Tuesday, 19 September 2017

நவோதயா பள்ளி: என்ன செய்யப் போகிறோம்?

 நவோதயா பள்ளி: என்ன செய்யப் போகிறோம்?.

வரலாற்றைத் திருப்புகிற தீர்ப்பொன்று வந்திருக்கிறது. “தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க அனுமதியளிக்கப்படுகிறது. 8 வாரத்துக்குள் இதற்கான தடையில்லாச் சான்றிதழ்களைத் தமிழக அரசு வழங்க வேண்டும். மாவட்டம்தோறும் அதற்கான இடத்தை ஒதுக்கி, உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்துதருவதில்தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று ஆணையிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
கணிசமான மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ள தீர்ப்பு இது என்பதில் சந்தேகமில்லை. ‘இந்தி படிக்க நமக்கிருந்த தடை தகர்ந்துவிட்டது’ என்ற மகிழ்ச்சியல்ல அது. தமிழகத்தில் ஒரே பாடத்திட்டம் நடைமுறையில் இல்லை. அரசுப் பள்ளிகள், சமச்சீர் கல்வித்திட்டத்தைப் பின்பற்றுகிற மெட்ரிக் பள்ளிகள், அதைப் பின்பற்றாத மெட்ரிக் பள்ளிகள், மத்திய பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிற கேந்திரிய பள்ளிகள், தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள், சர்வதேச(?) பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிற குளோபல் பள்ளிகள் என்று 6 வகையான பள்ளிகள் இருக்கின்றன. மாநிலப் பள்ளிகளைவிட, மத்திய பள்ளிகள் தரமானவை என்றும், மத்திய பள்ளிகளைவிட சர்வதேசப் பள்ளிகள் தரமானவை என்றும் நம்பப்படுகிறது. ஏழைகளுக்கு ஒரு பள்ளி, நடுத்தர வர்க்கத்தினருக்கு வேறு பள்ளி, உயர் வர்க்கத்துக்கு வேறு பள்ளி என்ற வேறுபாடு இருக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளியைவிடக் குறைந்த கட்டணத்தில், மத்திய பாடத்திட்டக் கல்வி கிடைத்தால் ஏழை, நடுத்தர மக்கள் வரவேற்கவே செய்வார்கள். அவர்களில் பலர் கேந்திரிய பள்ளிகளுக்கு முயற்சித்து, ஒரு சீட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ரூ. 2 லட்சம் கேட்கிறார்கள் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு பின்வாங்கியவர்கள்.
இந்த நேரத்தில் நவோதயா பள்ளிகள் ஏன் தமிழகத்தில் மட்டும் அனுமதிக்கப்படவில்லை என்ற வரலாற்றை அதை விரும்புகிற மக்களுக்கு சொல்லிக்காட்ட வேண்டிய கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது.
இந்தித் திணிப்பும் இந்தி எதிர்ப்பும் கடந்த 80 ஆண்டுகளாக நடந்துவரும் தொடர்கதை. “இந்தியா ஒரே நாடாக நீடிக்க வேண்டும் என்றால், இந்தியே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும்” என்று மத்திய அரசு தொடர்ந்து சொல்கிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களோ, “மாநில மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக அறிவித்துவிட்டால், ஏன் இந்தியா பிளவுபடப் போகிறது?” என்ற நியாயமான எதிர்வாதத்தை முன்வைக்கின்றன.

ராஜாஜி காலத்திலிருந்து...

தேசியவாதியான ராஜாஜி 1937-ல் முதல்வரானார். “இந்தியா விரைவில் விடுதலை பெறும். இதுவரையில் ஆங்கிலம் ஆட்சிமொழியாக இருந்தாலும், விடுதலைக்குப் பிறகு கண்டிப்பாக நம் தலைவர்கள் இந்தியைத்தான் ஆட்சிமொழியாக்குவார்கள். எனவே, முன்கூட்டியே தமிழர்களை இந்தி படிக்க வைத்துவிட்டால், பின்னாளில் அவர்களுக்குப் பாதிப்பு குறைவாக இருக்கும்” என்று கருதினார் ராஜாஜி. அரசுப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டுவந்தார். அவருக்கு முன்பே சென்னை மாகாணத்தை 17 ஆண்டுகள் ஆண்டுவிட்ட (1920 முதல் 1937 வரை) நீதிக்கட்சியினரோ தொடர்ந்து இந்தித் திணிப்பை எதிர்த்து வந்தவர்கள். இளம் தலைமுறையும் ‘திராவிட நாடு’ கனவில் இருந்ததால், இந்தியைக் கடுமையாக எதிர்த்தனர். விளைவாக, முதல் இந்தி எதிர்ப்புப் போர் 1938-ல் தொடங்கியது. இந்தித் திணிப்பு திரும்பப் பெறப்பட்டதால், போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்தியா விடுதலை பெற்று, குடியரசாக மாறியதும் அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அந்தச் சட்டம் ராஜாஜி கணித்தபடியே, “அனைத்திந்திய ஆட்சி மொழியாக இருக்கும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை ஆட்சிமொழியாக்க வேண்டும்” என்று சொன்னது. ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் பலருக்கு இந்தி தெரியாது என்பதால், எல்லோரையும் தயார்படுத்துவதற்காகக் கால அவகாசம் அளித்து, 1965 ஜனவரி 26-ம் தேதி இந்தியை நாட்டின் ஆட்சிமொழியாக மாற்றுவது என்று சட்டம் போட்டார்கள். இந்தி இந்தியாவின் தனி ஆட்சிமொழியாக (ஆங்கிலம் அறவே நீக்கப்படும்) முடிசூட்டப்போகிறது என்றதும், தமிழகம் கிளர்ந்தெழுந்தது. தமிழ்நாட்டில் காங்கிரஸை ஒட்டுமொத்தமாகத் தூக்கியெறிந்தார்கள் தமிழக மக்கள். இந்தித் திணிப்பு எதிர்ப்பு அரசு (திமுக) ஆட்சிப்பொறுப்பேற்றது. வாக்காளர்களின் விருப்பப்படி, இருமொழிச் சட்டத்தை நிறைவேற்றினார் அண்ணா. அதாவது, தமிழகத்துக்குத் தாய்மொழி தமிழ், தொடர்பு மொழி ஆங்கிலம் மட்டும் போதும். பள்ளிகளில் இவ்விரு மொழிகள் மட்டுமே கற்பிக்கப்படும் என்று சட்டம் போட்டார். அதை அப்படியே தொடர்ந்தார் கருணாநிதி.

