ந்து எழுதி வந்த பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி என்பவரும் படுகொலை செய்யப்பட்டார். ஒரு காலத்தில் அந்த அமைப்பின் ஓட்டுநராகப் பணியாற்றிய கட்டா சிங் என்பவரும் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு எதிராக சாட்சியம் கொடுத்தார்.
தீர்ப்பின் எதிரொலி காரணமாக வன்முறை வெடிக்கலாம் என்ற காரணத்தினால் ஹரியாணாவில் பல இடங்களிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக சண்டிகரிலுள்ள அத்தனை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை. தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் வளாகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் பீப்பாய்கள் வாங்கிக் குவிக்கப்பட்டிருக்கின்றன. கற்களும் கூரிய ஆயுதங்களும் அதன் மற்றொரு பகுதியில் நிரப்பப்பட்டுள்ளன. சண்டிகர் காவல்துறை அந்த நகரின் அத்தனை நுழைவிடங்களையும் ‘சீல்’ செய்துள்ளது. ஹரியாணாவிலும் பஞ்சாபிலும் பெரும் கலவரம் வெடித்துவிடுமோ என்ற பதற்றம் உச்சத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில் ராம் ரஹிம் சிங் கைது செய்யப்பட்டுள்ளார், இவர் ரோத்தக் கொண்டு செல்லப்படலாம் என்று தெரிகிறது. இங்குள்ள போலீஸ் பயிற்சி கல்லூரி ஓய்வு இல்லம் சிறப்புச் சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்ச்குலாவில் நிலைமை பதற்றமாக உள்ளது காரணம், தேரா சச்சா ஆதரவாளர்கள் ஏற்கெனவே வாகனங்கள் மீது கல்வீச்சில் ஈடுபடத் தொடங்கிவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

Wednesday, 23 August 2017

கலப்புத் திருமணம் செய்தவர்களை காப்பாற்ற தனிப்பிரிவு

‘‘சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி’’ 
- என்பது அவ்வை பாட்டி இந்த உலகுக்குத் தந்த நன்னெறியாகும். ஆனால், இன்னமும் பல இடங்களில், தங்களை உயர்சாதி என்று சொல்லிக் கொள்பவர்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களும் இணைந்து திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை நிலவுகிறது. வேற்று சாதியை சேர்ந்த ஒரு பையனை திருமணம் செய்தது, தன் மகள் என்றாலும் அதைப்பொறுத்துக்கொள்ள முடியாமல், அந்தப்பையனை மட்டுமல்லாமல், ‘எங்கள் கவுரவமே போய்விட்டது. மானமே போய்விட்டது’ என்றுசொல்லி, தாங்கள் தவமிருந்து பெற்ற பெண்ணையும் கொலைசெய்யும் கவுரவ கொலைகளும் தமிழ்நாட்டில் அதுவும் பெரியார் பிறந்த இந்தப்பூமியில் இன்னமும் நடக்கிறது.

மதுரை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு பையனை திருமணம் செய்துகொண்டாள் என்ற ஒரே காரணத்திற்காக, ஒரு பெண் கவுரவ கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தற்போது ஆந்திர மாநில  ஐகோர்ட்டு  நீதிபதியாக  இருக்கும்  நீதியரசர் வி.ராமசுப்பிரமணியன் விசாரித்து தொடக்கம் முதல் அந்த தம்பதிக்கு பாதுகாப்பு கொடுக்க தவறிய போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான கண்டனத்தை தெரிவித்து நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தார். அதன்பிறகு இனிமேலும் இதுபோன்ற கவுரவ கொலைகள் நடக்காமல் இருப்பதை தடுக்கும் வகையில், 9 உத்தரவுகளை அடுக்கடுக்காக பிறப்பித்தார். அதில் ஒன்று, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட சமூகநல அதிகாரி மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலஅதிகாரி கொண்ட சிறப்பு தனிப்பிரிவு அமைக்கப்பட வேண்டும். இந்தப்பிரிவு, கலப்புத்திருமணம் செய்த தம்பதிகளுக்கு வரும் அச்சுறுத்தல், துன்புறுத்தல் தொடர்பான மனுக்கள் புகார்களை வாங்கவேண்டும். இதுபோன்ற புகார்களை பெறவும், அவர்களுக்கு தேவையான உதவிகள், ஆலோசனைகள் வழங்கவும் 24 மணிநேர அவசர உதவி டெலிபோன் எண்களை கொடுக்க வேண்டும். இந்த தம்பதிகள் இருக்கும் இடத்திலுள்ள போலீஸ் நிலைய அதிகாரி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், அந்த சிறப்புக்குழு அந்த கலப்புத்திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கத்தவறிய அதிகாரிகளை பொறுப்பேற்க செய்யவேண்டும். இத்தகைய சிறப்பு தனிப்பிரிவுகளை தமிழ்நாடு முழுவதும் 3 மாதத்திற்குள்ளாக அமைக்கவேண்டும் என்று 13.4.2016 அன்று வெளியிட்ட உத்தரவில் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் கூறியிருந்தார்.

நீதிபதி உத்தரவிற்கேற்ப, 3 மாதங்களுக்குள் இந்த சிறப்பு தனிப்பிரிவுகளை அரசு அமைக்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் தொடரப்பட்டது. உடனடியாக அவசர, அவசரமாக மதுரையில் இதுபோன்ற சிறப்பு தனிப்பிரிவு அமைக்கவும், சமூகத்தில் கலப்பு திருமணத்தினால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து புகாரை பெறுவதற்கு, மதுரை மாநகர் காவல் ஆணையர் வளாகத்திலுள்ள குற்றத்தடுப்பு பிரிவும் இந்தப்புகாரை விசாரிக்க குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஒரு சிறப்பு தனிப்பிரிவு சேலம் மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. கலப்புத்திருமணத்தை பொறுத்தமட்டில், இப்போது தானாக பல குடும்பங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பான்மையான குடும்பங்களில் இத்தகைய கலப்பு திருமணங்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, மணமக்களை வாழ்த்துகிறார்கள். கலப்புத்திருமணங்கள் சர்வசாதாரணமாகிவிட்டது. ஒருசில இடங்களில் மட்டும் இவ்வாறு கவுரவ கொலைகள் நடக்கின்றன. எனவே, உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி, உடனடியாக இதுபோன்ற சிறப்பு தனிப்பிரிவை தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கவேண்டும். 18 வயதிற்கு குறைந்த பெண்ணையோ, 21 வயதிற்கு குறைந்த ஆணையோ கலப்புத்திருமணம் என்ற பெயரில் திருமணம் செய்துவைக்கும் நடவடிக்கைகளை மட்டும் நிச்சயமாக ஊக்குவிக்கக் கூடாது.



Friday, 28 July 2017

ரஜினிகாந்தா?, கமல்ஹாசனா? யார் முந்தப்போகிறார்கள்?

ந்த ஆண்டு தமிழக அரசு மானியக் கோரிக்கைகளுக்கான சட்டசபை கூட்டத்தொடர் 24 நாட்கள் நடந்துமுடிந்தன. சட்டசபை கூட்டம் மக்கள் மனதில் பெரியதாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், சட்டசபைக்கு வெளியே அரசியல் களம் அனல் பறக்கத்தொடங்கிவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க. 3 அணிகளாக பிரிந்துள்ளநிலையில், அ.தி.மு.க. தொண்டர்களிடையே ஒரு குழப்பமான நிலையே நிலவிவருகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு அரசியலுக்குள் நுழைய ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தீவிரமாக யோசித்து வருகிறார்கள். மேலும் முடிவுக்கு வருவதை எட்டிவிட்டார்கள் என்பது சமீபகாலங்களாக அவர்களின் பேச்சில் இருந்தே தெரிகிறது. சினிமா துறையில் இருந்து இதுவரையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், டி.ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக் என்று நடிகர்கள் அரசியல் கட்சிகளை தொடங்கினாலும் எல்லோராலும் ஜொலிக்க முடியவில்லை. சிலர் தொடங்கிய கட்சிகள் முளையிலேயே பட்டுப்போய்விட்டன.

1996–ம் ஆண்டிலிருந்தே இதோ வருகிறார்!, அதோ வருகிறார்! என்று நடிகர் ரஜினிகாந்த் பற்றி பேச்சு வந்தது. ஆனால், இதுகுறித்து திட்டவட்டமாக எந்தக்கருத்தையும் சொல்லாவிட்டாலும், கடந்த மே மாதம் ரசிகர்களுடன் போட்டோ எடுக்கும் நிகழ்ச்சியில் முதல் முதலாவதாக, ‘நான் ஒருவேளை அரசியலுக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், பணம் சம்பாதிக்கும் நோக்கில் இருக்கும் ஆட்களை பக்கத்தில் சேர்க்கவேமாட்டேன்’ என்று முதல்நாளும், அதற்கு அடுத்தநாள் ‘போர் வரும்போது பார்த்துக்கொள்வோம்’ என்றும் கூறினார். ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைவார் என்று இருவேறு கருத்துகள் இருந்தநிலையில், ஏற்கனவே ரஜினிகாந்த் அந்தக்கூட்டத்தில் ‘சிஸ்டம் கெட்டுப்போய்விட்டது, ஜனநாயகம் கெட்டுப்போயிருக்கிறது. ஒரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும்’ என்று கூறினார். இப்போது ஒரு பேட்டியில் கமல்ஹாசன் திடீரென, ‘சிஸ்டம் கெட்டுப்போய்விட்டது என்று நான் முன்பே சொல்லியிருக்கிறேன். அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது’ என்று வெளிப்படையாகவே சொன்னபிறகு, எல்லோருடைய பார்வையும் கமல்ஹாசன் பக்கம் திரும்பியது. கமல்ஹாசன் கருத்துக்கு அ.தி.மு.க. தரப்பிலும், பா.ஜ.க. தரப்பிலும் மிகக்கடுமையான எதிர்க்கருத்துகள் கூறப்பட்டன.

கமல்ஹாசன் தகவல் தொழில்நுட்பத்தை, அதிலும் குறிப்பாக டுவிட்டரை அதிகம் பயன்படுத்துகிறார். கடந்த 18–ந்தேதி அன்று இரவு ‘‘தோற்றிருந்தால் போராளி, முடிவெடுத்தால் யாம் முதல்வர்’’ என்று வெளிப்படையாகவே எழுதிவிட்டார். ஆக, ‘முடிவெடுத்தால் நான் முதல்வர்’ என்பதை கூறிய கமல்ஹாசன் முடிவெடுத்துவிட்டார் என்பதை அடுத்தநாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார். தன் ரசிகர்களுக்கு டுவிட்டர் மூலம் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், காசுக்கு விலைபோகாத வாக்காளர்களும் என்று கூறி, அரசுத்துறைகளில் உள்ள ஊழல் ஆதாரங்களை இணையதளம் மூலம் அரசுக்கு அனுப்பும்படி கேட்டிருக்கிறார்’. ஆக, அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. முதல்–அமைச்சரே கமல்ஹாசனுக்கு பதில் சொல்லி கருத்துகளை தெரிவித்திருக்கிறார். மொத்தத்தில், ரஜினிகாந்தா?, கமல்ஹாசனா?, யார் முதலில் அரசியலுக்கு வரப்போகிறார்கள்? என்பதுதான் இன்றைய சூழ்நிலையில் மக்களிடையே ஒரு பெரிய பரபரப்பான எதிர்பார்ப்பாக இருக்கிறது. அரசியல் அரங்கில் இப்போது அனைத்து அரசியல் கட்சிகளும், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் பற்றியே விமர்சனம் செய்துவருகிறார்கள். தற்போது கமல்ஹாசனின் குரல்தான் ஓங்கி ஒலிப்பதாலும், அவருடைய ஒவ்வொரு கருத்துக்கும் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட பல கட்சிகளின் எதிர்க்கருத்துகள் மாறிமாறி மின்னல் வேகத்தில் வருவதாலும், இந்த அரசியல் பந்தயத்தில் புதிதாக கட்சித்தொடங்க நினைப்போரின் பந்தயத்தில் முதல் குதிரையாக நிற்பது கமல்ஹாசன்தான். இனி, நிச்சயமாக அரசியல் அரங்கில் ஒவ்வொருநாளும் கமல்ஹாசனின் தீப்பொறி கிளம்பும் அறிக்கைகளும், எதிர் அணிகளிலிருந்து தாக்குதல் அறிக்கைகளும் நிச்சயம் வரும்.

