
கிழக்காசிய நாடான வட கொரியாவின் அதிபர் கிம் ஜங் உன், இருதய நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, சமீபத்தில் தகவல் வெளியானது
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல் வெளியி்ட்டுள்ளார்
வட கொரியா அதிபர் கிம் ஜாங் சமீபகாலமாக வெளிஉலகிற்கு வரவில்லை. வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்த தின கொண்டாட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. கடந்த 15-ம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது சந்தேகங்களை எழுப்பியது. கடந்த 2011-ம்ஆண்டு அதிபராக வந்தபின் முதல்முறையாக இந்த நிகழ்ச்சியை கிம் தவிர்த்துள்ளா்.
சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்க உளவுத்துறையும் இதை தீவிரமாகக் கண்காணித்து வருகிறதாக செய்திகள் வெளியாகின. இதுபற்றி கடந்த இரு நாட்களுக்கு முன் பேட்டி அளித்த அதிபர் ட்ரம்ப், “ அதிபர் கிம் உடல்நலம் தேற வாழ்த்துக்கள் “ என மட்டும் தெரிவித்திருந்தார்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் வடகொரிய அதிபர் குறித்த தகவல்களைக் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:
வடகொரிய அதிபர் கிம் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை. சிஎன்என் சேனல் தவறான அறிவிப்புகளை வெளியிடுகிறது. எனக்கு கிடைத்த தகவலின்படி அவர் உடல்நிலை குறித்த தகவல் பொய். அந்த சேனல் கடந்த கால ஆதாரங்களை வைத்து செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
வடகொரிய அதிபர் குறித்து போலியான செய்திகளை சிஎன்என் வெளியிட்டுள்ளது. மருத்துவ ரீதியாக கிம் உடல்நிலையில் எந்த பிரச்சினையும் இல்லை என நம்புகிறேன். அவர் நலமாக இருக்கிறார்.
அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் பல பிரச்சினைகள் தொடர்ந்து இருந்து வந்தன. நான் மட்டும் அதிபராக வரவில்லை என்றால் வடகொரியாவுடன் அமெரிக்கா போர் செய்திருக்கும்” எனத் தெரிவித்தார்
வடகொரியாவுக்கு அண்டை நாடான தென் கொரியா, அதிபர் கிம் குறித்த எந்தவிதமான செய்திகளை உறுதிப்படுத்தவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது