Skip to main content

மாநில மொழிகளின் சவால்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பள்ளிக்கூடங்களில் முதல் மரியாதை தாய்மொழிக்கும், அதற்குப் பிறகுதான் ஆங்கிலத்துக்கும் தரப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் மட்டுமே இந்தியாவின் கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நாம் பாதுகாக்க முடியும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியிருப்பதை 'இந்துத்துவ' வாதக் கண்ணோட்டம் என்று புறம்தள்ளிவிடலாகாது. 
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த செப்டம்பர் மாதம் தில்லியில் நடந்த 'இந்தி தினம்' கொண்டாட்டத்தில் ஆற்றிய உரை அவரது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்திலேயே சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியது. இந்தி பேசும் மாநில மக்கள் ஏனைய மாநில மொழி பேசுபவர்களுக்குக் கூடுதல் மரியாதையும், போதிய இடமும் தருவதன் மூலம்தான் அவர்களது அன்பையும் ஆதரவையும் பெறமுடியும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார் குடியரசுத் தலைவர். 
'இந்தியை தேசிய மொழியாக அறிவித்திருந்தாலும்கூட அதற்கு இந்தியாவின் சில பகுதிகளில் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது என்பதைப் புறம்தள்ளிவிட முடியாது. அவர்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தவும் முடியாது. இந்தியா என்பது அனைவருக்கும் பொதுவான தேசம்' என்று குறிப்பிட்டிருந்தார் அவர்.
'இந்தியாவில், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் பேசும் மொழிகளை சாமானிய மக்கள் புரிந்து கொள்வதில்லை. எல்லோருமே ஆங்கிலம் படித்தவர்கள் அல்ல. நீதிமன்றங்களில் மெல்ல மெல்ல இந்தியும் ஏனைய மாநில மொழிகளும் கையாளப்படும் சூழல் உருவாகி வருகிறது. ஆனால், இன்னும்கூட ஆங்கிலம்தான் வழக்காடு மொழியாக இருக்கிறதே தவிர, மாநில மொழிகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அதனால், என்ன விவாதிக்கப்படுகிறது என்பதை வழக்குத் தொடுத்தவர் புரிந்து கொள்ள முடியாத நிலைதான் காணப்படுகிறது. அதேபோல மருத்துவர்களும் மருந்துகளை ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார்கள். மருந்துச் சீட்டுகள் மக்கள் படித்துத் தெரிந்து கொள்ளும் மொழியில் அமைந்தால்தான் மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே இடைவெளி குறைந்து புரிதல் அதிகரிக்கும்' என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருந்தார்.
'இந்தி தினம்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்தும் பாராட்டுக்குரியது. இந்தி பேசும் மக்கள் இந்தியாவின் பிற மொழிகளிலுள்ள வார்த்தைகளைப் பயன்படுத்த முற்பட வேண்டும் என்றும், அதன் மூலம் ஆங்கிலக் கலப்பைத் தவிர்த்து இந்தியை வளப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார். அவரும் மாநில மொழிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசியது ஆச்சரியமாக இருந்தது.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தன்னுடைய உரைகளில் தொடர்ந்து மாநில மொழிகளுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடைய முடியும் என்கிற கருத்தை சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா முதலிய நாடுகள் பொய்ப்பித்திருக்கின்றன என்று சுட்டிக்காட்டி இருக்கிறார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. அமெரிக்காவின் வளர்ச்சிக்குக் காரணம் அவர்கள் தங்களது தாய்மொழியான ஆங்கிலத்தில் படிப்பதுதான் என்று கூறி, தாய்மொழிக் கல்விக்கு ஆதரவு திரட்ட முற்பட்டிருக்கும் அவரது முயற்சி தொடர வேண்டும்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறுவது போல கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் இனத்தின் அடையாளங்களையும் பாதுகாப்பது தாய்மொழியாகத்தான் இருக்க முடியும். இன்னொரு தேசத்தைக் கைப்பற்றும் எந்தவொரு நாடும், தனது கலாசாரத்தை நிலைநாட்டுவதற்குத் தங்களது தாய்மொழியைக் கட்டாயப்படுத்துவதுதான் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்படும் வழிமுறை. இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேய, பிரெஞ்சு, போர்த்துகீசிய காலனிய ஆட்சியாளர்கள் அவர்கள் கைப்பற்றிய இடங்களில் தங்களது மொழியைப் பரப்புவதில் முனைப்பாக இருந்தனர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
உலகளவில் இன்னும் 100 ஆண்டுகளில் அழிந்துவிடும் வாய்ப்புள்ள 25 மொழிகளில் தமிழ்மொழி எட்டாவது இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் 'யுனெஸ்கோ' நிறுவனம் பத்தாண்டுகளுக்கு முன்பே எச்சரித்திருந்தது. மொழிகள் அழிவதற்கான பல காரணங்களையும் 'யுனெஸ்கோ' பட்டியலிட்டிருந்தது.
சொந்த மக்களால் கைவிடப்படுதல், ஆதிக்க மொழிகளால் கழுத்து நெரிக்கப்படுதல், பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்தல், தங்களது தாய்மொழியை மதிப்புக் குறைந்ததாக நினைத்தல் என்கிற நான்கு முக்கியமான காரணங்களால் மொழிகள் மெல்ல மெல்ல அழிவதாகக் கூறுகிறது யுனெஸ்கோ. இந்தியாவிலுள்ள தமிழ் உள்ளிட்ட பல்வேறு மாநில மொழிகள் எதிர்கொள்ளும் சவால்கள்தான் மேலே குறிப்பிட்ட நான்கு காரணங்களும்.
உலகளவில் இப்போதைக்கு 7105 மொழிகளும், அதில் இந்தியாவில் மட்டும் சுமார் 880 மொழிகளும் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் 220 மொழிகள் அழிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலைமை தொடர்ந்துவிடக் கூடாது. மாநில மொழிகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் அறைகூவலும், குடியரசுத் துணைத் தலைவர் 
வெங்கய்ய நாயுடுவின் கவலையும் மத்திய ஆட்சியாளர்களை நிமிர்ந்து உட்கார்ந்து, மாநில மொழிகளின் வளர்ச்சி குறித்து யோசிக்க வைக்க வேண்டும்!
 

Popular posts from this blog

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழம் மரத்தை பற்றி

Spanish cherry என்று அழைக்கப்படும் இந்த மரம் ஒரு சிற்றின மரம் . இதில் நிறைய மருத்துவ பழங்கள் உள்ளவை. இது சங்க காலங்களில் பயன்படுத்தப்பட்டவை . இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும். ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர், புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக் மகிழம் பூ: இதன் பழம் சாப்பிட உகந்தவை . இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர். இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தி...

பூலான் தேவி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பூலான் தேவி ( Phoolan Devi , Aug 10, 1963 - Jul 25, 2001), கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பிரபலக் கொள்ளைக்காரியும் பின்னாளில் அரசியல்வாதியுமாக இவர் அறியப்படுகிறார். பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் ஒடுஇக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டி பிழைத்து வந்தது. பூலான்தேவிக்கு 4 சகோதரிகள். 11 வயதில் பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன். திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான். அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள். முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வே...

ஆர்க்டிக் டெர்ன் பறவை

ஆர்க்டிக் டெர்ன்  (Arctic Tern) என்பது (Sterna paradisaea)என்ற குடும்பத்தைச் சேர்ந்த கடற்பறவை ஆகும். உலகிலேயே அதிக தூரம்வலசை வரும் பறவையாகும். வட துருவ ஆர்க்டிக்கிலிருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களின் வழியே தென்துருவ அன்டார்க்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் வலசை போகின்றன. வலசை போவதன் மூலம் ஆர்டிக் டெர்ன் சுமார் 35,000 கி. மீ. தொலைவு ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் ஆகும். சுமார் ஒரு அடி நீளமுள்ள இப்பறவையானது, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது. வலசை வரும் நேரங்களில் இவை உணவும் உண்பதில்லை. அதே சமயம் அவை ஒரே சமயத்தில் நில்லாமல் சுமார் 4,000 கி. மீ தூரம் வரை பறந்து பயணிக்கிறது. இது ஒரு முறை வலசை சென்று திரும்பி வரும் வரை சுமார் 70,900 கி.மீ பயணித்து விடுகிறது. [3] இது உலகில் அறியப்படும் நீண்ட தூரம் வலசை போகும் மற்ற விலங்கினங்களை விட அதிகமான வலசை போகும் தூரமாகும். இப்பறவை ஆர்க்டிக் வட்டமான துந்திராவில் இனப்பெருக்கம் செய்கிறது.