Monday, 3 July 2017

விற்பனைக்கு வருகிறார் ‘மகாராஜா’ -- Air India

த்திய அரசாங்கம், மாநில அரசுகள் என இரு அரசுகளுக்கும் சொந்தமான பல பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி, மக்களின் வரிப்பணத்தை விழுங்கிக்கொண்டிருக்கின்றன. ஒன்று இந்த நஷ்டத்தை சரிக்கட்டவேண்டும் அல்லது லாபகரமாக இயங்காவிட்டால், அதன் பங்குகளை தனியாருக்கு விற்று நஷ்டத்திலிருந்து தப்பித்துக்கொள்வதுதான் சாலச்சிறந்தது என்று நிபுணர்கள் கூறத்தொடங்கிவிட்டனர். பா.ஜ.க. அரசாங்கமும் இத்தகைய துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கத்தொடங்கிவிட்டது. அத்தகைய ஒரு முடிவாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்றுவிடுவது என்ற வரவேற்கத்தக்க முடிவு மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் ஒரு ‘மகாராஜா’ வரவேற்பதுபோல வர்த்தக சின்னத்தைக்கொண்டதாகும். லாபத்தில் இயங்கும்வரைதான் அவர் மகாராஜாவாக இருக்கமுடியுமே தவிர, நஷ்டத்தில் இயங்கும்போது நிச்சயமாக மகாராஜாவாக இருக்க முடியாது.



தற்போது இந்த நிறுவனத்தின் கடன் ரூ.52 ஆயிரம் கோடியாகும். இனிமேலும் இந்த நஷ்டத்தை தாங்கமுடியாது என்றநிலையில், மத்திய அமைச்சரவைக்கூட்டம் இதுகுறித்து விவாதித்து ஏர் இந்தியா நிறுவனத்தையும், அதன் 5 துணை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்றுவிடுவது என்று முடிவு எடுத்தது. எவ்வாறு இந்த பங்குகளை விற்கலாம்?, 100 சதவீத பங்குகளையும் விற்றுவிடலாமா?, 75 சதவீத பங்குகளை விற்றுவிடலாமா?, அல்லது 51 சதவீத பங்குகளை மட்டும் விற்றுவிடலாமா? என்பது பற்றி முடிவு எடுக்க நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள சூழ்நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தற்போது 118 விமானங்கள் இருக்கின்றன. 41 நாடுகளுக்கும், உள்நாட்டில் 72 நகரங்களுக்கும் ஏர் இந்தியா விமானம் சென்றுவருகிறது. மத்திய அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவு நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒன்றாகும். எவ்வளவு ஆண்டுகள்தான் ஒரு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கும்?, எவ்வளவு காலம்தான் மக்களின் வரிப்பணத்தில் இருந்து அந்த நஷ்டத்தை ஈடுகட்டமுடியும்? என்பதையெல்லாம் கண்டிப்பாக யோசிக்கவேண்டும். இதுபோல, மத்திய அரசுக்கு சொந்தமான 277 பொதுத்துறை நிறுவனங்களிலும், தமிழக அரசுக்கு சொந்தமான 11 பொதுத்துறை நிறுவனங்களிலும் எந்தெந்த
1932–ம் ஆண்டில் தொழில் அதிபர் ஜே.ஆர்.டி. டாட்டா தொடங்கிய டாட்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மத்திய அரசாங்கம் வாங்கியபிறகுதான், முதலில் இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா நிறுவனமாக பரிணமித்து, பின்பு ‘ஏர் இந்தியா’ என்று ஒரே நிறுவனமாக இணைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான பயணத்தில் 14 சதவீதமும், வெளிநாட்டுக்கு செல்லும் பயணத்தில் 17 சதவீதமும் ஏர் இந்தியா விமானங்கள் மூலம்தான் நடந்துவருகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவை தனியார் விமான சர்வீஸ் சேவையைவிட நிச்சயமாக உயர்ந்தது. தனியார் விமான சேவையில் ஒரு குறிப்பிட்ட விமானத்தில் போதிய அளவு பயணிகள் இல்லையென்றால், அந்த விமான சேவையை அன்று மட்டும் ரத்து செய்துவிட்டு, அதில் செல்ல டிக்கெட் எடுத்த பயணிகளை அடுத்த விமானத்தில் ஏற்றி அனுப்பிவிடுவார்கள். ஆனால், ஏர் இந்தியா விமானத்தில் ரத்து என்பதற்கே இடமில்லை. ஒரு பயணிதான் வருவதாக இருந்தாலும் விமானம் செல்லும். எனவே, பயணிகளுக்கு உறுதியான சேவை கிடைத்துவந்தது. இப்போது தனியாருக்கு விற்க முடிவெடுத்துள்ள நிலையில், இந்த உறுதியான சேவை குறித்து மத்திய அரசாங்கம் என்ன சொல்லப்போகிறது?.
நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குகிறதோ?, அந்த நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட்டு, அதில் கிடைக்கும் தொகையை மக்களுக்கான வளர்ச்சித்திட்டங்களுக்கு பயன்படுத்துவதில் அரசு அக்கறை காட்டவேண்டும்.