இந்தியின் நுழைவு

நெருக்கடிநிலை 1975-ல் நடைமுறைக்கு வந்தது. மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலுக்குப் போனது. என்.சி.சி.யில்கூட இந்தியில் கட்டளையிடக் கூடாது என்ற நிலை மாறி, தமிழே இல்லாமல் இந்தி, ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கிற பள்ளிகளும் தமிழகத்துக்குள் நுழைந்தன. அதனைத் தடுக்கும் அதிகாரமின்றி விழித்தது தமிழக அரசு. மாநில அரசு அங்கீகாரம் அளிக்கும் பள்ளிகளில் மட்டும், இந்தியைத் தடுக்கிறது தமிழக அரசு. அதன் ஒரு பகுதிதான் நவோதயா பள்ளிகளைத் தடுத்ததும்.
அது மத்திய அரசுப் பள்ளிதானே என்று சிலர் கருதலாம். இல்லை, மாநில அரசின் பங்களிப்புடன் கூடிய பள்ளி. மாநில அரசு 30 ஏக்கர் நிலத்தை இலவசமாகத் தருகிறது. கூடவே, புதிய கட்டிடம் கட்டப்படும் வரையில் வாடகையில்லாமல் ஒரு பள்ளிக்கட்டிடத்தையும், ஆசிரியர்களுக்கான குடியிருப்பையும் மாநில அரசே வழங்க வேண்டும். இவ்வளவு உதவிகளைச் செய்கிறபோது, எங்களது இருமொழிக் கொள்கையை ஏற்றால் என்ன என்பது தமிழக அரசின் வாதம். “6 முதல் 10 வரையில் தமிழையும்தானே கற்பிக்கிறோம். 11, 12-ல் வேண்டும் என்றால் தமிழையும் விருப்பப்பாடமாகத் தேர்வு செய்துகொள்ளலாம்” என்றது மத்திய அரசு. எல்லாம் சரி, விருப்பப் பாடமாகத் தமிழைத் தேர்வுசெய்துகொள்ளலாம் என்றால் எல்லோரும் தமிழைத் தேர்வுசெய்வார்களா என்ற கேள்வி இருக்கிறதல்லவா? தமிழுக்கு முன்னுரிமை அல்லவா கொடுத்திருக்க வேண்டும்!
மத்திய அரசின் வாதத்தை ஏற்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது, நவோதயா பள்ளிகளைத் திறக்கலாம் என்று. அதிமுக என்ன செய்யப் போகிறது?

முழுதாக நனைக்கப்போகிறதா?

