Tuesday, 20 August 2013

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி 35 பேர் பலி பீகாரில் இன்று காலை சோகம்



பாட்னா:பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் ரயில் ஏறுவதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் மீது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். பீகார் மாநிலம், கஹாரியா மாவட்டத்தில் உள்ள கத்யானி ஸ்தன் என்ற ஊரில் புகழ்பெற்ற சிவன் கோயில் உள்ளது. நேற்று விடுமுறை என்பதால் இங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் இன்று காலை ஊர் திரும்புவதற்காக அங்குள்ள ரயில் நிலையத்திற்கு வந்தனர். அப்போது 2வது பிளாட்பாரத்தில் பாசஞ்சர் ரயில் நின்று கொண்டிருந்தது. அதில் ஏறுவதற்காக முதல் பிளாட்பாரத்திலிருந்து குதித்து தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

 அப்போது அந்த தண்டவாளத்தில், சாகர்சா பாட்னா ராஜ்ராணி எக்ஸ்பிரஸ் ரயில் மிக வேகமாக வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ரயில், தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் மீது மோதியது. இதில் பலர் உடல் சிதறி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் மரண ஓலமிட்டனர். ரயில் நிலையம் முழுவதும் பரபரப்பானது. இதற்கிடையே, எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் தண்டவாளத்தை கடப்பதை கவனிக்காமல் வேகமாக வந்த அந்த ரயிலின் டிரைவர் மீது கோபமடைந்த பயணிகள், அவரை இன்ஜின் பெட்டியிலிருந்து வெளியே பிடித்து இழுத்தனர். அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். ரயில் நிலைய அதிகாரிகள் தலையிட்டு அவரை மீட்டனர். இருப்பினும் ஆத்திரம் தீராத பயணிகள் அவர்களை சிறைபிடித்தனர்.

இந்நிலையில், பயணிகள் பலியான தகவல் அறிந்த உள்ளூர் போலீசாரும், மீட்பு படையினரும் விரைந்து வந்தனர். வன்முறை கூட்டத்தை சமாதானப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த விபத்தில் 35 பேர் வரை உயரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும், இன்னும் முழு விவரம் வெளிவரவில்லை. விபத்து பற்றி ரயில்வே தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

Monday, 19 August 2013

செவ்வாய் கிரகத்துக்கு பயணம் 1800 இந்தியர்கள் முன்பதிவு



மும்பை: அறிவியல் வளர, வளர மனிதர்களின் சாதனைகளும் வளர்ந்தபடியே உள்ளன. மனிதர்கள் விரைவிலேயே பூமியைவிட்டு வெளியே வேற்று கிரகங்களில் வசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு விடும் என்று பெரும்பாலானோர் நம்புகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இப்போதே நிலாவுக்கு பயணத் திட்டம், நிலாவில் நிலம் வாங்கும் திட்டம், செவ்வாய் பயணத் திட்டம் என இணையதளங்களில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் ஏராளமான ஆர்வலர்கள் இந்த திட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நெதர்லாந்தை சேர்ந்த மார்ஸ் ஒன் என்ற நிறுவனம் 2020ல் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கு பயண திட்டங்களை வடிவமைத்துள்ளது. இதையடுத்து செவ்வாய் கிரகத்துக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவு கட்டணம் 7 டாலர் என அறிவித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 1 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்தியர்கள் சிலரும் செவ்வாய் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த மே மாதம் இந்த திட்டத்தில் வெறும் 5 இந்தியர்கள் மட்டுமே முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால் ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...