லண்டன்: இந்தியா உள்பட வெளிநாட்டினரை திருமணம் செய்யும் இங்கிலாந்துக்காரர்கள் ஆண்டுக்கு ரூ.16 லட்சம் சம்பாதிக்க வேண்டும். அப்போதுதான் மனைவி அல்லது கணவனை இங்கிலாந்துக்கு அழைத்து வர அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் 9ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இங்கிலாந்துக்காரர்கள் பலர் இந்தியா உள்பட பல வெளிநாட்டினரை திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அவர்கள் தங்கள் மனைவி அல்லது கணவனை இங்கிலாந்துக்கு அழைத்து வந்து குடியுரிமை பெறுகின்றனர். ஆனால், இங்கிலாந்து குடியுரிமை பெறுவதற்காக பெண்களை கடத்துவதும், போலி திருமணங்களும், குடும்ப விசா பெறுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இங்கிலாந்துக்கு வரும் வெளிநாட்டினருக்கு ஆங்கில மொழியும் தெரியவில்லை. இதனால் சமுதாயத்தில் மற்றவர்களுடன் சகஜமாக பழக முடிவதில்லை. மேலும், சரியான வருமானம் இல்லாமல் இங்கிலாந்துக்கு வந்து பலர் கஷ்டப்படுகின்றனர். அவர்கள் நாட்டுக்கு பாரமாக இருக்கின்றனர்.
இதுபோன்ற பல பிரச்னைகளை சமாளிக்க குடியுரிமை வழங்கும் நடைமுறையை இங்கிலாந்து அரசு கடுமையாக்கி உள்ளது.
அதன்படி, ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளை தவிர்த்து மற்ற வெளிநாட்டு பெண் அல்லது ஆணை திருமணம் செய்யும் இங்கிலாந்துக்காரர்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.16 லட்சம் சம்பாதிக்க வேண்டும். குழந்தை இருந்தால், அதற்கு அதிகமாக வருவாய் இருக்க வேண்டும். அப்போதுதான் வெளிநாட்டு மனைவி அல்லது கணவனுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் ஜூலை 9ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று உள்துறை செயலர் தெரசா கூறினார்.