நம்மைப் போலவே மொழியுணர்வு மிக்க பல மாநிலங்கள் நீண்ட காலமாக நவோதயா பள்ளிகளை எதிர்த்துவந்தன. கல்வி பொதுப் பட்டியலுக்குப் போனதும், முழுசாக நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று தங்கள் முடிவைக் கைவிட்டுவிட்டன. (கடைசியாக அந்தப் பட்டியலில் சேர்ந்தது மேற்கு வங்கம்.) ஆனால், தமிழகம் இன்னமும் முழுசாக நனையவில்லை. தமிழ் மக்களை இந்தியால் முழுதாக நனைக்க முடியாது! வரைபடரீதியான, வரலாற்றுரீதியான உண்மை இது. ‘தமிழக அரசு முழுதாக நனைக்கப்போகிறதா?’ என்பதுதான் கேள்வி.
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தால் ஆட்சிக்கு வந்த திமுக, நவோதயா பள்ளிகளை அனுமதித்தால் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும், ஆளாகியிருக்கும். அதிமுக அனுமதித்தால் அந்த அளவுக்கு விமர்சனம் வராதுதான். ஆனால், “அண்ணா நிறைவேற்றிய இருமொழிக் கல்விச் சட்டம் நடைமுறையில் இருக்கும் ஒரு மாநிலத்தில், இந்தியை முதலில் அனுமதித்தது அண்ணா பெயரை வைத்துக்கொண்டிருந்த அதிமுகதான்” என்று வரலாற்றில் பதிவாகும்.
தாங்கள் பாஜக ஆதவாளர்களாக இருக்கலாம், ஆனால், பாஜக இல்லை என்பதை நிரூபிக்க எடப்பாடி அரசுக்கு வரலாறு தந்திருக்கும் வாய்ப்பு இது.
இன்னொரு விஷயம். ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் வெறுமனே நவோதயா பள்ளிகளை எதிர்ப்போம் என்று சொன்னால் மட்டும் போதாது. இந்தி எதிர்ப்பு முழக்கத்தால் ஆட்சியைப் பிடித்த நாம், கேரளத்தைப் போல மத்திய அரசுப் பள்ளியே என்றாலும், மாநில மொழி கட்டாயம் என்று இங்கே சட்டமியற்றத் தவறிவிட்டோம் என்ற உண்மையையும் ஒப்புக்கொள்ள வேண்டும். மக்களின் கனவான ஒரே பாடத்திட்டம் வேண்டும் என்றால், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரி ஒரே குரலில் பேச வேண்டும். மாநில அரசிடம் அனுமதி பெற்ற தனியார் பள்ளிகள் பல, திருட்டுத்தனமாக இந்தி கற்பிப்பதைக் கண்டும் காணாமல் இருக்காமல், துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால், பணக்காரர்கள் படிக்கிற தனியார் பள்ளிக்கு ஒரு நீதி, ஏழைகள் சேர வாய்ப்புள்ள நவோதயா பள்ளிகளுக்கு ஒரு நீதி என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்!.



Saturday, 26 August 2017

பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட குற்றவாளிக்காக 30 பேர் படுகொலை!

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவருக்கான தண்டனை என்னவென்பது வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் குர்மீத்.
இந்தத் தீர்ப்பு மற்றும் கைது நடவடிக்கை காரணமாக ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களின் பல பகுதிகளில் போலீஸ் மற்றும் துணைராணுவப் படையினர் வன்முறைகளை எதிர்கொள்ள தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங், ஆசிரமத்திலுள்ள இரு பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தார் என்பதுதான் அவர் மீதுள்ள குற்றச்சாட்டு.
பெயரிடப்படாத ஒரு கடிதத்தில் தொடங்கியது இந்த வழக்கின் விதை. அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில் அதை எழுதிய சந்யாசினி கூறியது இதுதான். இவரைத் தனது அறைக்கு வருமாறு குர்மீத் ராம் ரஹீம் சிங் கூறினாராம். அங்கு சென்றபோது பாபா படுக்கையில் இருந்தார். அவருக்கு அருகே ஒரு ரிவால்வர் இருந்தது. அப்போது தொலைக்காட்சியில் ஆபாசப்படம் ஓடிக் கொண்டிருந்தது. அந்த சூழலில் தன்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறியிருந்தார் சந்யாசினி. அதற்குப் பின் மூன்று வருடங்களுக்கு மிரட்டலுடன் பாலியல் பலாத்காரம் தொடர்ந்ததாகவும், இந்த அநீதி தன்னைப்போல் மேலும் 35 பெண்களுக்கு நடைபெற்றது என்றும் சொல்லியிருந்தார்.
இதைத் தொடர்ந்து சில மாதங்களில் அந்த ஆசிரமத்தைச் சேர்ந்த ரஞ்சித் சிங் என்பவர் கொலை செய்யப்பட்டார். கடிதம் அனுப்பப்பட்டதற்குப் பின்னணியில் இவர் இருந்திருப்பார் என்ற செய்தி பரவ... பரபரப்பு கூடியது.
மேற்படி கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கு நடத்தத் தீர்மானித்தது. இந்த விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்தது. டி.எஸ்.எஸ். அமைப்பை விட்டு விலகியிருந்த 18 சந்யாசினிகளை விசாரித்தது சிபிஐ. அவர்களில் இருவர் தாங்களும் குர்மீத் ராம் ரஹீம் சிங்கால் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறினர். ஆசிரமத்தில் நடக்கும் சட்டமீறலான விஷயங்களைக் குறித்து தொடர்ந்து எழுதி வந்த பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி என்பவரும் படுகொலை செய்யப்பட்டார். ஒரு காலத்தில் அந்த அமைப்பின் ஓட்டுநராகப் பணியாற்றிய கட்டா சிங் என்பவரும் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு எதிராக சாட்சியம் கொடுத்தார்.
தீர்ப்பின் எதிரொலி காரணமாக வன்முறை வெடிக்கலாம் என்ற காரணத்தினால் ஹரியாணாவில் பல இடங்களிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக சண்டிகரிலுள்ள அத்தனை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை. தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் வளாகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் பீப்பாய்கள் வாங்கிக் குவிக்கப்பட்டிருக்கின்றன. கற்களும் கூரிய ஆயுதங்களும் அதன் மற்றொரு பகுதியில் நிரப்பப்பட்டுள்ளன. சண்டிகர் காவல்துறை அந்த நகரின் அத்தனை நுழைவிடங்களையும் ‘சீல்’ செய்துள்ளது. ஹரியாணாவிலும் பஞ்சாபிலும் பெரும் கலவரம் வெடித்துவிடுமோ என்ற பதற்றம் உச்சத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில் ராம் ரஹிம் சிங் கைது செய்யப்பட்டுள்ளார், இவர் ரோத்தக் கொண்டு செல்லப்படலாம் என்று தெரிகிறது. இங்குள்ள போலீஸ் பயிற்சி கல்லூரி ஓய்வு இல்லம் சிறப்புச் சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்ச்குலாவில் நிலைமை பதற்றமாக உள்ளது காரணம், தேரா சச்சா ஆதரவாளர்கள் ஏற்கெனவே வாகனங்கள் மீது கல்வீச்சில் ஈடுபடத் தொடங்கிவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

Wednesday, 23 August 2017

கலப்புத் திருமணம் செய்தவர்களை காப்பாற்ற தனிப்பிரிவு

‘‘சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி’’ 
- என்பது அவ்வை பாட்டி இந்த உலகுக்குத் தந்த நன்னெறியாகும். ஆனால், இன்னமும் பல இடங்களில், தங்களை உயர்சாதி என்று சொல்லிக் கொள்பவர்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களும் இணைந்து திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை நிலவுகிறது. வேற்று சாதியை சேர்ந்த ஒரு பையனை திருமணம் செய்தது, தன் மகள் என்றாலும் அதைப்பொறுத்துக்கொள்ள முடியாமல், அந்தப்பையனை மட்டுமல்லாமல், ‘எங்கள் கவுரவமே போய்விட்டது. மானமே போய்விட்டது’ என்றுசொல்லி, தாங்கள் தவமிருந்து பெற்ற பெண்ணையும் கொலைசெய்யும் கவுரவ கொலைகளும் தமிழ்நாட்டில் அதுவும் பெரியார் பிறந்த இந்தப்பூமியில் இன்னமும் நடக்கிறது.

மதுரை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு பையனை திருமணம் செய்துகொண்டாள் என்ற ஒரே காரணத்திற்காக, ஒரு பெண் கவுரவ கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தற்போது ஆந்திர மாநில  ஐகோர்ட்டு  நீதிபதியாக  இருக்கும்  நீதியரசர் வி.ராமசுப்பிரமணியன் விசாரித்து தொடக்கம் முதல் அந்த தம்பதிக்கு பாதுகாப்பு கொடுக்க தவறிய போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான கண்டனத்தை தெரிவித்து நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தார். அதன்பிறகு இனிமேலும் இதுபோன்ற கவுரவ கொலைகள் நடக்காமல் இருப்பதை தடுக்கும் வகையில், 9 உத்தரவுகளை அடுக்கடுக்காக பிறப்பித்தார். அதில் ஒன்று, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட சமூகநல அதிகாரி மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலஅதிகாரி கொண்ட சிறப்பு தனிப்பிரிவு அமைக்கப்பட வேண்டும். இந்தப்பிரிவு, கலப்புத்திருமணம் செய்த தம்பதிகளுக்கு வரும் அச்சுறுத்தல், துன்புறுத்தல் தொடர்பான மனுக்கள் புகார்களை வாங்கவேண்டும். இதுபோன்ற புகார்களை பெறவும், அவர்களுக்கு தேவையான உதவிகள், ஆலோசனைகள் வழங்கவும் 24 மணிநேர அவசர உதவி டெலிபோன் எண்களை கொடுக்க வேண்டும். இந்த தம்பதிகள் இருக்கும் இடத்திலுள்ள போலீஸ் நிலைய அதிகாரி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், அந்த சிறப்புக்குழு அந்த கலப்புத்திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கத்தவறிய அதிகாரிகளை பொறுப்பேற்க செய்யவேண்டும். இத்தகைய சிறப்பு தனிப்பிரிவுகளை தமிழ்நாடு முழுவதும் 3 மாதத்திற்குள்ளாக அமைக்கவேண்டும் என்று 13.4.2016 அன்று வெளியிட்ட உத்தரவில் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் கூறியிருந்தார்.

நீதிபதி உத்தரவிற்கேற்ப, 3 மாதங்களுக்குள் இந்த சிறப்பு தனிப்பிரிவுகளை அரசு அமைக்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் தொடரப்பட்டது. உடனடியாக அவசர, அவசரமாக மதுரையில் இதுபோன்ற சிறப்பு தனிப்பிரிவு அமைக்கவும், சமூகத்தில் கலப்பு திருமணத்தினால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து புகாரை பெறுவதற்கு, மதுரை மாநகர் காவல் ஆணையர் வளாகத்திலுள்ள குற்றத்தடுப்பு பிரிவும் இந்தப்புகாரை விசாரிக்க குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஒரு சிறப்பு தனிப்பிரிவு சேலம் மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. கலப்புத்திருமணத்தை பொறுத்தமட்டில், இப்போது தானாக பல குடும்பங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பான்மையான குடும்பங்களில் இத்தகைய கலப்பு திருமணங்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, மணமக்களை வாழ்த்துகிறார்கள். கலப்புத்திருமணங்கள் சர்வசாதாரணமாகிவிட்டது. ஒருசில இடங்களில் மட்டும் இவ்வாறு கவுரவ கொலைகள் நடக்கின்றன. எனவே, உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி, உடனடியாக இதுபோன்ற சிறப்பு தனிப்பிரிவை தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கவேண்டும். 18 வயதிற்கு குறைந்த பெண்ணையோ, 21 வயதிற்கு குறைந்த ஆணையோ கலப்புத்திருமணம் என்ற பெயரில் திருமணம் செய்துவைக்கும் நடவடிக்கைகளை மட்டும் நிச்சயமாக ஊக்குவிக்கக் கூடாது.