புதிய அத்தியாயம்; புரட்டிப்பார்த்தால்தான் தெரியும்

ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா பெற்ற சுதந்திரத்தை 'நள்ளிரவில் பெற்ற சுதந்திரம்' என்று இன்றும் கூறிவருகிறோம். அதுபோல, உலகமே தூங்கிக்-கொண்டி-ருந்த நள்ளிரவில் சுதந்திரம் அடையும்போது, எப்படி பாராளுமன்றம் விழித்திருந்து இந்தியாவின் சுதந்திரத்தை அறிவித்ததோ, அதுபோல ஜூன் 30-ந் தேதி நள்ளிரவில் இந்தியா முழுமையையும் ஒரே நாடு!, ஒரே சந்தை!, ஒரே வரி! என்று அழைக்கப்படும்வகையில், சரக்கு சேவை வரி நடைமுறையில் வருவதை பிரகடனப்படுத்தியது. இந்த விழாவை, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், தி.மு.க. உள்பட பல கட்சிகள் புறக்கணித்தன. காங்கிரஸ் கட்சி இதை புறக்கணித்ததற்கு ஒரு காரணமாக பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் 1947-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்றும், 1972-ல் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின்போதும், 1997-ல் பொன்விழாவின்போதும்தான் கூட்டம் நடந்ததே தவிர, எத்தனையோ சீர்திருத்த நடவடிக்கைகள் மத்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நேரத்திலும் அவை எதுவும் நள்ளிரவில் மைய மண்டபத்தில் நடக்கவில்லை என்று கூறியது.

சரக்கு சேவை வரிக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. நாட்டின் பல சீர்திருத்தத்திட்டங்களுக்கு பல வளர்ச்சித்திட்டங்களுக்கு, பல அதிரடி திட்டங்களுக்கு சரித்திர புகழ் பெற்ற வாஜ்பாய்தான் 2000-ம் ஆண்டில் பிரதமராக இருந்தபோது, சரக்கு சேவை வரியை பற்றி ஆராய ஒரு அதிகாரம் படைத்த குழுவை நியமித்தார். அதிலிருந்து இதன் பயணம் தொடங்கியது. பின்பு நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் சரக்கு சேவைவரிக்கான அறிவிப்பை வெளியிட்டார். பிரணாப் முகர்ஜி நிதி மந்திரியாக இருந்தபோது இதற்கான அரசியல் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதிலிருந்து பல தடை-களைத்-தாண்டி சரக்கு சேவை வரி இப்போது அமலுக்கு வந்துள்ளது.

பாராளுமன்றத்தில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பேசும்போது, 'பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள் இருக்கிறது. அதுபோல, சரக்கு சேவை வரி கவுன்சில் நடத்திய 18 கூட்டங்களை தாண்டித்தான் இந்த மசோதா நிறைவேறி இருக்கிறது. சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவில் உள்ள 500 மாகாணங்களை சுதந்-திரத்திற்கு பிறகு இணைக்காவிட்டால், இன்று ஒரேநாடாக இந்தியா இருந்திருக்க முடியுமா?. அதைப்போலத்தான் 29 மாநிலங்களிலும், 7 யூனியன் பிரதேசங்களிலும் விதிக்கப்பட்ட 500 வகையான வரிகள் இன்றைய தினம் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது' என்று மிக அருமையான உவமைகளுடன் பேசினார்.

சரக்கு சேவை வரியால் பல நன்மைகள் இருக்கிறது என்றாலும், சில பாதிப்புகளும் இருப்பதை யாராலும் மறுத்து விட முடியாது. பல பொருட்களின் விலை குறைந்தி-ருந்தாலும், பல பொருட்கள், சேவைகளின் வரி அதிகரித்தி-ருக்கிறது. 1,211 பொருட்கள் மற்றும் சேவைகள் 0, 5, 12, 18, 28 என்ற 5 வரி விகிதங்களுக்கு சரக்கு சேவைவரி உட்பட்டு இருக்கிறது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள், சேவைகளின் வரி உயர்ந்திருப்பதால், சாதாரண குடும்பங்களின் மாத பட்ஜெட்டில் துண்டுவிழும் நிலை உருவாகியுள்ளது.

எல்லாமே கம்ப்யூட்டர் மயம் என்ற நிலையில், 60 சதவீதத்திற்கு மேல் சிறுதொழில் செய்பவர்களுக்கு கம்ப்யூட்டர் என்பது பழக்கமான ஒன்று அல்ல. இதுவே இறுதி முடிவாக மத்திய அரசாங்கம் மேற்கொள்ளாமல், எந்தெந்த வரிகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு, இழப்பு இருக்கிறது என்பதையும், எந்தெந்த வகையில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் நடைமுறை சிக்கல் இருக்கிறது என்பதையும், இன்னமும் தொடர்ந்து தீவிரமாக ஆராய்ந்து வரப்போகும் கால கட்டங்களில் அவற்றை நீக்கி சரக்கு சேவைவரி கட்டுவது ஒரு இனிமை, எளிமை, சுகம் என்றவகையில், இரு தரப்புக்கும் ஒரு நல்ல நிலைமையை உருவாக்குவதில்தான் சரக்கு சேவைவரியின் வெற்றியே இருக்கிறது.



Monday, 29 May 2017

வேதனையின் உச்சம்

முன்எப்போதும் இல்லாத அளவுக்கு மதுவுக்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுவதும் வலுக்கத்தொடங்கி விட்டது. வீதிக்கு வந்து போராடும் பெண்கள், சிறுவர், சிறுமியரை பார்க்கும் போது மனது வேதனையில் தவிக்கிறது. அவர்கள் மீது தடியடி நடத்தி பலப்பிரயோகத்தில் போலீசார் ஈடுபடும் போது கண்கள் குளமாகின்றன. கால்நூற்றாண்டுகளாக மது அரக்கன் பிடியில் வெந்து நொந்த பெண்களின் வேதனையின் உச்சம் தான் இந்த போராட்டம். இதை உணர எடப்பாடி அரசு மறுப்பது அதிகார பசியின் உச்சமாகத்தான் தெரிகிறது. 2016 சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது மதுவுக்கு எதிரான ஒரு பிரசாரம் தமிழகம் முழுவதும் அலையடித்தது. அப்போது திமுக பூரண மதுவிலக்கு தொடர்பான கொள்கையை அறிவித்ததும், அதிர்ந்துபோன அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தேர்தலில் வென்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். அவர் பதவி ஏற்றதும் முதற்கட்டமாக 500 மதுக்கடைகளை மூடினார். அவர் மரணம் அடைந்த பின் ஓபிஎஸ்சை ெதாடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 16ல் பதவி ஏற்ற போது மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தார்.

