Monday, 7 October 2013

கண் தானம் செய்ய உறுதி ஏற்போம்


கௌதமன்:கண் தானம் குறித்து சென்னை சங்கர நேத்ராயலா மருத்துவமனையின் மருத்துவ சமூகவியலாளர் அ.போ.இருங்கோவேள் கூறுவதாவது: நம் பிறப்புக்கும் வாழ்க்கைக்கும் அர்த்தம் இருப்பது போல மரணமும் அர்த்தம் உள்ளதாக அமைய வேண்டும். மரணத்துக்கு பின்னால் நாம் செய்யக்கூடிய புண்ணிய காரியம் கண் தானம். பார்வை இழப் பால் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும் நாடு இந்தியா. உலகில் பார்வை இழந்த 4 பேரில் ஒருவர் இந்தியராக இருக்கிறார். பார்வை இழப்புக்கு முதல் காரணம் கண் புரை, அடுத்தது கார்னியல் பார்வை கோளாறுகள். கார்னியா மாற்று ஆபரேஷன் செய்வதால் இந்த பாதிப்பை சரிசெய்ய முடியும். மரணம் அடைபவர்கள் கண்களை தானமாக வழங்கினால் கார்னியா மாற்று ஆபரேஷன் செய்து பலருக்கும் பார்வை கிடைக்க செய்ய முடியும். கண்ணாடி அணிபவர்கள், கேடராக்ட் ஆபரேஷன் செய்தவர்கள்கூட கண் தானம் செய்யலாம். மரணம் அடைந்த 6 மணி நேரத்துக்குள் கண்ணை அகற்ற வேண்டும்.

அப்போதுதான் ஆபரேஷனுக்கு பயன்படும். ஆபரேஷனுக்கு பயன்படாத கண்கள் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும். மரணம் அடைந்தவரின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை அருகே உள்ள கண் வங்கியை தொடர்பு கொண்டு தெரிவித்தால் உரிய நேரத்தில் மருத்துவர் குழு வருவார்கள். அதுவரை, இறந்தவரின் கண்களை மூடி அதன் மீது ஈரமான பஞ்சை வைப்பது நல்லது. தலைக்கு மேல் மின்விசிறி சுழல்வதை நிறுத்தி வைக்கலாம். இறந்தவரின் தலையை 2 தலையணை வைத்து உயர்த்தி வைக்கலாம். மருத்துவ குழுவினர் 20 முதல் 30 நிமிடத்தில் சுவடு தெரியாத வகையில் கண்களை பாதுகாப்பாக அகற்றிவிடுவார்கள். கண்தானம் வழங்க அனைவரும் உறுதி ஏற்போம். சென்னையில் கண் தானம் வழங்குவதற்கான போன் எண்கள்:
044-28281919, 28271616. இமெயில்: eyebank@snmail.org. முகவரி: சி யு ஷா கண் வங்கி, சங்கர நேத்ராலயா, 18, கல்லூரி சாலை, சென்னை-6.

Sunday, 22 September 2013

இலங்கை வடக்கு மாகாண தேர்தல் : தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி!


கொழும்பு: இலங்கை வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இக்கூட்டமைப்பின் தலைவர் விக்னேஸ்வரன் முதல்வராகிறார்.இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். கடைசியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கவுன்சிலுக்கு 1988ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அப்போதே விடுதலை புலிகள் பெரும்பாலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்ததால், அவர்களின் மிரட்டலை தொடர்ந்து ஒரே ஒரு அரசியல் கட்சி மட்டுமே அப்போதைய தேர்தலில் கலந்து கொண்டது. அதன்பின்னர் அங்கு மாகாண கவுன்சில் தேர்தலே நடக்கவில்லை.

இந்நிலையில், 2009ம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பை முழுமையாக இலங்கை ராணுவம் ஒழித்தது. பல ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போரும் முடிவுக்கு வந்தது. அதன்பின், வடக்கு மாகாணத்தில் முறைப்படி தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை நிலை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தன. தன் மீதான குற்றச்சாட்டுகளை பின்தள்ளவும், வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தி சர்வதேச அரங்கில் இலங்கை மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்கவும் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்த அதிபர் ராஜபக்சே முடிவு செய்தார். அதன்படி வடக்கு, வடமேற்கு, மத்திய மாகாணங்களில் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

வடக்கு மாகாணத்தில் உள்ள 36 இடங்களுக்கு 906 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாகாண சபைகளுக்கு 142 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை மொத்தம் 43 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த வடக்கு மாகாண தேர்தலை, உள்ளூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 2,000 பார்வையாளர்கள் கண்காணித்தனர். இந்நிலையில் அமைதியாக முறையில் நேற்று வாக்கு பதிவு நடந்தது. இந்தியா சார்பில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று வாக்கு பதிவை பார்வையிட்டார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத் தீவு, வவுனியா ஆகிய வடக்கு மாகாண மாவட்டங்களில் 850 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மக்கள் ஆர்வமுடன் வாக்கு சாவடிகளில் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மொத்தம் 65 சதவீத வாக்குகள் பதிவானது. தமிழ் மக்களின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில், முதல்வர் வேட்பாளராக முன்னாள் நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் போட்டியிட்டார். இந்த கூட்டமைப்பு கட்சிக்கு வீடு சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (யூ.பி.எப்.ஏ.) கட்சிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில்தான் நேரடி மோதல் இருந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று மாலை முதலே எண்ணப்பட்டன. இதில் யாழ்ப்பாணத்தில் 14 இடங்களிலும், முல்லைத்தீவில் 4 இடங்களிலும், கிளிநொச்சியில் 3 இடங்களிலும், மன்னாரில் 3 இடங்களிலும், வவுனியாவில் 4 இடங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 36 இடங்களில் 28ல் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றது. இதனால் மூன்றில் இரண்டு பங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தகுதி பெற்றது.அதிபர் ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 7 இடங்களில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. தவிர இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை கைப்பற்றியது. தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றியை தொடர்ந்து விக்னேஸ்வரன் முதல்வர் ஆகிறார்.

முதல்வராகும் நீதிபதி:

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முதல்வராக உள்ள சி.வி.விக்னேஸ்வரன், கடந்த 1939ம் ஆண்டு அக்டோபர் 23 தேதி கொழும்பில் பிறந்தார். சட்டம் பயின்று கடந்த 1979ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி நீதித் துறை பணியில் சேர்ந்தார். அதன் பின் மாவட்ட நீதிபதியாக, ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2001ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டார். கடந்த 2004ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது தந்தை கனக சபாபதியும் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்.

Ôமக்கள் எங்கள் பக்கம்Õ : தமிழ் தேசிய கட்சி மகிழ்ச்சி

தமிழ் தேசிய கட்சி எம்.பி.யும் செய்தித் தொடர்பாளருமான சுரேஷ் பிரேம சந்திரன் கூறியதாவது:
தேர்தலில் 28 கைப்பற்றி உள்ளோம். இதன் மூலம் போனஸ் இடங்களாக கூடுதலாக 2 இடங்கள் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும். உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணம் முழுவதும் அதிபர் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள், ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. ராணுவமும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தலில் செயல்பட்டது. எனினும், தேர்தலில் தமிழ் தேசிய கட்சி அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பது நிரூபணமாகி உள்ளது

Saturday, 21 September 2013

தள்ளாடும் வயது; தளராத உறுதி 110 வயது அண்ணன் 108 வயது தங்கை வேலை செய்து பிழைக்கும் ஆச்சரியம் - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=48545#sthash.xmv3jMoP.dpuf



வலங்கைமான்:திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா தெற்கு பட்டம் ஊராட்சி குப்பனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு 110 வயதாகிறது. தினமும் கூலி வேலைக்கு சென்று வருமானம் ஈட்டி வருகிறார். ஆரோக்கியமாக உள்ளார். அப்பகுதியில் முள்வேலி அமைக்கும் பணி மற்றும் வயல்களில் நாற்று பறிக்கும் பணிகளை செய்கிறார். கண் பார்வை நன்கு  உள்ளது. காது சரியாக கேட்பதில்லை. ‘இது நாள் வரை ஆஸ்பத்திரிக்கு போனதில்ல.. ஊசி போட்டதில்ல.. மருந்து, மாத்திரை சாப்பிட்டதில்லேஎன்கிறார் பொக்கை சிரிப்புடன்.

இவரது மனைவி ஆச்சியம்மாள் (85), மகன் சவுந்தரராஜன். இவருக்கு திருமணமாகி விட்டது.  மனைவி, மகன், மருமகள், பேரன், பேத்தி ஆகியோருடன் ரங்கசாமி சந்தோஷமாக வசிக்கிறார். இவரது தங்கை ரவுணம்மாளுக்கு 108 வயதாகிறது. கணவர்  இறந்து விட்டதால் ரங்கசாமியுடன் வசிக்கிறார். 10 ஆடுகளை வாங்கி மேய்த்து வருகிறார். விவசாய வேலைகளையும் கவனிக்கிறார். இவரும் ஆஸ்பத்திரிக்கே சென்றதில்லை என்பது ஆச்சரியம்.

Tuesday, 20 August 2013

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி 35 பேர் பலி பீகாரில் இன்று காலை சோகம்



பாட்னா:பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் ரயில் ஏறுவதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் மீது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். பீகார் மாநிலம், கஹாரியா மாவட்டத்தில் உள்ள கத்யானி ஸ்தன் என்ற ஊரில் புகழ்பெற்ற சிவன் கோயில் உள்ளது. நேற்று விடுமுறை என்பதால் இங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் இன்று காலை ஊர் திரும்புவதற்காக அங்குள்ள ரயில் நிலையத்திற்கு வந்தனர். அப்போது 2வது பிளாட்பாரத்தில் பாசஞ்சர் ரயில் நின்று கொண்டிருந்தது. அதில் ஏறுவதற்காக முதல் பிளாட்பாரத்திலிருந்து குதித்து தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