Friday, 28 July 2017

ரஜினிகாந்தா?, கமல்ஹாசனா? யார் முந்தப்போகிறார்கள்?

ந்த ஆண்டு தமிழக அரசு மானியக் கோரிக்கைகளுக்கான சட்டசபை கூட்டத்தொடர் 24 நாட்கள் நடந்துமுடிந்தன. சட்டசபை கூட்டம் மக்கள் மனதில் பெரியதாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், சட்டசபைக்கு வெளியே அரசியல் களம் அனல் பறக்கத்தொடங்கிவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க. 3 அணிகளாக பிரிந்துள்ளநிலையில், அ.தி.மு.க. தொண்டர்களிடையே ஒரு குழப்பமான நிலையே நிலவிவருகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு அரசியலுக்குள் நுழைய ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தீவிரமாக யோசித்து வருகிறார்கள். மேலும் முடிவுக்கு வருவதை எட்டிவிட்டார்கள் என்பது சமீபகாலங்களாக அவர்களின் பேச்சில் இருந்தே தெரிகிறது. சினிமா துறையில் இருந்து இதுவரையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், டி.ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக் என்று நடிகர்கள் அரசியல் கட்சிகளை தொடங்கினாலும் எல்லோராலும் ஜொலிக்க முடியவில்லை. சிலர் தொடங்கிய கட்சிகள் முளையிலேயே பட்டுப்போய்விட்டன.

1996–ம் ஆண்டிலிருந்தே இதோ வருகிறார்!, அதோ வருகிறார்! என்று நடிகர் ரஜினிகாந்த் பற்றி பேச்சு வந்தது. ஆனால், இதுகுறித்து திட்டவட்டமாக எந்தக்கருத்தையும் சொல்லாவிட்டாலும், கடந்த மே மாதம் ரசிகர்களுடன் போட்டோ எடுக்கும் நிகழ்ச்சியில் முதல் முதலாவதாக, ‘நான் ஒருவேளை அரசியலுக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், பணம் சம்பாதிக்கும் நோக்கில் இருக்கும் ஆட்களை பக்கத்தில் சேர்க்கவேமாட்டேன்’ என்று முதல்நாளும், அதற்கு அடுத்தநாள் ‘போர் வரும்போது பார்த்துக்கொள்வோம்’ என்றும் கூறினார். ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைவார் என்று இருவேறு கருத்துகள் இருந்தநிலையில், ஏற்கனவே ரஜினிகாந்த் அந்தக்கூட்டத்தில் ‘சிஸ்டம் கெட்டுப்போய்விட்டது, ஜனநாயகம் கெட்டுப்போயிருக்கிறது. ஒரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும்’ என்று கூறினார். இப்போது ஒரு பேட்டியில் கமல்ஹாசன் திடீரென, ‘சிஸ்டம் கெட்டுப்போய்விட்டது என்று நான் முன்பே சொல்லியிருக்கிறேன். அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது’ என்று வெளிப்படையாகவே சொன்னபிறகு, எல்லோருடைய பார்வையும் கமல்ஹாசன் பக்கம் திரும்பியது. கமல்ஹாசன் கருத்துக்கு அ.தி.மு.க. தரப்பிலும், பா.ஜ.க. தரப்பிலும் மிகக்கடுமையான எதிர்க்கருத்துகள் கூறப்பட்டன.

