Saturday, 2 December 2017

உத்தரப்பிரதேசம் இந்தியாவின் பாதுகாப்பற்ற மாநிலம்

உத்தரப் பிரதேசத்தில் 16 மேயர் பதவிகளில், 14 இடங்களைக் கைப்பற்றிய மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது பி.ஜேபி. இதை விடுங்கள்... தேசியக் குற்றப்பிரிவு ஆணையம் 2016-ம் ஆண்டு நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டது. இதில், உத்தரப்பிரதேசம்தான் தேசத்தில் நடக்கும் 14 சதவிகிதக் குற்றங்களுக்குக் காரணமாகவுள்ளது என்ற தகவல் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது.
இந்தியாவில் 2016-ம் ஆண்டில் மட்டும் 2.6 சதவிகித குற்றங்கள் அதிகரித்துள்ளன. அந்த ஆண்டு 48,31,515 குற்றங்கள் நாடு முழுவதும் நடந்துள்ளன. இது, 2015-ம் ஆண்டைவிட 21,000 அதிகம்.
குற்றங்களில், கடத்தல் குற்றங்கள்தான் முதலிடத்தில் உள்ளன. 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடத்தல் குற்றங்கள் 6 சதவிகிதம் அதிகரித்துள்ளன. கொள்ளைக் குற்றங்கள் 11.85 சதவிகிதம் குறைந்துள்ளன. இந்தியாவில் 2016-ம் ஆண்டு மட்டும் 30,450 பேர் கொலை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் அதிக சொத்துக் குவிப்பு குற்றங்கள் நடைபெறும் நகரமாக டெல்லி உள்ளது. ஆள் கடத்தல் குற்றங்களில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. சிறப்பு வழக்குகள் சென்னையில் அதிகம் பதிவாகியுள்ளன.

உத்தரப்பிரதேசம் இந்தியாவின் பாதுகாப்பற்ற மாநிலம்:

உத்தரப்பிரதேசம்தான் இந்தியாவில் நடக்கும் குற்றங்களில் அதிக பங்கை வைத்துள்ளது. பின்வரும் குற்றங்களில் டாப் இடம் உத்தரப்பிரதேசத்துக்குத்தான்.
1. இந்தியாவில் சைபர் க்ரைம் குற்றங்கள் அதிக அளவில் நடைபெறும் மாநிலம் - 2,639 வழக்குகள்
2. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் அதிகம் உள்ள மாநிலம் - 4,954 வழக்குகள்
3. குழந்தைகள் அதிக அளவில் கடத்தப்படும் மாநிலம் - 9,657 வழக்குகள்
4. பெண்கள், கணவன் மற்றும் உறவினர்களால் பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்களில் 3-வது இடம் - 11,156 வழக்குகள்
5. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இந்திய அளவில் 2-வது இடம் - 4,816 வழக்குகள்
6. இந்தியாவில் அதிக அளவில் பெண்கள் கடத்தப்படும் மாநிலம் - 12,994 வழக்குகள்
7. பொதுவெளியில் பெண்கள் பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்களில் 2-வது இடம் - 11,335 வழக்குகள்
இப்படிப் பல குற்றங்களில் முதல் மூன்று இடங்களுக்குள் உத்தரப்பிரதேசம் உள்ளது. அதேபோல், இந்தியாவில் அதிக மதக்கலவரங்கள் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறுகின்றன. 2017-ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம்வரை மட்டும் மதக்கலவரங்கள் சிறியதும், பெரியதுமாய் 60 சம்பவங்கள் உ.பி-ல் நடைபெற்றுள்ளன. இதில், 16 பேர் இறந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில்தான் சில மாதங்களுக்கு முன்பு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் மருத்துவமனையில் இறந்தன. இந்தியாவில் நிறைய ஆழ்துளைக் கிணறு மரணங்கள் நடக்கும் மாநிலங்களிலும் உத்தரப்பிரதேசமே முதலிடம் வகிக்கிறது.

Lashkar-e-Taiba தலைவர் Hafiz Muhammad Saeed வீட்டுக் காவலில் இருந்து விடுவித்து பாகிஸ்தான் நீதிமன்றம்

