Monday, 27 August 2012

கொலைகாரனாக்கிய குடி மயக்கம்


சரக்கு உள்ளே போய் விட்டால் மாமா, மச்சினன் தெரியாது, நண்பன் யார் எனத் தெரியாது. அந்த அளவுக்கு மயக்கத்தில் இருப்பார்கள். அந்த மயக்கத்தில் சண்டை போடுவதும், தகராறு செய்வதும் நடக்கும். ஆனால் போதையில் ஏற்பட்ட தகராறில் மீன்வெட்டும் கத்தியால் நண்பனை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டார் ஒருவர். கொலை செய்யப்பட்டவருக்கு திருமணமாகி 3 மாதம்தான் ஆகிறது என்பது கூடுதல் பரிதாபம். சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் அருண் என்ற பென்னி. வானகரத்தில் உள்ள மார்க்கெட்டில் மீன் வாங்குவோருக்கு அதை சுத்தம் செய்து கொடுப்பார். 

அதே பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரும் அதே வேலை செய்கிறார். இருவரும் நண்பர்கள். தினமும் மாலையில் வேலை முடிந்ததும் ஒன்றாக மது குடிக்க செல்வார்கள். வழக்கம்போல் இருவரும் டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர். போதை அதிகமானதும் பாரில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டிற்கு நடந்து சென்றனர். வரும் வழியில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் பார்த்திபன் இடுப்பில் வைத்திருந்த மீன்வெட்டும் கத்தியை எடுத்து அருணின் கழுத்து, முகம், வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். 

நிலைகுலைந்து போன அருண், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்தும் அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கையில் கத்தி வைத்திருந்ததால் பார்த்திபனை யாரும் நெருங்கவில்லை. பார்த்திபன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகொலை செய்யப்பட்ட அருணுக்கு திருமணமாகி மூன்று மாதம் ஆகிறது. இவரது மனைவி நந்தினியின் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பார்த்திபனை தேடி வருகிறார்கள்.
பெரும்பாலான பிரச்னைகளுக்கு மதுதான் காரணமாக இருக்கிறது. கூலித் தொழிலாளிகள் பலர் மதுவுக்கு அடிமையாகி கிடக்கின்றனர்.

வேலை முடிந்ததும் டாஸ்மாக் செல்லாமல் வீட்டுக்கு செல்வதில்லை. சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை அங்கேயே செலவழித்து விடுகிறார்கள். வீட்டு செலவுக்கு பணம் கொடுப்பதில்லை. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்படுகிறது. குடித்து விட்டு வந்து மனைவி, குழந¢தைகளை அடிப்பது, தெரு முழுவதும் தகராறு செய்வது நடக்கிறது. இந்த தகராறு வெட்டுக் குத்தாக மாறும்போது, பலர் பலியாகி விடுகிறார்கள். அதற்கு காரணமானவர்கள் சிறைக்கு போகிறார்கள். இதனால் இவர்களின் குடும்பம் நடுத் தெருவுக்கு வந்துவிடுகிறது. குடியை மறந்தால்தான் குடும்பம் உருப்படும்.

Wednesday, 4 July 2012

ஆட்டோமொபைல் டிசைனிங் துறைக்கு மவுசு


ஆட்டோமொபைல் துறை உலகின் தவிர்க்க முடியாத துறைகளில் முதன்மை நிலையில் கொடி கட்டி பறக்கிறது. நாளுக்கு நாள் எண்ணற்ற மாற்றங்களுடன் தனக்கான பொலிவை தக்க வைத்துக்கொள்ளும் இத்துறையில் வேலைவாய்ப்புக்கு பஞ்சம் இல்லை. ஆட்டோமொபைல் டிசைனிங் தொடர்பான படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் மத்தியில் மவுசு அதிகம். உலக அளவில் இதற்கான நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு லட்சங்களில் ஊதியத்துடன் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்தியாவை பொறுத்த வரை சில முக்கிய கல்வி நிறுவனங்கள், பலவிதமான போக்குவரத்து  மற்றும் ஆட்டோமொபைல் வடிவமைப்பு படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. அகமதாபாத்தில் செயல் பட்டும் வரும் தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனமானது (ழிமிஞி) போக்குவரத்து  மற்றும் ஆட்டோமொபைல் வடிவமைப்பில் இரண்டரை வருட முதுநிலை படிப்பை வழங்குகிறது.  போக்குவரத்து மற்றும் ஆட்டோமோடிவ் துறையில் சிறந்த தொழில்முறை நிபுணராவதற்கு  இப்படிப்பு  உதவுகிறது.


மேலும் இப்படிப்பில் ஆட்டோமொபைல்களை வடிவமைக்க மட்டுமே பயிற்சி அளிக்கப்படுவதில்லை. மாறாக அனைத்து வகை வாகனங்களையும் வடிவமைக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்படிப்பை முடித்தால் ஆட்டோமொபைல் துறைகளில் எளிதில் பணிவாய்ப்புகளை பெறலாம். நுகர்வோர் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு துறையிலும் சேரலாம். இப்படிப்பில் சேருவதற்கு மெக்கானிக்கல், தயாரிப்பு அல்லது ஆட்டோமொபைல் பொறியியல் துறையில்  பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். தேசிய வடிவமைப்பு கல்வி  நிறுவனத்தில்  இப்படிப்புக்கு கல்விக்கட்டணம் வருடத்துக்கு ரூ.1.5 லட்சம். படிப்பை முடிப்பவர்கள் ஆரம்ப நிலை ஊதியமாக வருடத்துக்கு ரூ.5 லட்சம் வரை பெறுகிறார்கள் என இக்கல்வி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 



இது தவிர மகாராஷ்டிரா தொழில்நுட்ப கல்வி நிறு வனத்தில் இத்துறை சார்ந்த 6 மாதகால அளவு கொண்ட குறுகியகால முதுநிலை டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகிறது.

Sunday, 24 June 2012

அஞ்சல் வழியில் அக்குபஞ்சர் படிப்பு



அக்குபஞ்சர் என்பது பண்டைய காலம் தொட்டு கடைபிடிக்கப்படும் மருத்துவ முறை என்பதுடன் இதில் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. நோய்களுக்கு தக்கவாறு துல்லிய முனை கொண்ட ஊசிகளை உடலில் செருகி சிகிச்சை அளிப்பதே அக்குபஞ்சர் சிகிச்சை முறை. சமீப காலமாக இயற்கை சார்ந்த மருத்துவங்களை மக்கள் விரும்ப தொடங்கியுள்ளனர். சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம், அக்குபஞ்சர் போன்ற மருத்துவ முறைகளை நாடத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே இயற்கை முறை மருத்துவத்தில் பட்டப்படிப்பு பெற்றவர்கள் கூடுதல் தகுதியாக அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான படிப்பை மேற்கொள்கின்றனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் அக்குபஞ்சர் மருத்துவமனைகளும் மாவட்டங்கள் தோறும் அதிகரித்து வருகின்றன. வெளிநாடுகளிலும் இந்த சிகிச்சை முறைக்கு கடும் கிராக்கி உள்ளது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் பெரும்பாலும் அக்குபஞ்சர் மூலமாகவே தீராத நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.



இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக் கழகம் (இக்னோ) டெல்லியிலுள்ள அக்குபஞ்சர் மற்றும் இயற்கை மருத்துவ  நிறுவனத்துடன்  இணைந்து அக்குபஞ்சர் டிப்ளமோ படிப்பை வழங்கி வருகிறது.  இப்படிப்பை குறைந்தது ஒரு ஆண்டிலும் அதிக பட்சமாக 3 ஆண்டிலும் படிக்கலாம். அலோபதி, ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி இவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு முடித்தவர்கள்  இப் படிப்பை மேற்கொள்ள தகுதியானவர்கள். இப்படிப்பை ஆன்லைன் மூலமாகவும் பிராக்டிகல் வகுப்புகள் மூலமாகவும் படிக்கும் வாய்ப்பு இந்தியாவிலேயே முதல் முறையாக தரப்படுகிறது. ஆன்லைன் தேர்வுகள், ஆண்டு இறுதித் தேர்வுகள் என்ற ரீதியில் உள் மதிப்பீட்டு முறையும் இப்படிப்பில் உண்டு. தியரி பாடங்களை ஆன்லைனில் படிக்கலாம். பிராக்டிகல் பயிற்சியை பெற விரும்பும் மருத்துவப் பட்டதாரிகள் இந்தியாவில் இக்னோ அமைக்கவிருக்கும் 8 மையங்களில் ஒன்றில் இதைப் படிக்கலாம். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே இப்படிப்பை மேற்கொள்ளலாம். மேலும் விவரங்களை இக்னோ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Saturday, 23 June 2012

சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க டிப்ஸ்

பத்து மணிக்கு மேல் வெளியில் தலை காட்டவே மககள் பயப்படுகின்றனர். வெயில் மண்டையைப் பிளக்கிறது. அரை மணி நேரம் வெயிலில் செல்ல நேர்ந்தால் கண் எரிச்சல், தோல் வறட்சி, வியர்வை, உடல் சோர்வு, சிறுநீர் தொற்று என பல பிரச்னைகள் வாட்டுகிறது. இது போன்ற சங்கடங்களில் இருந்து காத்துக் கொள்ள ஆலோசனை சொல்கிறார் தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி.  வெயில் நேரத்தில் எந்தப் பாதுகாப்பும் இன்றி வெளியில் செல்வதால் வியர்வை சங்கடத்தை ஏற்படுத்தும். தோல் வறட்சி காணப்படும். மேலும் வியர்வை அதிகரிப்பால் ஏற்கனவே தோல் பகுதியில் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகரிக்கும். அக்குள் மற்றும் முதுகுப் பகுதியில் இந்த அரிப்பு காணப்படும். உடல் சூட்டின் காரணமாக வெயில் கொப்புளம் மற்றும் வியர்குரு போன்ற தொல்லைகள் உண்டாகும். 

உடல் இயல்பான தட்பவெப்ப நிலைகளில் தோல் வியர்வை மூலம் இயற்கையாகவே வெப்ப மாறுபாடுகளை சரி செய்து விடும். நீண்ட நேரம் அதிக வெப்பநிலையில் இருக்கும் போது உடல் வெப்பக் கட்டுப்பாட்டு செயலிழக்கிறது. இதுவே பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம் ஆகும். கடும் வெப்பத்தின் காரணமாக வலியுடன் கூடிய வெப்பத் தசையிழுப்பு ஏற்படலாம். இதன் மூலம் உடல் உழைப்பில் ஈடுபடும் தசைகளும், வயிற்றுத் தசைகளும் பாதிக்கப்படுகின்றன. மேலும் அதிக வெப்பத்தின் காரணமாக சோர்வு அதிகரிக்கும். மயக்கம், இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் குறைதல், தோல் குளிர்ந்து சுருங்குதல் போன்ற தொல்லைகள் உண்டாகும்.  வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு வெப்பத்தாக்கு ஏற்படலாம். நீரிழப்பு, மதுப்பழக்கம், இதய நோய்கள், கடும் உடற்பயிற்சி மற்றும் சில மருந்துகளை உட்கொள்வதால் வெப்பத்தாக்கு வரும். இயல்பாகவே வியர்வை சுரப்பு குறைவாக உள்ளவர்களை இது விரைவில் தாக்கும். இதயத்துடிப்பு அதிகரித்தல், சுவாசத்தின் வேகம் அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு போதுமான நீர் ஆகாரம், சரியான உணவு முறை மற்றும் வெயிலில் இருந்து காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வெயில்கால நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

பாதுகாப்பு முறை: வெயில் நேரத்தில் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்கவும். வெளியில் செல்லும் போது கையில் எப்போதும் தண்ணீர் பாட்டில் இருக்கட்டும். காட்டன் உடைகள் மட்டுமே வெயிலுக்கு ஏற்றவை. குளிர் கண்ணாடிகளைப் பயன்படுத்தி கண் எரிச்சலைத் தடுக்கலாம். மூன்று முறை குளிப்பதன் மூலம் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபடலாம். மேலும் பகல் 12 மணியில் இருந்து 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம். காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே கடுமையாக உழைக்கலாம். எடை குறைந்த மெல்லிய உடையை தளர்வாக அணியலாம். மது மற்றும் தேநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். சூடான உணவையும் தவிர்ப்பது நல்லது. தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆண்கள் வெளியில் செல்லும் போது முழுக்கை சட்டை, தொப்பி அணியலாம். வெயிலில் இருந்து தப்பிக்க குடை பயன்படுத்தலாம். பெண்கள் வாகனத்தில் செல்லும் போது வெயில்படும் இடங்களை மறைப்பது நல்லது. சன்ஸ்கிரீன் லோஷன் தடவுவதன் மூலம் தோல் கருப்பதைத் தவிர்க்கலாம். வியர்வை உற்பத்தியாகும் பகுதியில் பாக்டீரியாக்கள் செயல்புரிவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மருத்துவரின் ஆலோசனைப்படி சோப் மற்றும் லோஷன் உபயோகித்து துர்நாற்றத்தை விரட்டலாம்.

ரெசிபி

குகும்பர் ரய்தா: வெள்ளரி கால் கிலோ துருவிக் கொள்ளவும். புளிக்காத கெட்டித் தயிர் இரண்டு கப், துருவிய கேரட் அரைக்கப். பொடியாக நறுக்கிய வெங்காயம் கால் கப், எலுமிச்சை ஜூஸ் ஒரு ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் தேவையான அளவு. அனைத்தையும் ஒன்றாக சேர்த்துக் கலக்கி கொத்தமல்லித் தழை தூவி சாப்பிடலாம். உணவுக்குப் பின்னர் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் வெப்ப அதிகரிப்பைத் தடுக்கும். அடிக்கடி தாகம் ஏற்படுவது தடுக்கப்படும். தோல் எரிச்சல் போன்ற வெயில் தொந்தரவுகளில் இருந்து தப்பிக்கலாம்.

சின்ன வெங்காயக் குழம்பு: சின்ன வெங்காயம் கால்கிலோ உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளிக்கரைசல் ஒரு கப். வரமிளகாய் இரண்டு, மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தூள் 1 டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள் தூள் தேவையான அளவு. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை மற்றும் வறமிளகாய் சேர்த்து தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிரமாக வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் புளிக்கரைசல் சேர்த்து குழம்புபதத்துக்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். சின்ன வெங்காயத்தில் ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உள்ளது. மேலும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும். 

சிக்கன் ஆம்லெட்: 50 கிராம் சிக்கனை மூழ்கும் அளவுக்கு தண் ணீர் விட்டு வேக வைத்து கறியை மட்டும் தனியா எடுத்து மசித் துக் கொள்ளவும். இரண்டு முட்டையில் அரை டீஸ்பூன் மிளகுத் தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், கொத்தமல்லித் தழை அரை கப், எலுமிச்சை சாறு ஒரு துளி, வெங்காயம் நறுக்கியது அரை கப், பூண்டுத் துருவல் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை எடுத்துக் கொள் ளவும். முட்டையை நன்றாக அடித்த பின்னர் சிக்கன் மற்றும் அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கலக்கி ஆம்லெட் தயாரிக் கலாம். இப்படி செய்வதன் மூலம் சிக்கனில் இருக்கும் சூடு குறைக் கப்படுகிறது. சத்தான மற்றும் சுவையான உணவாக இருக்கும்.