கமல்ஹாசன் தகவல் தொழில்நுட்பத்தை, அதிலும் குறிப்பாக டுவிட்டரை அதிகம் பயன்படுத்துகிறார். கடந்த 18–ந்தேதி அன்று இரவு ‘‘தோற்றிருந்தால் போராளி, முடிவெடுத்தால் யாம் முதல்வர்’’ என்று வெளிப்படையாகவே எழுதிவிட்டார். ஆக, ‘முடிவெடுத்தால் நான் முதல்வர்’ என்பதை கூறிய கமல்ஹாசன் முடிவெடுத்துவிட்டார் என்பதை அடுத்தநாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார். தன் ரசிகர்களுக்கு டுவிட்டர் மூலம் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், காசுக்கு விலைபோகாத வாக்காளர்களும் என்று கூறி, அரசுத்துறைகளில் உள்ள ஊழல் ஆதாரங்களை இணையதளம் மூலம் அரசுக்கு அனுப்பும்படி கேட்டிருக்கிறார்’. ஆக, அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. முதல்–அமைச்சரே கமல்ஹாசனுக்கு பதில் சொல்லி கருத்துகளை தெரிவித்திருக்கிறார். மொத்தத்தில், ரஜினிகாந்தா?, கமல்ஹாசனா?, யார் முதலில் அரசியலுக்கு வரப்போகிறார்கள்? என்பதுதான் இன்றைய சூழ்நிலையில் மக்களிடையே ஒரு பெரிய பரபரப்பான எதிர்பார்ப்பாக இருக்கிறது. அரசியல் அரங்கில் இப்போது அனைத்து அரசியல் கட்சிகளும், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் பற்றியே விமர்சனம் செய்துவருகிறார்கள். தற்போது கமல்ஹாசனின் குரல்தான் ஓங்கி ஒலிப்பதாலும், அவருடைய ஒவ்வொரு கருத்துக்கும் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட பல கட்சிகளின் எதிர்க்கருத்துகள் மாறிமாறி மின்னல் வேகத்தில் வருவதாலும், இந்த அரசியல் பந்தயத்தில் புதிதாக கட்சித்தொடங்க நினைப்போரின் பந்தயத்தில் முதல் குதிரையாக நிற்பது கமல்ஹாசன்தான். இனி, நிச்சயமாக அரசியல் அரங்கில் ஒவ்வொருநாளும் கமல்ஹாசனின் தீப்பொறி கிளம்பும் அறிக்கைகளும், எதிர் அணிகளிலிருந்து தாக்குதல் அறிக்கைகளும் நிச்சயம் வரும்.

Monday, 3 July 2017

விற்பனைக்கு வருகிறார் ‘மகாராஜா’ -- Air India

த்திய அரசாங்கம், மாநில அரசுகள் என இரு அரசுகளுக்கும் சொந்தமான பல பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி, மக்களின் வரிப்பணத்தை விழுங்கிக்கொண்டிருக்கின்றன. ஒன்று இந்த நஷ்டத்தை சரிக்கட்டவேண்டும் அல்லது லாபகரமாக இயங்காவிட்டால், அதன் பங்குகளை தனியாருக்கு விற்று நஷ்டத்திலிருந்து தப்பித்துக்கொள்வதுதான் சாலச்சிறந்தது என்று நிபுணர்கள் கூறத்தொடங்கிவிட்டனர். பா.ஜ.க. அரசாங்கமும் இத்தகைய துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கத்தொடங்கிவிட்டது. அத்தகைய ஒரு முடிவாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்றுவிடுவது என்ற வரவேற்கத்தக்க முடிவு மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் ஒரு ‘மகாராஜா’ வரவேற்பதுபோல வர்த்தக சின்னத்தைக்கொண்டதாகும். லாபத்தில் இயங்கும்வரைதான் அவர் மகாராஜாவாக இருக்கமுடியுமே தவிர, நஷ்டத்தில் இயங்கும்போது நிச்சயமாக மகாராஜாவாக இருக்க முடியாது.



தற்போது இந்த நிறுவனத்தின் கடன் ரூ.52 ஆயிரம் கோடியாகும். இனிமேலும் இந்த நஷ்டத்தை தாங்கமுடியாது என்றநிலையில், மத்திய அமைச்சரவைக்கூட்டம் இதுகுறித்து விவாதித்து ஏர் இந்தியா நிறுவனத்தையும், அதன் 5 துணை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்றுவிடுவது என்று முடிவு எடுத்தது. எவ்வாறு இந்த பங்குகளை விற்கலாம்?, 100 சதவீத பங்குகளையும் விற்றுவிடலாமா?, 75 சதவீத பங்குகளை விற்றுவிடலாமா?, அல்லது 51 சதவீத பங்குகளை மட்டும் விற்றுவிடலாமா? என்பது பற்றி முடிவு எடுக்க நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள சூழ்நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தற்போது 118 விமானங்கள் இருக்கின்றன. 41 நாடுகளுக்கும், உள்நாட்டில் 72 நகரங்களுக்கும் ஏர் இந்தியா விமானம் சென்றுவருகிறது. மத்திய அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவு நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒன்றாகும். எவ்வளவு ஆண்டுகள்தான் ஒரு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கும்?, எவ்வளவு காலம்தான் மக்களின் வரிப்பணத்தில் இருந்து அந்த நஷ்டத்தை ஈடுகட்டமுடியும்? என்பதையெல்லாம் கண்டிப்பாக யோசிக்கவேண்டும். இதுபோல, மத்திய அரசுக்கு சொந்தமான 277 பொதுத்துறை நிறுவனங்களிலும், தமிழக அரசுக்கு சொந்தமான 11 பொதுத்துறை நிறுவனங்களிலும் எந்தெந்த
1932–ம் ஆண்டில் தொழில் அதிபர் ஜே.ஆர்.டி. டாட்டா தொடங்கிய டாட்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மத்திய அரசாங்கம் வாங்கியபிறகுதான், முதலில் இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா நிறுவனமாக பரிணமித்து, பின்பு ‘ஏர் இந்தியா’ என்று ஒரே நிறுவனமாக இணைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான பயணத்தில் 14 சதவீதமும், வெளிநாட்டுக்கு செல்லும் பயணத்தில் 17 சதவீதமும் ஏர் இந்தியா விமானங்கள் மூலம்தான் நடந்துவருகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவை தனியார் விமான சர்வீஸ் சேவையைவிட நிச்சயமாக உயர்ந்தது. தனியார் விமான சேவையில் ஒரு குறிப்பிட்ட விமானத்தில் போதிய அளவு பயணிகள் இல்லையென்றால், அந்த விமான சேவையை அன்று மட்டும் ரத்து செய்துவிட்டு, அதில் செல்ல டிக்கெட் எடுத்த பயணிகளை அடுத்த விமானத்தில் ஏற்றி அனுப்பிவிடுவார்கள். ஆனால், ஏர் இந்தியா விமானத்தில் ரத்து என்பதற்கே இடமில்லை. ஒரு பயணிதான் வருவதாக இருந்தாலும் விமானம் செல்லும். எனவே, பயணிகளுக்கு உறுதியான சேவை கிடைத்துவந்தது. இப்போது தனியாருக்கு விற்க முடிவெடுத்துள்ள நிலையில், இந்த உறுதியான சேவை குறித்து மத்திய அரசாங்கம் என்ன சொல்லப்போகிறது?.
நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குகிறதோ?, அந்த நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட்டு, அதில் கிடைக்கும் தொகையை மக்களுக்கான வளர்ச்சித்திட்டங்களுக்கு பயன்படுத்துவதில் அரசு அக்கறை காட்டவேண்டும்.