மும்பையில் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா தலைவர் ஹஃபீஸ் சயீதை வீட்டுக் காவலில் இருந்து விடுவித்து பாகிஸ்தான் நீதிமன்றம், உத்தரவிட்டிருப்பது எந்தவித அதிர்ச்சியையோ, வியப்பையோ ஏற்படுத்தவில்லை. ஆரம்பம் முதலே அவரது கைதும், அவரை வீட்டுக் காவலில் வைத்திருந்ததும் வெறும் கண்துடைப்புதான் என்பது உலகத்துக்கே தெரியும்.
ஹஃபீஸ் சயீது மீது எந்தவொரு பயங்கரவாதக் குற்றச்சாட்டின் அடிப்படையிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. பொது ஒழுங்குக்குப் பங்கம் விளைவிக்க முயன்றார் என்கிற வலுவில்லாத குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவர்மீது குறிப்பிட்ட எந்தவிதக் குற்றச்சாட்டும் அரசால் முன்வைக்க முடியாததைக் காரணம் காட்டி, இப்போது பாகிஸ்தான் நீதிமன்ற நீதிபதிகள் அவரது நான்காண்டு வீட்டுக் காவலை விலக்கி இருக்கின்றனர்.
1990-இல் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பை உருவாக்கியதைத் தொடர்ந்து, பல்வேறு பயங்கரவாதச் செயல்களுக்கான திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றுவதிலேயே சயீதின் கவனம் முழுவதும் இருந்தது. 1993 முதல் இந்திய ராணுவத்தின் மீதும், பொதுமக்கள் மீதும் தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தியவர் ஹஃபீஸ் சயீது என்று அமெரிக்க உளவுத்துறையின் கோப்புகள் தெரிவிக்கின்றன. 2001 நாடாளுமன்றத் தாக்குதலுக்கும், 2006-இல் மும்பை ரயில் நிலையத்தில் நடந்த தொடர் வெடிகுண்டுத் தாக்குதலுக்கும் லஷ்கர்-ஏ-தொய்பா காரணமாக இருந்திருக்கிறது. 2001 டிசம்பர் 13 இந்திய நாடாளுமன்றத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, டிசம்பர் 21-ஆம் தேதி பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்ட ஹஃபீஸ் சயீது மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டார். இந்தியாவின் கடுமையான கண்டனத்தைத் தொடர்ந்து மே மாதம் கைது செய்யப்பட்டு, அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். 2006 மும்பை ரயில் நிலையத் தாக்குதலைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, லாகூர் உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 28-ஆம் தேதியே விடுதலை செய்யப்பட்டு விட்டார். அதே நாள் மீண்டும் கைது செய்யப்பட்டாலும், மீண்டும் நீதிமன்ற உத்தரவின்படி அக்டோபரில் வெளியில் வந்துவிட்டார்.
இப்படி ஹஃபீஸ் சயீது பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்படுவதும், நீதிமன்றம் அவரை விடுவிக்க உத்தரவிடுவதும் தொடர்கதை. இதன் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவமும், ராணுவத்தை அனுசரித்து நடக்கும் நீதித்துறையும் இயங்குகின்றன என்பதுதான் உண்மை. ஹஃபீஸ் சயீதை நீதிமன்றம் விடுவித்திருப்பதன் பின்னணியில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் கட்டுப்பாட்டில் உள்ள அரசியல் தலைமைக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் அதிகாரப் போட்டிதான் காரணம் என்றுகூடச் சொல்லலாம்.
ஹஃபீஸ் சயீதின் மீது வலுவான ஆதாரங்களுடன் குற்றச்சாட்டைப் பதிவு செய்யவோ, அதனடிப்படையில் அவரைக் கைது செய்யவோ முடியவில்லை என்பது, நவாஸ் ஷெரீபின் கரம் வலுவிழந்திருக்கிறது என்பதன் அறிகுறி. அதேபோல, நீதிமன்றம் சயீதை விடுவித்திருப்பது பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகரித்து வரும் செல்வாக்கை உணர்த்துகிறது.
நவாஸ் ஷெரீபின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சி இரண்டையுமே வலுவிழக்கச் செய்வது என்பதுதான் ராணுவத்தின் திட்டம். இவற்றிற்கு மாற்றாகப் பல சிறிய கட்சிகளை ராணுவம் மறைமுகமாக ஊக்குவித்து வருகிறது. கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் கட்சியும் அதில் ஒன்று. லஷ்கர்-ஏ-தொய்பாவையே ஓர் அரசியல் இயக்கமாக மாற்றும் திட்டத்துக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் ஆசி இருக்கிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கும் நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவால் விடுதலை செய்யப்பட்டிருக்கும். ஹஃபீஸ் சயீது தனது தீவிரவாத முகத்துக்கு மேல் அரசியல்வாதி முகமூடி அணிந்து கொண்டாலும் வியப்படையத் தேவையில்லை.
ஹஃபீஸ் சயீது தண்டிக்கப்பட்டால், பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது என்று பொருள். ராணுவத்தால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்படுபவைதான் லஷ்கர்-ஏ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள். இந்த அமைப்புகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதன் மூலம் தனது கட்டுப்பாட்டில் பாகிஸ்தானின் ஆட்சியாளர்களை வைத்துக் கொண்டிருக்கிறது அந்த நாட்டு ராணுவம். அதனால், ஹஃபீஸ் சயீது விடுவிக்கப்பட்டது எதிர்பாராததல்ல.
ஒவ்வொரு முறை ஹஃபீஸ் சயீது விடுவிக்கப்படும்போதும், அடுத்த சில வாரங்களில் எங்கேயாவது தீவிரவாதத் தாக்குதல் நடப்பது என்பது கடந்தகால அனுபவம். ஆப்கானிஸ்தானில் இந்தியாவால் நிறைவேற்றப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும்,
ஈரானில் இந்திய உதவியுடன் அமைக்கப்பட்டிருக்கும் சபாஹர் துறைமுகமும் தாக்குதலுக்கு ஆளாகாமல் பாதுகாப்பதில் நாம் கவனமாக இருந்தாக வேண்டும்.
ஹஃபீஸ் சயீது அரசியல் கட்சி தொடங்கி ஆட்சியையும் கைப்பற்றினால், பாகிஸ்தானில் இதுவரை அரசு ஆதரவுடன் பயங்கரவாதம் இருந்ததுபோய் வருங்காலத்தில் பயங்கரவாதிகளால் அரசு நடத்தப்படும் நிலைமை ஏற்படக்கூடும். அதுதான் கவலையாக இருக்கிறது!


2008 மும்பை தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க உள்துறை இவரை சர்வதேச பயங்கரவாதி என்று அறிவித்தது.

Friday, 24 November 2017

ஜிம்பாப்வேயில் ஆட்சி மாற்றம்!

Celebrations break out in Zimbabwe's capital as Robert Mugabe's resignation after 37 years in power is announced in parliament.