 அப்போது அந்த தண்டவாளத்தில், சாகர்சா பாட்னா ராஜ்ராணி எக்ஸ்பிரஸ் ரயில் மிக வேகமாக வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ரயில், தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் மீது மோதியது. இதில் பலர் உடல் சிதறி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் மரண ஓலமிட்டனர். ரயில் நிலையம் முழுவதும் பரபரப்பானது. இதற்கிடையே, எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் தண்டவாளத்தை கடப்பதை கவனிக்காமல் வேகமாக வந்த அந்த ரயிலின் டிரைவர் மீது கோபமடைந்த பயணிகள், அவரை இன்ஜின் பெட்டியிலிருந்து வெளியே பிடித்து இழுத்தனர். அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். ரயில் நிலைய அதிகாரிகள் தலையிட்டு அவரை மீட்டனர். இருப்பினும் ஆத்திரம் தீராத பயணிகள் அவர்களை சிறைபிடித்தனர்.

இந்நிலையில், பயணிகள் பலியான தகவல் அறிந்த உள்ளூர் போலீசாரும், மீட்பு படையினரும் விரைந்து வந்தனர். வன்முறை கூட்டத்தை சமாதானப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த விபத்தில் 35 பேர் வரை உயரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும், இன்னும் முழு விவரம் வெளிவரவில்லை. விபத்து பற்றி ரயில்வே தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

Monday, 19 August 2013

செவ்வாய் கிரகத்துக்கு பயணம் 1800 இந்தியர்கள் முன்பதிவு



மும்பை: அறிவியல் வளர, வளர மனிதர்களின் சாதனைகளும் வளர்ந்தபடியே உள்ளன. மனிதர்கள் விரைவிலேயே பூமியைவிட்டு வெளியே வேற்று கிரகங்களில் வசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு விடும் என்று பெரும்பாலானோர் நம்புகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இப்போதே நிலாவுக்கு பயணத் திட்டம், நிலாவில் நிலம் வாங்கும் திட்டம், செவ்வாய் பயணத் திட்டம் என இணையதளங்களில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் ஏராளமான ஆர்வலர்கள் இந்த திட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நெதர்லாந்தை சேர்ந்த மார்ஸ் ஒன் என்ற நிறுவனம் 2020ல் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கு பயண திட்டங்களை வடிவமைத்துள்ளது. இதையடுத்து செவ்வாய் கிரகத்துக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவு கட்டணம் 7 டாலர் என அறிவித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 1 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்தியர்கள் சிலரும் செவ்வாய் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த மே மாதம் இந்த திட்டத்தில் வெறும் 5 இந்தியர்கள் மட்டுமே முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால் ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Thursday, 11 July 2013

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியுமா? மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

கிணத்துக்கடவு: கோவை அருகே செட்டிக்காபாளையத்தில் அர்ஜூன் பொறியியல் கல்லூரி திறப்பு விழா நேற்று நடந்தது.  கல்லூரி தலைவர் சூர்யநாராயணன் தலைமை தாங்கினார். முதல்வர் விஜயராகவன் முன்னிலை வகித்தார். செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:

சந்திராயன் விண்கலம் ஒன்றை செலுத்துவதற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் 69 விண்கலங்களை விண்ணில் செலுத்தின. சந்திரனில் தண்ணீர் இருக்கிறதா? என்று ஆராய்ந்து வந்தன. அவர்களால்  சந்திரனில் தண்ணீர் இருப்பதை கண்டறிய முடியவில்லை.

இந்நிலையில் உலக அளவில் 70வதாக சந்திராயன்&1 விண்கலத்தை சந்திரனில் ஆராய்ச்சி செய்ய இந்தியா அனுப்பியது. அங்கு தண்ணீர் இருப்பதை சந்திராயன் &1  விண்கலம் கண்டறிந்து இந்தியாவுக்கு தகவல்களை அளித்தது. இதனால் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மீது மற்ற நாடுகளின் பார்வை திரும்பியுள்ளது.

43 ஆண்டுகளாக தொடர்ந்து சந்திரனுக்கு விண்கலத்தை ஆய்வுக்காக செலுத்தி வந்த அமெரிக்கா, சந்திராயன் கண்டறிந்ததை மீண்டும் ஒரு விண்கலம் அனுப்பி அது உண்மை என நிரூபித்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் இந்தியாவுக்கு சந்திராயன் பெருமையை சேர்த்துள்ளது.  அந்த விண்கலத்திற்கு திட்ட இயக்குனராக பணியாற்றியது பெருமையளிக்கிறது.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியுமா என்று ஆராய்ந்து வருகிறோம். விரைவில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பப்படுகிறது. அதற்கான பணிகள் நடக்கிறது. 2 அல்லது 3ம் தலை முறைக்குள் சந்திரன், செவ்வாய் கிரகங்களில் இந்தியர்கள் குடியேறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது. இவ்வாறு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...