அப்போது ஒரு வெளிச்சம் தெரிந்தது. 1000 கடைகள் அடுத்தடுத்து மூடப்பட்டுவிட்டன. நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலையோரங்களில் 500 மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் மதுபானக்கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 3 ஆயிரம் மதுக்கடைகள் அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடுத்தடுத்து சாதகமான நிலை ஏற்பட்டதும் தமிழகத்தை பிடித்திருக்கும் மது அரக்கன் இனி மெல்ல மெல்ல வெளியேற்றப்படுவான் என்று எண்ணியிருந்த போது, எடப்பாடி அரசு வழக்கமான அதிமுக ஆட்சியின் தந்திரத்தை பயன்படுத்தி புறவாசல் வழியாக மதுக்கடைகளை திறக்க முடிவு செய்து நடவடிக்கை எடுத்தது.

இதனால் மக்கள் அதிர்ந்து போய் மதுக்கடைகளை ஒட்டுமொத்தமாக தமிழகத்தை விட்டு வெளியேற்ற வீதிக்குவீதி களம் இறங்கி விட்டனர். டாஸ்மாக் கடைகள் உடைக்கப்படுவதும், தீ வைத்து எரிக்கப்படுவதும் அதற்கு சாட்சி. இந்த போராட்டங்களில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதைக்கூட மதிக்காமல் தமிழக காவல்துறை அத்துமீறி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
கணவனின் குடிப்பழக்கத்தால் வாழ்க்கையை இழந்த பெண்கள், மகன்-மகளின் எதிர்காலத்திற்காக அத்தனையும் சகித்துக்கொண்டனர். ஆனால் தற்போது அவர்களும் மதுபோதையின் பிடியில் சிக்கிய பின் தான் ஆக்ரோஷத்தை காட்டத் துவங்கி இருக்கின்றனர். எனவே எடப்பாடி அரசு இனியும் தாமதம் செய்யாமல் தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்ற ெஜயலலிதாவின் அறிவிப்பை நிறைவேற்ற வேண்டும். மது இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும். அதுதான் தமிழகத்தின் எதிர்கால சந்ததிக்கு செய்யும் முதல் சேவையாக இருக்கும்.

தமிழர்களின் நாகரிகம்


லகில் பல நாடுகள், ‘‘நாங்கள் பண்டைய காலத்தி லிருந்து நாகரிகம் மிக்கவர்கள். எங்கள் வரலாறு போற்றுதலுக்குரியவை’’ என்று நெஞ்சம் நிமிர்த்தி சொல்வது வழக்கம். இந்த பெருமைக்கெல்லாம் அத்தாட்சி யாக, அசைக்கமுடியாத ஆதாரமாக அவர்கள் தங்கள் நாட்டில் நடந்த அகழ்வாராய்ச்சி காரணமாக வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளைத்தான் சொல்வார்கள். இந்தியாவை எடுத்துக்கொண்டால் இதுவரை சிந்து சமவெளி நாகரிகத் தைத்தான் பெருமையோடு கூறிக்கொண்டிருக்கிறார்கள். சிந்து சமவெளி நாகரிகம் சிறப்புக்குரியது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது. ஆனால், சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முன்பே, ‘‘முந்து சமவெளி நாகரிகமாக திகழ்ந்தது தமிழர்களின் நதிக்கரை நாகரிகம்தான்’’. தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்த அடையாளம் இருக்கிறது என்றால், நிச்சயமாக பாண்டிய மன்னர்கள் தலைநகரமாக கொண்ட மதுரையைச் சுற்றிலும் இன்னும் நிறைய அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை கீழடி ஆய்வுமுடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. 

தொல்பொருள் கண்காணிப்பாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் தலைமையில் கடந்த 2015–ம் ஆண்டு மார்ச் மாதம் கீழடியில் ஆய்வுப்பணிகள் தொடங்கின. மார்ச் முதல் செப்டம்பர் வரை முதல்கட்ட ஆய்வும், 2016–ம் ஆண்டு ஜனவரி 18 முதல் செப்டம்பர் வரை 2–வது ஆய்வும் நடத்தப்பட்டு இதுவரை 100 குழிகள் தோண்டப்பட்டு 
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரியவகை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கே உள்ள கட்டிட அமைப்புகள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்களையே அதிசயிக்க வைத்தது. 

இந்தநிலையில், இதை மேலும் தீவிரமாக அகழ்வா ராய்ச்சி நடத்தாமல், அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணனை அசாம் மாநிலத்திக்கு மாற்றியது அங்குள்ள மக்களை கொதிப்படைய வைத்துவிட்டது. இத்தகையச் சூழ்நிலையில் மத்திய கலாசார ராஜாங்க மந்திரி மகேஷ் ‌ஷர்மாவும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை ராஜாங்க மந்திரி நிர்மலா சீதாராமனும் கீழடிக்கு வந்து ஆய்வு நடத்தினர். தற்போது 3–ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சி மிகவும் சுமுகமான வகையிலும், சிறப்பாகவும் இருந்தது. கிறிஸ்து பிறப்பதற்கு 2 நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தப்பகுதியில் கலாசாரமும், நாகரிகமும் உயர்ந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வா ராய்ச்சியின் 3–ம் கட்ட பணிகளுக்காக 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று மகேஷ் ‌ஷர்மா கூறியதுதான் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. 

அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டிருப்பது அங்குள்ள தென்னந்தோப்பில்தான். ஒன்று அந்த நிலத்தை வாங்க வேண்டும் அல்லது நீண்டகால ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். இதற்கு 40 லட்சம் ரூபாய் போதாது. இதில், அகழ்வாராய்ச்சிகளை எப்படி மேற்கொள்வது? இதுமட்டு மல்லாமல், ஏற்கனவே இரண்டு கட்டங்களில் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் சிவகங்கை, மதுரை, சென்னை மியூசியங்களில் வைக்கப்படும் என்று இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை டைரக்டர் ஜெனரல் அறிவித்துள்ளார். தமிழக அரசு அங்கேயே மியூசியம் வைக்க இடம் தருவதாக கூறியிருக்கிறது. உடனடியாக தமிழக அரசும், இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையும் இணைந்து கீழடியிலேயே ஒரு மியூசியம் வைக்க ஏற்பாடு செய்யவேண்டும். சிந்து சமவெளியில் அகழாய் வுகள் நடந்த இடங்களை அப்படியே வைத்திருக்கும்போது கீழடியில் ஏற்கனவே அகழாய்வு நடந்த இடங்களை மூடி விட்டார்கள். இதுபோன்ற நிலைமைகளை தவிர்த்து அகழாய்வு நடந்த இடங்களை அப்படியே வைத்திருந்தால் எதிர்கால சந்ததியினரும் அறிவதற்கு வசதியாக இருக்கும். கவிஞர் வைரமுத்து கூறியதுபோல இந்திய நாகரிகத்தின் இரு கண்கள் தமிழும்–வடமொழியும். இந்திய நாகரிகத்தின் இரண்டு பக்கங்கள் திராவிட நாகரிகமும்–ஆரிய நாகரிக முமாகும். அப்படி இருக்க ஒன்றை வளர்த்து அடுத்ததற்கு ஊக்கம் அளிக்காமல் இருப்பது சரியல்ல. தமிழர்களின் பண்டைய நாகரிகம் தரணிக்கு தெரியட்டும்.

Monday, 24 April 2017

சுற்றுலா வருபவர்கள் நமது சகோதர–சகோதரிகள்

றைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா எப்போதுமே, சுற்றுலா என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்தும் உந்துசக்தி என்று குறிப்பிடுவார். பிரதமர் நரேந்திரமோடி, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 2 தலைநகரங்களான காஷ்மீரையும், ஸ்ரீநகரையும் இணைக்கும் வகையில் 9.2 கிலோமீட்டர் தூரத்திற்கு, ரூ.2,500 கோடி செலவிலான நாட்டிலேயே மிகப்பெரிய சுரங்கப்பாதையை நேற்று முன்தினம் திறந்துவைத்தார். அப்போது அவர், கடந்த 40 ஆண்டுகளில் சுற்றுலா இந்தப்பகுதியில் மேம்பாடு அடைந்திருந்தால், உலகமே காஷ்மீரின் காலடியில் இருந்திருக்கும். காஷ்மீர் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க சுற்றுலாவா?, பயங்கரவாதமா? என்பதை முடிவு செய்யவேண்டும். சுற்றுலா வளர, வளர பொருளாதாரம் வளர்ந்துகொண்டேபோகும். அந்தமாநில மக்களும் அதனால் பயனடைந்து கொண்டே இருப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் இந்த கருத்துகளை தெரிவித்த அதேநாளில், சென்னை அருகிலுள்ள மாமல்லபுரத்தில் வெட்கி தலைகுனிய வைக்கும் ஒருசம்பவம் நடந்திருக்கிறது. மாமல்லபுரத்திற்கு ஜெர்மன் நாட்டிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா வந்திருக்கிறார்கள். அதில் 5 பேர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை காலையில் கடற்கரைக்கு சென்றிருக்கிறார்கள். 4 பேர் ‘சன்பாத்’ எடுத்துக்கொண்ட நேரத்தில், ஒருபெண் மட்டும் நான் நடைபயிற்சி செய்கிறேன் என்று கூறிவிட்டு, கடற்கரையில் நடந்துசென்றிருக்கிறார். அப்போது 3 அடையாளம் தெரியாத நபர்கள் அவரை பக்கத்திலுள்ள சவுக்கு தோப்புக்குள் தூக்கிக்கொண்டு போய் அதில் ஒருவன் கற்பழித்திருக்கிறான். அவர்களிடமிருந்து தப்பித்த அந்த பெண் உடனடியாக தூதரகத்துக்கு புகார்செய்ய, இப்போது போலீஸ் விசாரணை நடக்கிறது. ‘‘பெண்களை கடவுளாக மதிக்கும் இந்தியாவில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது மிகவும் துரதிர்ஷ்டமானது’’ என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார். அனைவருக்கும் இது வேதனையளிக்கிறது. ஆக, சுற்றுலா தலங்களில் இன்னும் பாதுகாப்பை மேம்படுத்தவேண்டிய பெரிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே முதல்இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக தமிழ்நாடு இருக்கிறது என்று பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அயல்நாட்டு சுற்றுலா பயணிகளையும் இதேபோல அதிகளவில் ஈர்த்தால், பொருளாதார நிலைமை மேம்படுமே என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இப்படி ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம் நடந்திருக்கிறது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், மலையும் மலைவாழ் சார்ந்த இடங்களும் கொண்ட ‘குறிஞ்சி’ நிலமும், காடும் காடுசார்ந்த இடங்களை கொண்ட ‘முல்லை’ நிலமும், வயலும் வயல்சார்ந்த கொண்ட ‘மருதம்’ நிலமும், கடலும் கடல்சார்ந்த இடமும் கொண்ட ‘நெய்தலும்’, மணலும் மணல்சார்ந்த ‘பாலை’ நிலமும் ஒருங்கே தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. சுற்றுலா என்பது வெறும் பொழுதுபோக்கல்ல, மனங்களில் மகிழ்ச்சி. சுற்றுலா வருமானத்தை மட்டும் பெருக்காமல், பண்பாட்டை பரிமாறவும் பேருதவி புரிகிறது. வேலைவாய்ப்புகளை பெருக்குகிறது. தமிழ்நாட்டுக்கு சுற்றுலாவாக வந்தால் அது விரையம் அல்ல ‘கிரையம்’ என்ற உணர்வுகளை உள்நாட்டு சுற்றுலா பயணிகளிடமும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் வளர்க்கவேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. சுற்றுலா தலங்களுக்கு என தனியாக சுற்றுலா போலீஸ் என்ற அமைப்பை அமைக்க அரசு பரிசீலிக்கலாம். சுற்றுலாத்தலங்களில் உள்ள மக்களுக்கு, நம்பகுதிக்கு சுற்றுலா வரும் மக்கள் அனைவரும் நமது சகோதர–சகோதரிகள். இங்கு வந்துவிட்டு தங்கள் சொந்த ஊருக்கு, அல்லது சொந்தநாட்டுக்கு திரும்பும்போது, அவர்கள் ஒரு தாய்வீட்டுக்கு, சகோதரன்–சகோதரி வீட்டுக்குவந்த இனிமையான உணர்வோடு திரும்ப வேண்டும் என்பதையே முக்கியக்குறிக்கோளாக தங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