ஜிம்பாப்வேயில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்தாவிட்டாலும் எதிர்பாராதது என்றுதான் கூற வேண்டும். கடந்த 37 ஆண்டு காலமாக ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் அசைக்க முடியாத தலைவர் என்று கருதப்பட்ட 93 வயது அதிபர் ராபர்ட் முகாபே பதவி விலகி ஆட்சி மாற்றத்திற்கு வழிகோலியிருக்கிறார். இது அவர் விரும்பி ஏற்றுக்கொண்ட பதவி விலகல் அல்ல. சூழ்நிலையின் கட்டாயத்தால் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த ஏழு ஆண்டுகளில் ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. நீண்ட நாள் அதிபர்கள் பலரும், அசைக்க முடியாத சக்தி என்று கருதப்பட்டவர்களும் தூக்கியெறியப்பட்டிருக்கின்றனர் அல்லது பதவி விலகி இருக்கிறார்கள். நைஜர் அதிபர் மம்மாடெள தஞ்சா, டுனீசியாவின் சைன் எல் அபிபைன் பென் அலி, எகிப்தின் ஹோஸ்னி முபாரக், ஐவரி கோஸ்டின் லாரண்ட் பேக்போ, லிபியாவின் மும்மார் கடாஃபி, மாலத்தீவின் அம்மாடோ டெளமானி தோரே, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் ஜெனரல் பிரான்கோயிஸ் போஸிúஸ, எகிப்தின் முகம்மது மோர்ஸி, பர்கினா பாய்úஸாவின் பிளேஸ் காம்ப்போரே, ஜாம்பியாவின் யாஹியா ஜமேய் ஆகியோரைத் தொடர்ந்து இப்போது ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேயின் தலையும் உருண்டிருக்கிறது.
ஜிம்பாப்வேயில் அரசியல் நெருக்கடி கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே இருந்து வருகிறது. ஜிம்பாப்வே என்கிற நாடு ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் இருக்கிறது. ஆங்கிலமல்லாமல் 16 அதிகாரபூர்வ மொழிகளுடன், ஹராரேயைத் தலைநகரமாகக் கொண்ட ஜிம்பாப்வேயின் மொத்த மக்கள்தொகை 1.6 கோடி. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடி 1965-இல் ரொடீஷியா என்ற பெயரில் தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டாலும்கூட, ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து ஜிம்பாப்வே முழுமையாக விடுபடவில்லை. 15 ஆண்டுகால கொரில்லா யுத்தத்தின் முடிவில் 1980-இல் ஜிம்பாப்வேயில் மக்கள் ஆட்சி மலர்ந்து, ஜிம்பாப்வே குடியரசு உருவானது.
வெள்ளையர்களுக்கு எதிராக கொரில்லா யுத்தம் நடத்தி ஜிம்பாப்வேயை குடியரசாக மாற்றிய பெருமை ராபர்ட் முகாபேவுக்கு உண்டு. 1980-இல் பிரதமராகவும், 1987 முதல் அந்த நாட்டின் அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ராபர்ட் முகாபே, கடந்த 37 ஆண்டு காலமாக ஏறத்தாழ ஒரு சர்வாதிகாரியாகவே செயல்பட்டு வந்தார். ஆனாலும்கூட, மக்கள் மத்தியில் ஜிம்பாப்வேக்கு காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை வாங்கித் தந்தவர் என்பதால் செல்வாக்கு இருந்துவந்தது.
ஒரு காலத்தில் இரும்புக் கரம் கொண்டு தன்ûன் எதிர்க்க யாரும் இல்லை எனும் அளவிலான சர்வாதிகாரியாகத் திகழ்ந்த முகாபேயின் செல்வாக்கு கடந்த 10 ஆண்டுகளாக சரியத் தொடங்கியது. வயோதிகமும், உபாதைகளும் அவரை உடல்ரீதியாக பலவீனப்படுத்தின என்றால் பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்து, வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது. மக்கள் மத்தியில் முகாபேவுக்கு எதிரான மனநிலை அதிகரித்து வந்தது.
இந்த நிலையில்தான் கடந்த மாதம் அதிபர் முகாபே துணை அதிபர் எமர்சன் நங்கக்வாவை பதவியிலிருந்து அகற்றினார். ஜிம்பாப்வே சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து முகாபேவுக்கு இரண்டாவது இடத்தில் இருந்து வந்த போராளியான நங்கக்வாவை கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலரும் ஆதரிக்க முற்பட்டனர். அதற்குக் காரணம், முகாபேயின் 52 வயது மனைவியான கிரேஸ் முகாபே, அதிபரின் வயோதிகம் காரணமாகத் தன்னை அவரது வாரிசாக நியமிக்க வற்புறுத்தி வருகிறார் என்பதுதான்.
முகாபேயின் பதவி விலகலைத் தொடர்ந்து அதிபராகப் பதவியேற்க இருக்கும் எமர்சன் நங்கக்வா எந்த அளவுக்கு தன்னிச்சையுடன் செயல்பட முடியும் என்று தெரியவில்லை. ஜிம்பாப்வே ராணுவம், வாரிசு அரசியல் உருவாவதை விரும்பாததால்தான் அதிபர் முகாபேவுக்கு எதிராகத் திரும்பியது. ராணுவப் புரட்சி என்று குறிப்பிட்டால் சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்காது என்பதாலும், ஜிம்பாப்வே மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்பதாலும் ஜெனரல் சிவெங்கா தலைமையிலான ராணுவம் அடக்கி வாசித்திருக்கிறது. விரைவிலேயே தேர்தல் அறிவிக்கப்படும் என்று நம்பலாம்.
முகாபேயின் ஆட்சி ஜிம்பாப்வேக்கு வளமையை ஏற்படுத்தவில்லை என்றாலும்கூட, அவரது சர்வாதிகாரத் தலைமையை மக்கள் முற்றிலுமாக நிராகரித்துவிடவில்லை. ஏனைய ஆப்பிரிக்க நாடுகளைப்போல, அவருக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடவில்லை. புதிய ஆட்சியின் செல்வாக்கு குறித்து தேர்தலுக்குப் பிறகுதான் தெளிவான முடிவை எட்ட முடியும். இப்போதும்கூட கருப்பர் இன பாட்டாளி மக்கள் மத்தியில் முகாபேவுக்கு மிகுந்த செல்வாக்கு இருக்கிறது என்பதும், அதுதான் படித்த இளைஞர்கள் மத்தியில் அவரது ஆட்சிக்கு எதிராக ஏற்பட்டிருந்த ஆத்திரத்துக்கு அணை போட்டது என்பதும் மறுக்க முடியாதவை.
இந்தியாவைப் பொருத்தவரை, கி.பி.1500 முதல் ஜிம்பாப்வேயுடன் நமக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. என்றாலும்கூட, இரு நாட்டுக்கு இடையேயான வர்த்தகம் இப்போது வெறும் 250 மில்லியன் டாலர் மட்டுமே. ஆனாலும் ஜிம்பாப்வேயின் மீதும் ஆப்பிரிக்க நாடுகளின் மீதும் இந்தியா அக்கறைக் காட்டாமல் இருக்க முடியாது. இந்த நாடுகளின் விடுதலைப் போராட்டத்திற்கு நாம் பின்துணையாக இருந்திருக்கிறோம். ஜிம்பாப்வேயில் ஜனநாயகம் மலருமானால், அதற்காக மகிழ்ச்சி அடைவதில் இந்தியர்கள் முன்னணியில் இருப்பார்கள்.
 

Sunday, 29 October 2017

இப்படியும் நடந்திருக்கிறது இந்தியாவில் (யவத்மால் எச்சரிக்கை!)


