உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான இளம் பெண், கடந்த Sep 14ஆம் தேதி நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அப்பெண்ணின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியது. உடனே டெல்லியில் உள்ள சாஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 15 நாட்களுக்கும் மேலாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் வட இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.
இளம்பெண்ணிற்கு நீதி வேண்டும்
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள், திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். இறந்த பெண்ணிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த சூழலில் உயிரிழந்த பெண்ணின் உடலுடன் அவரது குடும்பத்தார் டெல்லி மருத்துவமனையில் இருந்து நேற்று இரவு புறப்பட்டனர்.
அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸிற்கு குடும்பத்தார் செல்வதற்கு முன்னரே உயிரிழந்த பெண்ணின் உடலை போலீசார் கொண்டு சென்றுவிட்டனர். இதையடுத்து உடலை நேரடியாக மயானத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இளம்பெண்ணின் தந்தை ஹத்ராஸ் வந்தவுடன், அவரை அவசர அவசரமாக மயானத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் உடனடியாக அவரது மகளின் உடலை எரிக்க வேண்டும் என்று போலீசார் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு உயிரிழந்த பெண்ணின் சகோதரர் பேட்டியளிக்கையில் தெரிவித்துள்ளார். மற்றொரு உறவினர் கூறுகையில், பெண்ணின் தந்தை சுமார் 40 பேருடன் மயானத்திற்கு சென்றார். அப்போது பூல் கார்ஹி கிராமத்திற்கு அருகேவுள்ள மயானத்தில் பெண்ணின் உடலை உடனடியாக எரித்தாக வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
வழக்கை மூடி மறைக்கும் முயற்சியா?
ஏன் இவ்வளவு அவசரம் காட்டினர் என்று தெரியவில்லை. எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு என்ன தான் வேண்டும். என்ன மாதிரியான அரசியல் இது? எங்கள் மகள் வன்புணர்விற்கு ஆளாக்கப்படவில்லை என்று ஏதேதோ கதை கூறுகின்றனர். இந்த விஷயத்தை அப்படியே மூடி மறைக்கத் தான் இப்படி செய்ததாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் நேற்று நள்ளிரவே இளம்பெண்ணின் உடல் எரிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மயானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் யாரையும் அப்பகுதியில் அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதுபற்றி ஹத்ராஸ் காவல்துறை கண்காணிப்பாளர் விக்ராந்த் விர் கூறுகையில், அனைத்து நடவடிக்கைகளும் அப்பெண்ணின் குடும்பத்தார் விருப்பப்படியே நடந்துள்ளது என்று தெரிவித்தார்.
விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
இந்த சம்பவம் விசாரிக்க மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். விரைவாக விசாரித்து அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.