Sunday, 2 April 2017

தொல்காப்பியத்தில் விலங்குகள் - ஓர் ஆய்வு

தொல்காப்பியத்தில் விலங்குகள் - ஓர் ஆய்வு

தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்று பகுதி உள்ளன. இதில் பொருளதிகாரத்தில் உள்ள மரபியல் பகுதியில் விளக்கப்பட்டுள்ள விலங்குகளைப்பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விலங்குகள் முதுகெலும்பற்றவை, முதுகெலும்புள்ளவை என்று இரண்டு வகைப்படும். மரபியலில் விலங்குகளின் இளமை பெயர்கள், ஆண்பாற் பெயர்கள், பெண்பாற் பெயர்களை மிக அழகாக விளக்கியுள்ளார்.
விலங்குகளின் இளமைப்பெயர்கள்
பலவிதமான விலங்குகளின் இளமைப்பெயர்கள் பலவாகும். அது பார்ப்பு, பிள்ளை, குட்டி, பறழ், குருளை, மறி, கன்று, குழவி என்று பல இளமைப்பெயர்களை பல விலங்குகளுக்குரியது என்று கூறியுள்ளார்.
பார்ப்பு - பிள்ளை:
பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை (548)
தவழ்பவை தாமும் அவற்றோரன்ன (549)
இதில் பார்ப்பும், பிள்ளை என்ற பெயர்கள் பறவைகள், ஊர்வனவற்றின் இளமைப்பெயராகும் என்கிறார்.
குட்டி:
மூங்கா வெருகெலி மூவரி யணிலொ
டாங்கவை நான்குங் குட்டிக்குரிய (550)
கீரிப்பிள்ளை, பெருகு, எலி, அணில் என்பவற்றின் இளமைக்கு குட்டியென்று கூறற்கு உரியனவாம்.
கோடுவாழ் குரங்குக் குட்டி கூறுப (557)
குரங்குகள் மரங்களில் கிளைகளுக்கிடையே தாவிச் செல்லும் தன்மையுடையது. அதைத் தான் கிளைகளில் வாழும் குரங்கின் இளமையையும் குட்டி என்று கூறுவர்.
குருளை:
நாயே பன்றி புலி முயல் நான்கும்
ஆயுங் காலைக் குருளை யென்ப (552)
நாய், பன்றி, புலி, முயல் ஆகிய நான்கும் குருளை யென்று கூறப்பெறும். நரியையும் குருளை என்று கூறப்பெறும் என்கிறார்.
மறி:
ஆடுங் குதிரையும் நவ்வியும் உழையும்
ஓடும் புல்வாய் உளப்பட மறியே (556)
ஆடு, குதிரை, புள்ளிமான் ஆகியவற்றின் இளமையை மறி யென்றும் கூறப்பெறும்.
கன்று:
யானையும் குதிரையும் கழுதையும் கடமையும்
மானோ டைந்தும் கன்றெனற் குரிய (559)
யானை, குதிரை, கழுதை, மான் ஆகியவற்றின் இளமைகளுக்கு கன்று என்று பெயரையும் பெறுதற்கு உரியன. எருமையும் கன்று என்று வழங்குபவர்.
குழவி:
யானை, எருமை, கடமாவும், குரங்கு ஆகியவற்றின் இளமையை குழவி என்கிறார் (563, 564, 565)
மேற்கூறிய பல விலங்குகளின் பல இளமை பெயர்கள் கூறப்பட்டுள்ளது. அந்தகாலத்திலே விலங்குகள் இளமையாக இருக்கும் போது அதற்கென்று தனி பெயர் இருப்பது தெரிகிறது.
ஆண்பாற் பெயர்கள்:
விலங்குகளிலும் ஆண்பால், பெண்பால் என்று வேறுபாடு இருக்கிறது. இதை தொல்காப்பியர் காலத்திலே இந்த பெயர் வேறுபாட்டை விளக்கியுள்ளார். ஆண் விலங்குகளுக்கு களிறு, ஒருத்தல், ஏறு, போத்து, இரலை, கலை, சேவல் என்று பல பெயர்கள் உண்டு என்று உதாரணத்துடன் விளக்கியுள்ளார்.
களிறு:
வேழக் குரித்தே விதந்துகளி றேன்றல் (579)
கேழற் கண்ணும் கழவரையின்றே (580)