மரபணு மாற்றப் பயிர்களால் ஏற்படும் பாதிப்புக்கு சமீபத்திய எடுத்துக்காட்டு மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் மரணங்கள். யவத்மால் பகுதியைச் சார்ந்த விவசாயிகள் பெரும்பாலும் பருத்தி உற்பத்தியாளர்கள். கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான யவத்மால் விவசாயிகள் தங்களது பருத்திப் பயிருக்குப் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும்போது அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 23-க்கும் அதிகமான விவசாயிகள் பூச்சிமருந்தில் உள்ள விஷவாயுத் தாக்குதலால் மரணமடைந்திருக்கிறார்கள்.
மரபணு மாற்றப்பட்ட பருத்தியும் ஏனைய பயிர்களும் பல்வேறு வகையான பூச்சிகளால் தாக்கப்படாது என்பதுதான் மரபணு மாற்றப்பட்ட விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தரும் உறுதிமொழி. விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு மாறினால் பல மடங்கு அதிகரித்த விளைச்சல் கிடைக்கும் என்பதும், அந்தப் பயிர்களைப் பூச்சிகள் தாக்காது என்பதும் மரபணு மாற்றப் பயிர்களுக்கு விவசாயிகளைக் கவர்ந்திழுக்க அவர்கள் போடும் தூண்டில்.
கடந்த சில வருடங்களாகவே கிழக்கு மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த யவத்மால் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட பருத்தியைப் பயிரிடத் தொடங்கிவிட்டிருக்கிறார்கள். முதல் மூன்று, நான்கு ஆண்டுகள் விளைச்சல் அதிகமாகக் கிடைத்தது என்பதும் உண்மை. ஆனால், சமீபகாலமாகப் பருத்தியின் விளைச்சல் குறைந்துவருவதும் அதிகமான உரம் தேவைப்படுவதும் கண்டறியப்பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலமான பயிர்களைப் பூச்சிகள் தாக்காது என்பதும் பொய்த்துவிட்டிருக்கிறது.
வழக்கத்துக்கு விரோதமாக இந்த ஆண்டு பருத்திச் செடிகள் அதிக உயரம் வளரத் தொடங்கிவிட்டன. ஏறத்தாழ ஆறடி உயரம் வரை வளர்ந்துவிட்டிருக்கின்றன. ஏன் இந்த திடீர் உயரம் என்பதற்கு காரணம் தெரியவில்லை. இந்தப் பயிர்களை வழக்கத்தைவிட அதிகமாகப் பூச்சிகள் தாக்கவும் செய்திருக்கின்றன. அதனால், பூச்சிக்கொல்லி மருந்தைத் தங்கள் தலைக்கு மேலே தூக்கிப்பிடித்துத் தெளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் பல விவசாயிகள் மருந்தின் நெடியைச் சுவாசிக்க நேர்ந்திருக்கிறது. இத்தனைக்கும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பவர்கள், முகமூடி அணிந்தோ, மூக்குப்பகுதியைத் துணியால் பாதுகாத்தபடியோதான் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட அல்லது மரணமடைந்த அத்தனை விவசாயிகளுமே பருத்திப் பயிர்களின் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும்போது அதன் விஷவாயுவைச் சுவாசித்ததால் பாதிக்கப்பட்டவர்கள். போஸ்ட்மார்ட்டம் அறிக்கையின்படி, மரணமடைந்த அனைவருமே பூச்சிக்கொல்லி மருந்தில் பயன்படுத்தப்படும் ஆர்கனோ பாஸ்பரஸ் என்கிற ரசாயனக் கலவையால் தாக்கப்பட்டு நுரையீரல் பாதிப்புக்கு ஆளானவர்கள். சிலருக்குக் கண் பார்வை மங்கிப்போய் சில நாள்களுக்குப் பிறகு தான் பார்வை திரும்பியிருக்கிறது.
இந்த ஆண்டு தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் கடந்த ஆண்டிலிருந்து மாறுபட்டவையா என்று விசாரித்தபோது அந்த பூச்சிக்கொல்லி மருந்துகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று விற்பனையாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் விவசாயிகள் தங்களது பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது என்பது புதிதொன்றுமல்ல. அதனால் அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்த வேண்டிய அவசியம் கிடையாது. வழக்கத்துக்கு மாறாக திடீரென்று இந்த ஆண்டு பயிர்களின் உயரம் அதிகரித்ததுதான் பிரச்னைக்குக் காரணமாக இருக்க வேண்டும் என்கிறது அரசின் விவசாயத் துறை.
2001 முதல் இதுவரை யவத்மால் பகுதியில் 3,920 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்திய விவசாயிகளின் தற்கொலைத் தலைநகரம் என்று வேடிக்கையாக யவத்மாலை அழைப்பது உண்டு. இப்போது பூச்சிக்கொல்லி விஷத்தால் தாக்கப்பட்டும் விவசாயிகள் மரணமடைந்து பிரச்னையை மேலும் தீவிரமாக்கி இருக்கிறார்கள்.
அமெரிக்க சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பயன்படுத்துவதால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்று அறிக்கையே வெளியிட்டிருக்கிறார்கள். மரபணு மாற்றப் பயிர்களால் அதிக விளைச்சல் கிடைக்கும் என்கிற வாதமும் பொய்யானது என்று பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல், அவற்றால் விளைநிலம் தரிசாவதுடன் பல்வேறு பக்க விளைவுகளும் ஏற்படுவதாக கண்டறியப்பட்டிருக்கின்றன.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிரான விவாதம் கடந்த பல ஆண்டுகளாகவே இருந்தாலும், தனது முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனைப்போல, மான்சாட்டோ உள்ளிட்ட மரபணு மாற்றப்பட்ட விதைகளை விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளுக்குத் தரும் அழுத்தம் இன்னும்கூடக் குறைந்தபாடில்லை.
மரபணுமாற்ற விதைகள் விற்பனையாளர்கள் மிகவும் சாமர்த்தியமாக மக்கள் கருத்தை உருவாக்குவதில் சமர்த்தர்கள். ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதிலும், ஊடகங்களை நம்ப வைப்பதிலும் தேர்ந்தவர்கள். மரபணு மாற்ற விதைகளைப் பயன்படுத்தத் தொடங்கினால் சொந்தமாக விதை சேகரித்து வைத்துக்கொள்ள முடியாது. அதனால், நாம் நிரந்தரமாக விதைகளுக்கு அவர்களை நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்திய விவசாயமே அவர்களது கட்டுப்பாட்டில் அடிமைப்படும் நிலைக்குத் தள்ளப்படும்.
யவத்மால் விவசாயிகளின் நிலைமை, இந்தியாவுக்கு எழுப்பப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி!

Saturday, 28 October 2017

சுதந்திர இந்தியாவில் இப்படியொரு சட்டமா?


