ஐகோர்ட்டில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மனு: நகராட்சி நிர்வாகத் துறை, கடந்த நவம்பர் மாதம் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. எனக்கு தொகுதி அலுவலகம் ஒதுக்கீடு செய்த மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவு பிறப்பிக்கும் முன், எனக்கு நோட்டீஸ் வழங்கப்படவில்லை.
டவுட் தனபாலு: நோட்டீஸ் வழங்காததுக்கெல்லாம் ஏன் கோவிச்சுக்கிறீங்கன்னு புரியலையே... நீங்க தான், "தொகுதி அலுவலகத்தைப் பறித்துக் கொண்டால், பிளாட்பாரத்தில் அமர்ந்தாவது மக்கள் குறைகளைக் கேட்பேன்'னு வீர வசனம் பேசினீங்களே...!
சமத்துவ மக்கள் கட்சி எம்.எல்.ஏ., சரத்குமார்: முதல்வர் மீது நம்பிக்கை வைத்து மக்கள் ஓட்டு போட்டதால் தான், பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற முடிந்தது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அ.தி.மு.க., தனித்து நின்றிருந்தாலும், வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கும்.
டவுட் தனபாலு: ஐ... கூட்டணிக்கு விசுவாசமா இருக்கீங்க போல... உங்க பேச்சு சரின்னே வச்சுப்போம்... அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைச்சிருக்கும்... ஆனா, தனித்துப் போட்டியிட்டிருந்தா, ச.ம.க.,வுக்கு ஒரு எம்.எல்.ஏ.,வாவது கிடைச்சிருக்குமா...?
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக இயக்குனர் (நிதி) ராஜகோபால்: மின் பகிர்மானக் கழகத்துக்கு, 45 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இதில், 40 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து உருவாக்கப்பட்டுள்ளது. கடனுக்கு வட்டி செலுத்தும் நிலையில் கூட, மின் பகிர்மானக் கழகம் இல்லை; இனி, கடன் கொடுக்கவும் யாரும் தயாராக இல்லை.
டவுட் தனபாலு: என்னது...? 40 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருந்தும், கடன் கொடுக்க ஆள் இல்லையா...? இதுக்குத் தான், இந்த மாதிரி வேலைகளுக்கு அரசியல்வாதிகளை நியமிக்கணும்கிறது... தி.மு.க., எம்.பி., வசந்தி ஸ்டான்லியைக் கேட்டுப் பாருங்க... 40 ஆயிரம் கோடியை வச்சு, எத்தனை லட்சம் கோடி கடன் வாங்க முடியும்னு சொல்லுவாங்க...!