புதிய அத்தியாயம்; புரட்டிப்பார்த்தால்தான் தெரியும்

ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா பெற்ற சுதந்திரத்தை 'நள்ளிரவில் பெற்ற சுதந்திரம்' என்று இன்றும் கூறிவருகிறோம். அதுபோல, உலகமே தூங்கிக்-கொண்டி-ருந்த நள்ளிரவில் சுதந்திரம் அடையும்போது, எப்படி பாராளுமன்றம் விழித்திருந்து இந்தியாவின் சுதந்திரத்தை அறிவித்ததோ, அதுபோல ஜூன் 30-ந் தேதி நள்ளிரவில் இந்தியா முழுமையையும் ஒரே நாடு!, ஒரே சந்தை!, ஒரே வரி! என்று அழைக்கப்படும்வகையில், சரக்கு சேவை வரி நடைமுறையில் வருவதை பிரகடனப்படுத்தியது. இந்த விழாவை, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், தி.மு.க. உள்பட பல கட்சிகள் புறக்கணித்தன. காங்கிரஸ் கட்சி இதை புறக்கணித்ததற்கு ஒரு காரணமாக பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் 1947-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்றும், 1972-ல் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின்போதும், 1997-ல் பொன்விழாவின்போதும்தான் கூட்டம் நடந்ததே தவிர, எத்தனையோ சீர்திருத்த நடவடிக்கைகள் மத்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நேரத்திலும் அவை எதுவும் நள்ளிரவில் மைய மண்டபத்தில் நடக்கவில்லை என்று கூறியது.

சரக்கு சேவை வரிக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. நாட்டின் பல சீர்திருத்தத்திட்டங்களுக்கு பல வளர்ச்சித்திட்டங்களுக்கு, பல அதிரடி திட்டங்களுக்கு சரித்திர புகழ் பெற்ற வாஜ்பாய்தான் 2000-ம் ஆண்டில் பிரதமராக இருந்தபோது, சரக்கு சேவை வரியை பற்றி ஆராய ஒரு அதிகாரம் படைத்த குழுவை நியமித்தார். அதிலிருந்து இதன் பயணம் தொடங்கியது. பின்பு நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் சரக்கு சேவைவரிக்கான அறிவிப்பை வெளியிட்டார். பிரணாப் முகர்ஜி நிதி மந்திரியாக இருந்தபோது இதற்கான அரசியல் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதிலிருந்து பல தடை-களைத்-தாண்டி சரக்கு சேவை வரி இப்போது அமலுக்கு வந்துள்ளது.

பாராளுமன்றத்தில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பேசும்போது, 'பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள் இருக்கிறது. அதுபோல, சரக்கு சேவை வரி கவுன்சில் நடத்திய 18 கூட்டங்களை தாண்டித்தான் இந்த மசோதா நிறைவேறி இருக்கிறது. சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவில் உள்ள 500 மாகாணங்களை சுதந்-திரத்திற்கு பிறகு இணைக்காவிட்டால், இன்று ஒரேநாடாக இந்தியா இருந்திருக்க முடியுமா?. அதைப்போலத்தான் 29 மாநிலங்களிலும், 7 யூனியன் பிரதேசங்களிலும் விதிக்கப்பட்ட 500 வகையான வரிகள் இன்றைய தினம் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது' என்று மிக அருமையான உவமைகளுடன் பேசினார்.