ஒரு விசித்திரமான அவசரச் சட்டத்தை முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான ராஜஸ்தான் அரசு கொண்டுவந்திருக்கிறது. இந்த அவசரச் சட்டம் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டும் கூட, கடந்த ஒன்றரை மாதமாக அப்படி ஓர் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது வெளியில் கசியாமல் ரகசியமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறது எனும்போது, அரசின் நோக்கத்தை மேலும் சந்தேகிக்கத் தூண்டுகிறது.
செப்டம்பர் 7-ஆம் தேதி ராஜஸ்தான் அரசு, "குற்றவியல் சட்டங்கள் (ராஜஸ்தான் மாநில திருத்தம்) அவசரச் சட்டம் 2017' என்ற அவசரச் சட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள், முன்னாள் - இன்னாள் நீதிபதிகள் உள்ளிட்டோர் மீது, மாநில அரசின் உரிய முன் அனுமதி இல்லாமல், எந்தவித விசாரணையும் மேற்கொள்ள முடியாது. அதேபோல, அரசு ஊழியர் மீது லஞ்ச - ஊழல் குற்றச்சாட்டு எழுந்தாலோ வேறு எந்த ஒரு குற்றம் சாட்டப்பட்டாலோ அவரது குற்றம் உறுதி செய்யப்படும்வரை அவரது பெயர், புகைப்படம், முகவரி, குடும்ப உறுப்பினர்களின் விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பத்திரிகைகளோ, தொலைக்காட்சி ஊடகங்களோ வெளியிடக் கூடாது. மீறி வெளியிட்டால் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கும், இந்த அவசரச் சட்டம் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எந்தவித அடிப்படை ஆதாரமுமின்றி தனிநபர்கள் (அமைச்சர்கள், சட்டப்
பேரவை உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சிகள்), அமைப்புகள் மீதான குற்றச்சாட்டுகளையோ, கருத்துகளையோ ஊடகங்களில் அல்லது சமூக வலைதளங்களில் தெரிவிக்கக் கூடாது. குறிப்பாக, மாநில அரசின் கொள்கைகள், திட்டங்களை எந்த இடத்திலும் அரசுப் பணியாளர்கள் விமர்சிக்கக் கூடாது. இதனை மீறி எவரேனும் நடந்தால் அவர்கள் மீது துறைரீதியாக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அரசின் அனுமதி இல்லாமல் பணியிலோ, பொறுப்பிலோ உள்ள அரசு ஊழியர்கள் மீதோ, பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகள் மீதோ, அவர்கள் பணிக்கால நடவடிக்கை குறித்த எந்தவித விசாரணையையும் அரசின் முன் அனுமதி பெறாமல் மேற்கொள்ள முடியாது என்கிறது இந்த அவசரச் சட்டம். இதற்கு முன்னால் மகாராஷ்டிர மாநிலத்தில் இதேபோல ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்றாலும்கூட, அந்தச் சட்டத்தில் விசாரணைக்கு எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்குத்தான் அரசின் முன் அனுமதியை அந்தச் சட்டம் வழிவகுக்கிறது. அந்தச் சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
வசுந்தரா ராஜே சிந்தியா அரசின் அவசரச் சட்டம், மகாராஷ்டிர அரசின் அவசரச் சட்டத்தை ஒன்றுமில்லாததாக்கி இருக்கிறது. விசாரணைக்கு அரசு அனுமதி வழங்குவது வரை, ஊடகங்கள் அதுகுறித்த எந்தவித செய்தியையும் வெளியிடக் கூடாது என்று தடை பிறப்பிக்கப்பட்டதுடன் நில்லாமல், அதை மீறினால் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் வழங்க முற்பட்டிருக்கிறது.
அரசு ஊழியர்கள் என்கிற வளையத்துக்குள் முதலமைச்சரும், அவரது அமைச்சரவை சகாக்களும் வருகிறார்கள். ஏதாவது ஊழல் குறித்த ஆதாரங்கள் கிடைத்தாலும்கூட, அதை வெளியிடவோ, அது குறித்து தகவல்களை மக்கள் மன்றத்தில் பதிவு செய்யவோ, ஊடகங்களுக்கு இந்த அவசரச் சட்டத்தின் மூலம் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
கடந்த 70 ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் குறித்து விசாரிக்கவோ, வழக்கு தொடரவோ, தண்டிக்கவோ பகீரதப்பிரயத்தனத்தை மேற்கொண்டும்கூட மிகக் குறைவான வழக்குகளில்தான் அவர்கள் சிக்கி தண்டனை பெற்றிருக்கிறார்கள். துணைச் செயலர் பதவிக்கு மேலே உள்ள அரசு ஊழியர்களின் தவறுகள் குறித்து, விசாரணை நடத்த அரசின் முன் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இருப்பதுதான் அதற்குக் காரணம். இதனால், குறிப்பிட்ட அதிகாரி பணி ஓய்வு பெறும்வரை விசாரணையை தொடங்க முடிவதில்லை. காரணம், அரசு காலவரம்பில்லாமல் அனுமதி வழங்குவதை ஒத்திப்போட்டு விடுகிறது.
உச்சநீதிமன்றம் இதற்கு முன்னால் இரண்டு முறை இதுபோல முன் அனுமதி பெற வேண்டிய கட்டாயத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மத்திய புலனாய்வுத் துறை அரசின் முன் அனுமதி பெற வேண்டிய கட்டாயத்தால் பல ஊழல் அரசு ஊழியர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும், ஒருவருடைய பதவியின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு விசாரணையிலிருந்து வெவ்வேறு விதமான பாதுகாப்பு வழங்குவது தவறு என்றும் 2014-இல் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
அதேபோல, 2016-இல், எந்த வழக்காக இருந்தாலும் காவல்துறையினருக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. நீதிமன்ற வழக்கு விசாரணைக்குத்தான் அரசின் முன் அனுமதி தேவையே தவிர, காவல்துறையினரின் விசாரிக்கும் உரிமைக்கோ, முதல் தகவல் பதிவுக்கோ எந்தவிதத் தடையும் கூடாது என்று உச்சநீதிமன்றம் அந்த வழக்கில் தெளிவுபடுத்தியிருக்கிறது.
ராஜஸ்தான் அரசின் அவசரச் சட்டம், முன் அனுமதி வழங்குவதற்கு 180 நாட்கள், அதாவது, ஆறு மாத அவகாசத்தை அரசுக்கு வழங்குகிறது. இந்த ஆறு மாதத்தில் தடயங்களை அழிக்கவும், விசாரணையை திசை திருப்பவும் ஊழல்வாதிகளால் முடியும் என்பது ஊரறிந்த ரகசியம்.
ஊடகங்களுக்கும் இடித்துரைப்பாளர்களுக்கும் விசாரணை அமைப்புகளுக்கும் வாய்ப்பூட்டுப் போட்டு ஊழலுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவே இப்படியொரு சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. பேச்சுரிமை வழங்கப்பட்டிருக்கும் சுதந்திர இந்தியாவில் இப்படியொரு சட்டமா?

Tuesday, 19 September 2017

அனிதாவின் மரணத்துக்கு யார் பொறுப்பேற்பது அரசே?