டயட்
.
“தி னமும் எட்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். பழச்சாறுகள், இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரி, கொய்யா ஆகியவற்றை சாலடாக உணவுக்குப் பின்னர் எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர்க்காய்கள் புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய், கீரை வகைகள், பழ வகைகளும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தயிர், மோர் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். கம்பங்கூழ், கரும்புச் சாறு ஆகியவையும் அருந்தலாம். 

ஊற வைத்த வெந்தயம் அல்லது வெந்தயப் பொடி இதில் ஏதாவது ஒன்றை காலை நேரத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சூட்டைக் குறைக்கலாம். எலுமிச்சையை சாலட், ரசம் ஆகியவற்றில் பயன்படுத்தலாம். அதிக நார்ச்சத்து மற்றும் கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும். அதிக மசாலா, அசைவ உணவுகள் மற்றும் எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்ப்பது நல்லது. கீரை, வெல்லம், பேரிச்சை, பால், முட்டை, கடலைக்கொட்டை ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் வெயிலால் இழந்த சக்தி உடலுக்கு கிடைக்கும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.


பாட்டி வைத்தியம்

*  கருவேப்பிலையைப் பொடி செய்து மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து சாப்பிடுவதால் வெயில் காலத்தில் உண்டாகும் மலச்சிக்கல் சரியாகும். 
*  கானாம் வாழைக் கீரையை ஒரு கைப்பிடி அளவுக்கு அரைத்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும். 
*  ஐந்து கிராம்பு மற்றும் 20  சீரகத்தைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் உஷ்ணத்தால் ஏற்படும் தலைவலி குறையும். 
*  குப்பைக் கீரையை பருப்பில் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும். 
*  கொத்தமல்லியை நன்றாக அரைத்து உருண்டையாக்கி வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் கண்கள் குளிர்ச்சி அடையும். 
*  சர்ப்பகந்தா இலையை வதக் கிச் சாறு எடுத்து காலை, மாலை இரண்டு வேளையும் பாலில் கலந்து குடித்தால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
*  சீரகத்தை தண்ணீரில் கொதி க்க விட்டுக் குடித்தால் ரத்த அழுத்த நோய் கட்டுப்படும். 
*  சீரகம், சுக்கு, ஏலம், நெல்லிமுள்ளி  ஆகியவற்றை சம அளவில் எடுத்துப் பொடி செய்து அதற்கு இணையாக சர்க்கரையைப் பொடி செய்து கலந்து கொள்ளவும். தினமும் காலை உணவுக்குப் பின்னர் அரை ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களைத் தடுக்கலாம்.

Monday, 11 June 2012

குடும்பம் நடத்த நினைத்தால் ரூ.16 லட்சம் சம்பாதிக்க வேண்டும் : இங்கிலாந்து அரசு




லண்டன்: இந்தியா உள்பட வெளிநாட்டினரை திருமணம் செய்யும் இங்கிலாந்துக்காரர்கள் ஆண்டுக்கு ரூ.16 லட்சம் சம்பாதிக்க வேண்டும். அப்போதுதான் மனைவி அல்லது கணவனை இங்கிலாந்துக்கு அழைத்து வர அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் 9ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இங்கிலாந்துக்காரர்கள் பலர் இந்தியா உள்பட பல வெளிநாட்டினரை திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அவர்கள் தங்கள் மனைவி அல்லது கணவனை இங்கிலாந்துக்கு அழைத்து வந்து குடியுரிமை பெறுகின்றனர். ஆனால், இங்கிலாந்து குடியுரிமை பெறுவதற்காக பெண்களை கடத்துவதும், போலி திருமணங்களும், குடும்ப விசா பெறுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
மேலும், இங்கிலாந்துக்கு வரும் வெளிநாட்டினருக்கு ஆங்கில மொழியும் தெரியவில்லை. இதனால் சமுதாயத்தில் மற்றவர்களுடன் சகஜமாக பழக முடிவதில்லை. மேலும், சரியான வருமானம் இல்லாமல் இங்கிலாந்துக்கு வந்து பலர் கஷ்டப்படுகின்றனர். அவர்கள் நாட்டுக்கு பாரமாக இருக்கின்றனர்.
இதுபோன்ற பல பிரச்னைகளை சமாளிக்க குடியுரிமை வழங்கும் நடைமுறையை இங்கிலாந்து அரசு கடுமையாக்கி உள்ளது. 

அதன்படி, ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளை தவிர்த்து மற்ற வெளிநாட்டு பெண் அல்லது ஆணை திருமணம் செய்யும் இங்கிலாந்துக்காரர்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.16 லட்சம் சம்பாதிக்க வேண்டும். குழந்தை இருந்தால், அதற்கு அதிகமாக வருவாய் இருக்க வேண்டும். அப்போதுதான் வெளிநாட்டு மனைவி அல்லது கணவனுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் ஜூலை 9ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று உள்துறை செயலர் தெரசா கூறினார்.

Thursday, 23 February 2012

மு.க.அழகிரி குடும்பத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு





மதுரை,பிப்.23 - தயா என்ஜினீயரிங் கல்லூரி விவகாரத்தில் மு.க.அழகிரி குடும்பத்திற்கு நோட்டீஸ் அனுப்ப கலெக்டர் சகாயம் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் தயா என்ஜினீயரிங் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இது மத்திய மந்திரி மு.க.அழகிரிக்கு சொந்தமானது. இந்த கல்லூரி கட்டிடம் விவசாய கால்வாய் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டு இருப்பதாக விவசாய சங்க தலைவர் ராமலிங்கம் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் புகார் செய்தார். அந்த புகார் மனு தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு விசாரிக்க வேண்டுமென்று அழகிரி குடும்பத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்பேரில் அழகிரி சார்பில் ஜானகி ராமுலு கலெக்டர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவர் சில ஆவணங்களை கேட்டிருந்தார். இந்த நிலையில் தயா என்ஜினீயரிங் கல்லூரி கட்டிடம் தொடர்பான் நேற்று கலெக்டர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விவசாய சங்க தலைவர் ராமலிங்கம் கலெக்டர் முன்பு ஆஜராகி சில விளக்கங்களை அளித்தார்.
     ஆனால் இந்த விசாரணையின் போது மத்திய மந்திரி மு.க.அழகிரி குடும்பத்தின் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து இந்த விசாரணை 15 நாட்களுக்கு பிறகு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த தகவல் குறித்து மத்திய மந்திரி அழகிரி குடும்பத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார்.

என்கவுண்டரை எதிர்ப்போம்! :ஏன்..?



