Wednesday, 12 June 2013

கொலையை தூண்டும் பேராசை எண்ணம்




தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை அடுத்து, நகைக்கு ஆசைப்பட்டு செயின் பறிக்கும் சம்பவங்களும், கொலைகளும் அதிகம் நடந்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் பெரும்பாலும் திருடர்களும் கொள்ளையர்களும்தான் ஈடுபட்டு வந்தனர். தற்போது, உறவினர்களும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். மதுரை அருகே நகைக்காக மாமியாரை கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்திருக்கிறார் மருமகள். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை அருகே உள்ள திருநகரை சேர்ந்தவர் குமராண்டி. இவரது மனைவி முத்துப்பிள்ளை. 65 வயது மூதாட்டி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குமராண்டியை விட்டு பிரிந்த முத்துப்பிள்ளை, விளாச்சேரியில் தனியாக வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்தார். தனது நகைகளை விளாச்சேரியிலுள்ள வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்தார். லாக்கர் சாவியை தனது கழுத்தில் அணிந்திருக்கும் செயின்களுடன் சேர்த்து தொங்க விட்டிருப்பார். இவர், தனது  வீட்டில் கயிறால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். நகைக்காக இவரை மர்மநபர்கள் கொலை செய்ததாக சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையே, முத்துப்பிள்ளையின் தங்கை தாழைபேச்சி, மருமகள் ராஜேஸ்வரி மீது சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் புகார் கொடுத்தார். திருநகர் போலீசார் முத்துப்பிள்ளை உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனை அனுப்பினர். மருமகள் ராஜேஸ்வரியிடம் நடத்திய விசாரணையில், நகைகளுக்கு ஆசைப்பட்டு எனது மாமியார் முத்துப்பிள்ளையை கொல்ல திட்டம் தீட்டினேன். அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தேன். அதை குடித்து மயங்கிய அவரின் கழுத்தை கயிறால் இறுக்கி கொன்றேன் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீசார் ராஜேஸ்வரியை கைது செய்தனர்.

செலவு அதிகமாக இருக்கிறது, ஆனால் போதுமான வருமானம் இல்லாத நிலை. இதுதான் அடுத்தவரின் பொருளுக்கு ஆசைப்பட வைக்கிறது. யாருக்கு தெரியப் போகிறது என்ற தைரியத்தில் தப்பான வழிகளில் ஈடுபடுகின்றனர். திருட்டில் ஆரம்பிக்கும் இந்த தீய பழக்கம், கொலை செய்யவும் துணிச்சலை கொடுத்து விடுகிறது. அப்போது உறவினராச்சே என்றுகூட பார்ப்பதில்லை. ஆசை கண்ணை மறைத்து விடுகிறது. அந்த ஆசையே அவர்களை பாவத்தில் தள்ளி விடுகிறது. சிக்கிக் கொள்ளும்போது, தீராத பழியுடன் சிறைக்குப் போக நேரிடுகிறது. ஆசையை வென்றால் ஆபத்தில்லை.         TAMILMURASU.ORG

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...