பெரும் கனவுடன் மருத்துவப் படிப்புக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரியலூர் மாணவி அனிதா இறுதியாக நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டுவிட்டார். தன்னுடைய உயிரைத் தானே மாய்த்துக்கொண்டுவிட்டார். பல நூற்றாண்டுகள் சாதிய அழுத்தம், சூழ நின்ற ஏழ்மையின் மத்தியில், இந்தச் சமூகத்துக்காக அந்த மாணவி தன்னுள் அணைய விடாமல் பாதுகாத்துச் சுடர் விட வைத்திருந்த கல்விக் கனவுத் தீபம் இறுதியில் அவருக்குள்ளுயே அணைந்து, அவரோடு மண்ணில் புதைந்துபோவதற்கு அரசாங்கம் புதிதாகக் கொண்டுவந்த பொது நுழைவுத் தேர்வு (நீட்) காரணமாக அமைந்துவிட்டது.
மாநிலங்களின் கல்வி உரிமை மீதான நேரடியான தாக்குதலான இந்தப் புதிய நுழைவுத் தேர்வை ஆரம்பம் முதலாகவே தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள் பலரும் கடுமையாக விமர்சித்துவருகிறார்கள். இந்தப் புதிய நுழைவுத் தேர்வானது சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் அழுத்தப்பட்டிருக்கும் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை எவ்வளவு மோசமாகப் பாதிக்கக் கூடியது என்பதையும் தொடர்ந்து சுட்டிக்காட்டிவந்தார்கள். முதல்வர் பொறுப்பில் ஜெயலலிதா இருந்தவரை இந்த விஷயத்தில் ஓரளவுக்கேனும் ஓங்கி ஒலித்துவந்த தமிழகத்தின் உரிமைக் குரல், அவருடைய மறைவைத் தொடர்ந்து சுருதி இறங்கத் தொடங்கியது. தங்களுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக எதையும் பறிகொடுப்பது எனும் பாதையை ஜெயலலிதாவுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவருடைய கட்சியினர் தேர்ந்தெடுத்த பின் அதில் உடனடியாகச் சிக்கிக்கொள்பவர்களானார்கள் தமிழக மாணவர்கள்.
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள், மருத்துவர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்று தமிழகம். ‘நாடு முழுவதற்கும் ஒரே தேர்வு’ எனும் அடிப்படையில் கொண்டுவரப்படும் ‘நீட்’ மாதிரியான தேர்வுகள் எப்படியான கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும் என்றுணர்ந்து தேசிய அளவில் இதை ஒரு விவகாரம் ஆக்கியிருக்க வேண்டும் தமிழகம். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கேற்றபடி தாங்கள் நடந்துகொள்வதாலேயே தமிழகத்துக்கு ‘தேர்வு விலக்கு’ பெற்று விடலாம் என்று பகல் கனவு கண்டுகொண்டிருந்தனர் அதிமுக ஆட்சியாளர்கள்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இடையிலேயே ‘நீட் தேர்வு’ நடந்தது. தேர்வு முடிவுகள் வெளியாயின. பிளஸ் 2 தேர்வில் 1176/1200 மதிப்பெண்கள் பெற்றிருந்தவர் அனிதா. மருத்துவப் படிப்பில் சேர அவர் பெற்றிருந்த கட் ஆஃப் மதிப்பெண்கள் 196.75%. ஆனால், நீட் தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண்கள் 86/700. இப்படிப் பல மாணவ, மாணவிகள் மோசமான பாதிப்புக்குள்ளான செய்திகள் வெளியாயின. எதுவும் தமிழக ஆட்சியாளர்களை உலுக்கியதாகத் தெரியவில்லை. ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றிய இரண்டு மசோதாக்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டும், மத்தியில் ஆளும் பாஜக அரசு அவற்றைக் கிடப்பில் போட்டுவிட்டது. இடையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்னுடைய வேட்பாளருக்கான ஆதரவை அதிமுகவிடம் அப்படியே வாங்கிக்கொண்டது பாஜக. அப்போது கூட இந்த விஷயத்தை வலியுறுத்திப் பேசிக் காரியம் முடிக்கும் எண்ணம் அதிமுகவினரிடம் இருந்ததாகத் தெரியவில்லை. கடைசியில், நடப்புக் கல்வியாண்டுக்கு விலக்கு அளிக்க வகைசெய்யும் அவசரச் சட்டத்தின் வரைவை மத்திய அரசின் ஒப்புதலுக்குத் தமிழக அரசு அனுப்பி வைத்தது.
பொதுவெளியில், ‘கண்டிப்பாக இந்த ஆண்டு விலக்கு பெற்றுத்தந்துவிடுவோம்’ என்று மத்திய அமைச்சர்களை வைத்துப் பகிரங்கமாக உறுதிமொழியளிக்கச் செய்துவிட்டு, அதற்கு நேர்மாறாக நீதிமன்றத்தில் நடந்துகொண்டது மத்திய அரசு. ‘தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும்’ என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்க, ‘இதனால் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விளைவாக, உடனடியாக ‘நீட் தேர்வு’ முடிவுகள் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்ப உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஆக, இரண்டு அரசாங்கங்களும் மாற்றி மாற்றி அடுத்தவர் கோட்டுக்குப் பந்தை அடித்துக் கடைசியில் நொந்து நூலாகிப்போனார்கள் தமிழக மாணவர்களும் பெற்றோரும். இப்படிப்பட்ட பின்னணியில்தான் அனிதாவின் மரணம் நடந்திருக்கிறது. எதற்குமே தற்கொலை தீர்வில்லை. தற்கொலை என்பது மிக மிகத் தவறான முடிவு. ஆனால், “அனிதாவை அந்த முடிவை நோக்கித் தள்ளியதில் மத்திய, மாநில அரசுகளுக்கு முழுப் பொறுப்பு இருக்கிறது” என்று அவருடைய குடும்பத்தினர் குற்றம்சாட்டினால், அந்த உண்மையை எப்படி இரு அரசுகளாலும் தார்மிகரீதியாக மறுக்க முடியும்? பிளஸ் 2 தேர்வு முடிந்ததில் தொடங்கி தமிழகத்தில் மருத்துவக் கல்விக் கனவிலிருந்த மாணவர்களும் பெற்றோர்களும் கடந்த ஐந்து மாதங்களாக எப்படி அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பதை அவர்களுடைய தரப்பில் அமர்ந்து பார்த்தால்தான் உணர முடியும்.
அதிகாரப் போட்டியே வேலை என்றாகிவிட்டால், பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓடுவது ஒன்றே இலக்காகிவிடும் என்பதையே முதல்வர் பழனிசாமி இனியாகிலும் உணர வேண்டும். மாநிலத்தில் உள்ள பலம் மட்டும் இன்றி, மக்களவையிலும் 37 உறுப்பினர்களுடன் நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக அமர்ந்திருந்தும் ‘நீட் விவகார’த்தில் தமிழக அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவானது அதிமுகவின் அரசியல் தோல்வியின் விளைவே தவிர வேறு அல்ல. அதிமுகவுக்குள் நடந்துவரும் அதிகார யுத்தத்தில் தமிழகம் இன்னும் எத்தனையெத்தனை உயிரோட்டமான விஷயங்களைப் பலி கொடுக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சமே ஏற்படுகிறது. ஒன்று திறமையாக ஆளுங்கள் அல்லது விலகுங்கள். மாநில உரிமைகளை உங்களுடைய சுயநலனுக்காகப் பறிகொடுக்காதீர்கள்.
ஒரு அனிதாவை இனி என்ன கொடுத்துப் பெற முடியும் தமிழகம்!

நவோதயா பள்ளி: என்ன செய்யப் போகிறோம்?

 நவோதயா பள்ளி: என்ன செய்யப் போகிறோம்?.

வரலாற்றைத் திருப்புகிற தீர்ப்பொன்று வந்திருக்கிறது. “தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க அனுமதியளிக்கப்படுகிறது. 8 வாரத்துக்குள் இதற்கான தடையில்லாச் சான்றிதழ்களைத் தமிழக அரசு வழங்க வேண்டும். மாவட்டம்தோறும் அதற்கான இடத்தை ஒதுக்கி, உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்துதருவதில்தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று ஆணையிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
கணிசமான மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ள தீர்ப்பு இது என்பதில் சந்தேகமில்லை. ‘இந்தி படிக்க நமக்கிருந்த தடை தகர்ந்துவிட்டது’ என்ற மகிழ்ச்சியல்ல அது. தமிழகத்தில் ஒரே பாடத்திட்டம் நடைமுறையில் இல்லை. அரசுப் பள்ளிகள், சமச்சீர் கல்வித்திட்டத்தைப் பின்பற்றுகிற மெட்ரிக் பள்ளிகள், அதைப் பின்பற்றாத மெட்ரிக் பள்ளிகள், மத்திய பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிற கேந்திரிய பள்ளிகள், தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள், சர்வதேச(?) பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிற குளோபல் பள்ளிகள் என்று 6 வகையான பள்ளிகள் இருக்கின்றன. மாநிலப் பள்ளிகளைவிட, மத்திய பள்ளிகள் தரமானவை என்றும், மத்திய பள்ளிகளைவிட சர்வதேசப் பள்ளிகள் தரமானவை என்றும் நம்பப்படுகிறது. ஏழைகளுக்கு ஒரு பள்ளி, நடுத்தர வர்க்கத்தினருக்கு வேறு பள்ளி, உயர் வர்க்கத்துக்கு வேறு பள்ளி என்ற வேறுபாடு இருக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளியைவிடக் குறைந்த கட்டணத்தில், மத்திய பாடத்திட்டக் கல்வி கிடைத்தால் ஏழை, நடுத்தர மக்கள் வரவேற்கவே செய்வார்கள். அவர்களில் பலர் கேந்திரிய பள்ளிகளுக்கு முயற்சித்து, ஒரு சீட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ரூ. 2 லட்சம் கேட்கிறார்கள் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு பின்வாங்கியவர்கள்.
இந்த நேரத்தில் நவோதயா பள்ளிகள் ஏன் தமிழகத்தில் மட்டும் அனுமதிக்கப்படவில்லை என்ற வரலாற்றை அதை விரும்புகிற மக்களுக்கு சொல்லிக்காட்ட வேண்டிய கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது.
இந்தித் திணிப்பும் இந்தி எதிர்ப்பும் கடந்த 80 ஆண்டுகளாக நடந்துவரும் தொடர்கதை. “இந்தியா ஒரே நாடாக நீடிக்க வேண்டும் என்றால், இந்தியே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும்” என்று மத்திய அரசு தொடர்ந்து சொல்கிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களோ, “மாநில மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக அறிவித்துவிட்டால், ஏன் இந்தியா பிளவுபடப் போகிறது?” என்ற நியாயமான எதிர்வாதத்தை முன்வைக்கின்றன.

ராஜாஜி காலத்திலிருந்து...

தேசியவாதியான ராஜாஜி 1937-ல் முதல்வரானார். “இந்தியா விரைவில் விடுதலை பெறும். இதுவரையில் ஆங்கிலம் ஆட்சிமொழியாக இருந்தாலும், விடுதலைக்குப் பிறகு கண்டிப்பாக நம் தலைவர்கள் இந்தியைத்தான் ஆட்சிமொழியாக்குவார்கள். எனவே, முன்கூட்டியே தமிழர்களை இந்தி படிக்க வைத்துவிட்டால், பின்னாளில் அவர்களுக்குப் பாதிப்பு குறைவாக இருக்கும்” என்று கருதினார் ராஜாஜி. அரசுப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டுவந்தார். அவருக்கு முன்பே சென்னை மாகாணத்தை 17 ஆண்டுகள் ஆண்டுவிட்ட (1920 முதல் 1937 வரை) நீதிக்கட்சியினரோ தொடர்ந்து இந்தித் திணிப்பை எதிர்த்து வந்தவர்கள். இளம் தலைமுறையும் ‘திராவிட நாடு’ கனவில் இருந்ததால், இந்தியைக் கடுமையாக எதிர்த்தனர். விளைவாக, முதல் இந்தி எதிர்ப்புப் போர் 1938-ல் தொடங்கியது. இந்தித் திணிப்பு திரும்பப் பெறப்பட்டதால், போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்தியா விடுதலை பெற்று, குடியரசாக மாறியதும் அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அந்தச் சட்டம் ராஜாஜி கணித்தபடியே, “அனைத்திந்திய ஆட்சி மொழியாக இருக்கும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை ஆட்சிமொழியாக்க வேண்டும்” என்று சொன்னது. ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் பலருக்கு இந்தி தெரியாது என்பதால், எல்லோரையும் தயார்படுத்துவதற்காகக் கால அவகாசம் அளித்து, 1965 ஜனவரி 26-ம் தேதி இந்தியை நாட்டின் ஆட்சிமொழியாக மாற்றுவது என்று சட்டம் போட்டார்கள். இந்தி இந்தியாவின் தனி ஆட்சிமொழியாக (ஆங்கிலம் அறவே நீக்கப்படும்) முடிசூட்டப்போகிறது என்றதும், தமிழகம் கிளர்ந்தெழுந்தது. தமிழ்நாட்டில் காங்கிரஸை ஒட்டுமொத்தமாகத் தூக்கியெறிந்தார்கள் தமிழக மக்கள். இந்தித் திணிப்பு எதிர்ப்பு அரசு (திமுக) ஆட்சிப்பொறுப்பேற்றது. வாக்காளர்களின் விருப்பப்படி, இருமொழிச் சட்டத்தை நிறைவேற்றினார் அண்ணா. அதாவது, தமிழகத்துக்குத் தாய்மொழி தமிழ், தொடர்பு மொழி ஆங்கிலம் மட்டும் போதும். பள்ளிகளில் இவ்விரு மொழிகள் மட்டுமே கற்பிக்கப்படும் என்று சட்டம் போட்டார். அதை அப்படியே தொடர்ந்தார் கருணாநிதி.