பொதுமக்களுக்கு தொடர்ந்து கொள்ளைகள் நடக்கிறதே? என்பது கவலை. அதனால் கொள்ளையர்கள் கொல்லப்பட்டார்கள் எனும் போது,
திருப்திப்பட்டுக் கொள்கின்றார்கள். ஆனால் கொல்லப்பட்டது உண்மையான கொள்ளையர்கள்தானா? என்ற சந்தேகமும், கொல்லப்பட்டது சரிதானா என்கின்ற கேள்வியும் சற்று ஆற அமர யோசிக்கும் போது எழும்.
அப்போது அது பற்றி விசாரிக்க முடியாது. ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் உயிர்தெழுந்து பேசப் போவதில்லை. இது சரிதானா..? எனக் கேட்கிறது  'என்கவுண்டரை எதிர்ப்போம்!' இக் கட்டுரை. கட்டுரையாளர் யுவகிருஷ்ணாவுக்கான நன்றிகளுடன் இங்கு அதை மீள்பதிவு செய்கின்றோம். - 
தமிழ்நாட்டின் நடுத்தர வர்க்கத்து மொக்கைகளுக்கு மீண்டும் ஒரு தீபாவளி. இந்திய மனோபாவம் முற்றிலுமாக போர்வெறி இதிகாசமான மகாபாரதத்தை பின்னணியாக கொண்டது. எனவேதான் கொலைகளை கொண்டாடுகிறார்கள். ‘இவனுங்களை எல்லாம் நடுரோட்டுலே வெச்சு சுட்டுக் கொல்லணும் சார்’, ‘கோர்ட்டுக்குல்லாம் கூட்டிக்கிட்டு போவக்கூடாது. லாக்கப்புலேயே மேட்டரை முடிச்சிடணும்’ என்று பஸ்ஸிலும், ட்ரெய்னிலும் பொழுதுபோக்குக்கு பேசுபவர்களுக்கு எவனையோ போட்டுத் தள்ளணும் என்கிற அனாவசிய வெறி. பொதுஜனத்துக்கு இப்படியொரு கொலைவெறி இருப்பதுதான் காவல்துறை, இராணுவம் மாதிரி சட்ட அங்கீகாரம் பெற்ற கொலைநிறுவனங்களுக்கு சாதகம். ‘மனித உரிமைகளை தூக்கி குப்பையில் போடு’ என்று துப்பாக்கியில் புல்லட்டுகளை நிரப்பிக்கொண்டு கிளம்பி விடுகிறார்கள்.
என்கவுண்டர்களுக்கு நியாயம் காட்டும் வகையில் பொதுமக்களின் கொந்தளிப்பினை சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால், தீவுத்திடல் அருகே சிறுவனை சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ அதிகாரி மீது என்கவுண்டர் பாயவில்லை என்பதை இங்கே நினைவுறுத்திப் பார்க்க வேண்டியது அவசியம். போலிஸின் துப்பாக்கிகள் ‘செலக்டிவ்’ ஆகத்தான் தோட்டாக்களை துப்புகிறது.
கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் மட்டும் எழுபத்தைந்து பேர் என்கவுண்டரில் பலியாகியிருப்பதாக செய்திகளில் அறிகிறோம். இங்கே நடைபெறுவது ஜனநாயகமா அல்லது இராணுவ ஆட்சியா என்கிற சந்தேகம் இதனால் உருவாகிறது. குற்றவாளிகள் என்று காவல்துறை சந்தேகப்படுபவர்களை என்கவுண்டரில் போடலாம், அதற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தேவை கேள்விக்குரியதாகிறது. நீதிமன்றங்கள், சட்டப் பணியாளர்களின் இருப்பு அவசியமற்றதாகிறது.
தேசப்பிதாவாக காந்தியை ஏற்றுக்கொள்ளும் தேசம், காந்தியத்தை பின்பற்றுவதாக பாவனை செய்யும் மக்கள் – எப்படி இப்படியொரு சூழல் வாய்க்கப்பட்ட இந்தியாவில் என்கவுண்டர்கள் கொண்டாடப்படுகின்றன என்பதை எப்படி யோசித்தாலும் பிடிபடவில்லை. தூக்கு, என்கவுண்டர் என்றதுமே குறிப்பாக மத அடிப்படைவாதிகளின் ஆதரவுதான் விண்ணதிர எதிரொலிக்கிறது. மதங்கள் மீது நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், எல்லா மதங்களும் ஏதோ ஒருவகையில் அன்பை போதிக்கின்றன என்பதை ஒப்புக் கொள்கிறோம். அப்படியெனில் இம்மதங்களை தீவிரமாக நம்புபவர்கள், பின்பற்றுபவர்கள் ஏன் அரசக்கொலைகளை ஆதரிக்கிறார்கள்? அவர்கள் தமக்கும் உண்மையாக இல்லை. தாங்கள் பின்பற்றும் மதங்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் உண்மை.

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...