சரக்கு சேவை வரியால் பல நன்மைகள் இருக்கிறது என்றாலும், சில பாதிப்புகளும் இருப்பதை யாராலும் மறுத்து விட முடியாது. பல பொருட்களின் விலை குறைந்தி-ருந்தாலும், பல பொருட்கள், சேவைகளின் வரி அதிகரித்தி-ருக்கிறது. 1,211 பொருட்கள் மற்றும் சேவைகள் 0, 5, 12, 18, 28 என்ற 5 வரி விகிதங்களுக்கு சரக்கு சேவைவரி உட்பட்டு இருக்கிறது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள், சேவைகளின் வரி உயர்ந்திருப்பதால், சாதாரண குடும்பங்களின் மாத பட்ஜெட்டில் துண்டுவிழும் நிலை உருவாகியுள்ளது.

எல்லாமே கம்ப்யூட்டர் மயம் என்ற நிலையில், 60 சதவீதத்திற்கு மேல் சிறுதொழில் செய்பவர்களுக்கு கம்ப்யூட்டர் என்பது பழக்கமான ஒன்று அல்ல. இதுவே இறுதி முடிவாக மத்திய அரசாங்கம் மேற்கொள்ளாமல், எந்தெந்த வரிகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு, இழப்பு இருக்கிறது என்பதையும், எந்தெந்த வகையில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் நடைமுறை சிக்கல் இருக்கிறது என்பதையும், இன்னமும் தொடர்ந்து தீவிரமாக ஆராய்ந்து வரப்போகும் கால கட்டங்களில் அவற்றை நீக்கி சரக்கு சேவைவரி கட்டுவது ஒரு இனிமை, எளிமை, சுகம் என்றவகையில், இரு தரப்புக்கும் ஒரு நல்ல நிலைமையை உருவாக்குவதில்தான் சரக்கு சேவைவரியின் வெற்றியே இருக்கிறது.



Monday, 29 May 2017

வேதனையின் உச்சம்

முன்எப்போதும் இல்லாத அளவுக்கு மதுவுக்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுவதும் வலுக்கத்தொடங்கி விட்டது. வீதிக்கு வந்து போராடும் பெண்கள், சிறுவர், சிறுமியரை பார்க்கும் போது மனது வேதனையில் தவிக்கிறது. அவர்கள் மீது தடியடி நடத்தி பலப்பிரயோகத்தில் போலீசார் ஈடுபடும் போது கண்கள் குளமாகின்றன. கால்நூற்றாண்டுகளாக மது அரக்கன் பிடியில் வெந்து நொந்த பெண்களின் வேதனையின் உச்சம் தான் இந்த போராட்டம். இதை உணர எடப்பாடி அரசு மறுப்பது அதிகார பசியின் உச்சமாகத்தான் தெரிகிறது. 2016 சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது மதுவுக்கு எதிரான ஒரு பிரசாரம் தமிழகம் முழுவதும் அலையடித்தது. அப்போது திமுக பூரண மதுவிலக்கு தொடர்பான கொள்கையை அறிவித்ததும், அதிர்ந்துபோன அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தேர்தலில் வென்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். அவர் பதவி ஏற்றதும் முதற்கட்டமாக 500 மதுக்கடைகளை மூடினார். அவர் மரணம் அடைந்த பின் ஓபிஎஸ்சை ெதாடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 16ல் பதவி ஏற்ற போது மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தார்.

அப்போது ஒரு வெளிச்சம் தெரிந்தது. 1000 கடைகள் அடுத்தடுத்து மூடப்பட்டுவிட்டன. நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலையோரங்களில் 500 மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் மதுபானக்கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 3 ஆயிரம் மதுக்கடைகள் அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடுத்தடுத்து சாதகமான நிலை ஏற்பட்டதும் தமிழகத்தை பிடித்திருக்கும் மது அரக்கன் இனி மெல்ல மெல்ல வெளியேற்றப்படுவான் என்று எண்ணியிருந்த போது, எடப்பாடி அரசு வழக்கமான அதிமுக ஆட்சியின் தந்திரத்தை பயன்படுத்தி புறவாசல் வழியாக மதுக்கடைகளை திறக்க முடிவு செய்து நடவடிக்கை எடுத்தது.

இதனால் மக்கள் அதிர்ந்து போய் மதுக்கடைகளை ஒட்டுமொத்தமாக தமிழகத்தை விட்டு வெளியேற்ற வீதிக்குவீதி களம் இறங்கி விட்டனர். டாஸ்மாக் கடைகள் உடைக்கப்படுவதும், தீ வைத்து எரிக்கப்படுவதும் அதற்கு சாட்சி. இந்த போராட்டங்களில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதைக்கூட மதிக்காமல் தமிழக காவல்துறை அத்துமீறி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
கணவனின் குடிப்பழக்கத்தால் வாழ்க்கையை இழந்த பெண்கள், மகன்-மகளின் எதிர்காலத்திற்காக அத்தனையும் சகித்துக்கொண்டனர். ஆனால் தற்போது அவர்களும் மதுபோதையின் பிடியில் சிக்கிய பின் தான் ஆக்ரோஷத்தை காட்டத் துவங்கி இருக்கின்றனர். எனவே எடப்பாடி அரசு இனியும் தாமதம் செய்யாமல் தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்ற ெஜயலலிதாவின் அறிவிப்பை நிறைவேற்ற வேண்டும். மது இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும். அதுதான் தமிழகத்தின் எதிர்கால சந்ததிக்கு செய்யும் முதல் சேவையாக இருக்கும்.

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...