இந்தியின் நுழைவு

நெருக்கடிநிலை 1975-ல் நடைமுறைக்கு வந்தது. மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலுக்குப் போனது. என்.சி.சி.யில்கூட இந்தியில் கட்டளையிடக் கூடாது என்ற நிலை மாறி, தமிழே இல்லாமல் இந்தி, ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கிற பள்ளிகளும் தமிழகத்துக்குள் நுழைந்தன. அதனைத் தடுக்கும் அதிகாரமின்றி விழித்தது தமிழக அரசு. மாநில அரசு அங்கீகாரம் அளிக்கும் பள்ளிகளில் மட்டும், இந்தியைத் தடுக்கிறது தமிழக அரசு. அதன் ஒரு பகுதிதான் நவோதயா பள்ளிகளைத் தடுத்ததும்.
அது மத்திய அரசுப் பள்ளிதானே என்று சிலர் கருதலாம். இல்லை, மாநில அரசின் பங்களிப்புடன் கூடிய பள்ளி. மாநில அரசு 30 ஏக்கர் நிலத்தை இலவசமாகத் தருகிறது. கூடவே, புதிய கட்டிடம் கட்டப்படும் வரையில் வாடகையில்லாமல் ஒரு பள்ளிக்கட்டிடத்தையும், ஆசிரியர்களுக்கான குடியிருப்பையும் மாநில அரசே வழங்க வேண்டும். இவ்வளவு உதவிகளைச் செய்கிறபோது, எங்களது இருமொழிக் கொள்கையை ஏற்றால் என்ன என்பது தமிழக அரசின் வாதம். “6 முதல் 10 வரையில் தமிழையும்தானே கற்பிக்கிறோம். 11, 12-ல் வேண்டும் என்றால் தமிழையும் விருப்பப்பாடமாகத் தேர்வு செய்துகொள்ளலாம்” என்றது மத்திய அரசு. எல்லாம் சரி, விருப்பப் பாடமாகத் தமிழைத் தேர்வுசெய்துகொள்ளலாம் என்றால் எல்லோரும் தமிழைத் தேர்வுசெய்வார்களா என்ற கேள்வி இருக்கிறதல்லவா? தமிழுக்கு முன்னுரிமை அல்லவா கொடுத்திருக்க வேண்டும்!
மத்திய அரசின் வாதத்தை ஏற்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது, நவோதயா பள்ளிகளைத் திறக்கலாம் என்று. அதிமுக என்ன செய்யப் போகிறது?

முழுதாக நனைக்கப்போகிறதா?

நம்மைப் போலவே மொழியுணர்வு மிக்க பல மாநிலங்கள் நீண்ட காலமாக நவோதயா பள்ளிகளை எதிர்த்துவந்தன. கல்வி பொதுப் பட்டியலுக்குப் போனதும், முழுசாக நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று தங்கள் முடிவைக் கைவிட்டுவிட்டன. (கடைசியாக அந்தப் பட்டியலில் சேர்ந்தது மேற்கு வங்கம்.) ஆனால், தமிழகம் இன்னமும் முழுசாக நனையவில்லை. தமிழ் மக்களை இந்தியால் முழுதாக நனைக்க முடியாது! வரைபடரீதியான, வரலாற்றுரீதியான உண்மை இது. ‘தமிழக அரசு முழுதாக நனைக்கப்போகிறதா?’ என்பதுதான் கேள்வி.
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தால் ஆட்சிக்கு வந்த திமுக, நவோதயா பள்ளிகளை அனுமதித்தால் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும், ஆளாகியிருக்கும். அதிமுக அனுமதித்தால் அந்த அளவுக்கு விமர்சனம் வராதுதான். ஆனால், “அண்ணா நிறைவேற்றிய இருமொழிக் கல்விச் சட்டம் நடைமுறையில் இருக்கும் ஒரு மாநிலத்தில், இந்தியை முதலில் அனுமதித்தது அண்ணா பெயரை வைத்துக்கொண்டிருந்த அதிமுகதான்” என்று வரலாற்றில் பதிவாகும்.
தாங்கள் பாஜக ஆதவாளர்களாக இருக்கலாம், ஆனால், பாஜக இல்லை என்பதை நிரூபிக்க எடப்பாடி அரசுக்கு வரலாறு தந்திருக்கும் வாய்ப்பு இது.
இன்னொரு விஷயம். ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் வெறுமனே நவோதயா பள்ளிகளை எதிர்ப்போம் என்று சொன்னால் மட்டும் போதாது. இந்தி எதிர்ப்பு முழக்கத்தால் ஆட்சியைப் பிடித்த நாம், கேரளத்தைப் போல மத்திய அரசுப் பள்ளியே என்றாலும், மாநில மொழி கட்டாயம் என்று இங்கே சட்டமியற்றத் தவறிவிட்டோம் என்ற உண்மையையும் ஒப்புக்கொள்ள வேண்டும். மக்களின் கனவான ஒரே பாடத்திட்டம் வேண்டும் என்றால், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரி ஒரே குரலில் பேச வேண்டும். மாநில அரசிடம் அனுமதி பெற்ற தனியார் பள்ளிகள் பல, திருட்டுத்தனமாக இந்தி கற்பிப்பதைக் கண்டும் காணாமல் இருக்காமல், துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால், பணக்காரர்கள் படிக்கிற தனியார் பள்ளிக்கு ஒரு நீதி, ஏழைகள் சேர வாய்ப்புள்ள நவோதயா பள்ளிகளுக்கு ஒரு நீதி என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்!.



மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...