யானைக்கு, பன்றிக்கு ஆண்பாலைக் களிறு என்று கூறப்பட்டது.
ஒருத்தல்:
புல்வாய் புலிபுழை மரையே கவரி
சொல்லிய கராமோ டொருத்தல் ஒன்றும் (581)
புல்வாய், புலி, மரை, கவரிமான், கரடி (கராம்) ஆகியவற்றின் ஆணிற்கு ஒருத்தல் என்ற பெயர் பெறும்.
வார்கோட்டியானையும் பன்றியும் அன்ன (582) ஆண் யானைக்கு தான் நீண்ட கொம்பு உள்ளதை அறிந்து, நீண்ட கொம்புடைய யானையும், பன்றியும் ஒருத்தல் என்கிறார்.
எருமையின் ஆணையும் ஒருத்தல் என்றார் (583)
எருமையின் ஆணினையும் ஒருத்தல் என்று கூறினார்.
ஏறு:
பன்றி புல்வாய் உழையே கவரி
என்றிவை நான்கும் ஏறென்ற்குரிய (584)
பன்றியும், புல்வாய், உழை, கவரிக்கு ஏறு என்று ஆணுக்கு கூறுவர்.
எருமையும், மரையும் ஆணுக்கு ஏறு என்பர் (585)
கடல் வாழ் சுறாவும் ஏறெனப்படுமே (586)
சுறாவானது ஒரு மீனினம். இது கடலில் வாழும் என்பதை அறிந்து கடல்வாழ் சுறாவின் ஆணிற்கு ஏறு என்கிறார்.
போத்து:
எருமை, புலி, மரை, மான் ஆகியவற்றின் (587) ஆணுக்கு போத்து என்றும், நீர் வாழ் சாதியும் அதுபெறற் குரிய (588) நீர்வாழ் உயிர்களுள் முதலையின் ஆணும் போத்து என்றும் கூறுவர்.
இரலை, கலை:
இரலையும், கலையும் புல்வாய்க்குரிய (590)
மானின் ஆணிற்கு இரலை, கலை என்றும் பெயர்.
மோத்தை:
ஆட்டின் ஆணிற்கு மோத்தை என்றும் (592)
சேவல்:
சேவற் பெயர்க் கொடை சிறகொடு சிவணும்
மாயிருந் தூவி மயிலலங்கடையே (593)
ஆண் மயிலுக்கு அழகிய தூவி இருப்பதை நன்றாக உணர்ந்து, அழகிய பெரிய தூவிகளையுடைய மயில் அல்லாத மற்ற பறவைகளின் ஆணுக்கு சேவல் என்று மிக அழகாக விளக்கியுள்ளார்.
பெண்பாற் பெயர்கள்:
விலங்குகளின் பெண்பாலிற்கும் சில குறிப்பிட்ட பெயரான பிடி, பெட்டை, பேடை, பெடை, அளகு, பிணை, பிணவு, நாகு, மூடு, கடமை, பாட்டி, மந்தி போன்றவைகளை விலங்குகளின் உதாரணத்துடன் விளக்கப்பட்டுள்ளது.
1. பிடி:
பிடியென் பெண்பெயர் யானை மேற்றே (596)
பிடி என்னும் பெண்பெயர் பெண் யானையை குறிக்கும்.
2. பெட்டை:
ஒட்டகங்குதிரை, கழுதை மரையிவை
பெட்டை யென்னும் பெயர்க்கொடைக்குரிய (597)
ஒட்டகம், குதிரை, கழுதை, மரை ஆகியவற்றின் பெண்ணுக்கு பெட்டை என்றும் பெயர் பெறும்.
3. பேடை, பெட்டை:
இவை பெரும்பாலும் பறவைக்கே வரும்.
4. அளகு:
கோழி கூகை யாயிரண் டல்லவை
சூழுங் காலை அளகெனல் அமையா (600)
கோழி, கூகை இரண்டை தவிர மற்றவை அளகு என்று கூறப்பெறாது, அளகு என்றும் பெயர் பெண் மயிலுக்கும் உண்டு.
5. பிணை:
புல்வாய், கவரிமான் ஆகியவற்றின் பெண்ணுக்கு பிணை என்ற பெயர் வழங்கும் (602)
6. பிணவு:
பன்றி புல்வாய் நாயென மூன்றும்
ஒன்றிய என்ப பிணவென் பெயர்க்கொடை (603)
பன்றி, புல்வாய், நாய் ஆகியவற்றின் பெண்ணிற்கு பிணவு என்று பெயர்.
7. ஆ:
பெற்றமும் எருமையும் மரையும் ஆவே (605)
எருமையும், மரையின் பெண்ணிற்கு ஆ ஆகும்.
8. நாகு:
எருமையும் மரையும் பெற்றமும் நாகே (607)
எருமை, மரையின் பெண்ணிற்கு நாகு என்று பெயர்.
நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே (608)
நீரில் வாழும் சங்கு இனமும் (நந்தும்) நத்தையின் பெண்ணிற்கும் நாகு என்று பெயர்.
9. மூடு, கடமை:
ஆட்டின் பெண்பாலுக்கு மூடு, கடமை என்று பெயர்.
10. மந்தி:
குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி
குரங்கும், முசு, ஊகம் இவற்றின் பெண் பெயர் மந்தியாகும்.
தொல்காப்பியத்தில் உள்ள மரபியலில் மிக அழகாக விலங்குகள் பற்றி ஆராய்ந்து, விளக்கியுள்ளார். உயிர்களை அதனுடைய தன்மையை வைத்து அதை ஆறு வகையாக பிரித்துள்ளார். மற்றும் விலங்குகளுக்கும் இளமையில் அதற்தெற்று தனி பெயர் உண்டு என்றும், ஆண், பெண் என்ற இருபாலுக்கு வெவ்வேறு பெயர் உண்டு என்பதை மிக அழகாக விவரித்துள்ளார். இந்தப் பெயர் விலங்குகளுக்கு விலங்கு மாறுபட்டு இருப்பதை மிக அருமையாக விவரித்துள்ளார். தொல்காப்பியமானது ஒரு சிறப்பான காப்பியமாகும்.
நன்றி: தொல்காப்பியம் காலமும் பண்பாடும்

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...