Skip to main content

தமிழகத்துக்கு 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3,000 கன அடி நீர் திறக்க வேண்டும்: காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவு; கர்நாடகாவில் மீண்டும் பதற்றம்


கோப்புப் படம்.


கர்நாடக அரசு வரும் 21-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை தமிழகத்துக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி (2.6 டிஎம்சி) நீரை திறந்துவிட வேண்டும் என காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக ஆலோசிப்பதற்காக காவிரி மேற் பார்வைக் குழுக் கூட்டம் கடந்த 12-ம் தேதி கூடியது. அப்போது நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெய்த மழை அளவு, அணைகளில் உள்ள நீர் இருப்பு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி யில் பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு உள்ளிட்ட தகவல்களை இரு மாநில அரசுகளும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து மத்திய நீர் வளத் துறைச் செயலரும் காவிரி மேற்பார்வைக் குழு தலைவருமான சசி சேகர் தலைமையில் நேற்று மீண்டும் காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம் டெல்லியில் நடை பெற்றது. இதில் தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன ராவ், கர்நாடக அரசின் தலைமை செயலர் அரவிந்த் ஜாதவ், புதுச்சேரி அரசின் தலைமை செயலர் மனோஜ் பரிதா, கேரள அரசின் பிரதி நிதிகள் உள்ளிட்ட 4 மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் தரப்பில், ''காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு 64 டிஎம்சி நீரை திறக்க வேண்டும். குறித்த நேரத்தில் காவிரி நீர் திறக்கப்பட்டால் மட்டுமே தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்ற முடியும். விவசாய தேவைக்கும் குடிநீர் தேவைக்கும் காவிரி நீரை நம்பியிருப்பதால் கர்நாடக அரசுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்'' எனக்கூறப்பட்டது.
அப்போது கர்நாடக அரசு தரப்பில், '' கர்நாடகாவில் பருவ மழை பொய்த்ததால் அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. இருப்பினும் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழ‌கத்துக்கு இதுவரை 13 டிஎம்சி காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியின் குறுக்கேயுள்ள 4 அணைகளின் மொத்த நீர் இருப்பு 27 டிஎம்சி மட்டுமே உள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை கர்நாடகாவின் குடிநீர் தேவைக்காக 21 டிஎம்சி நீர் தேவைப்படுகிறது. எனவே தமிழகத்துக்கு பாசனத்திற்காக காவிரி நீரை திறக்க முடியாது'' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து காவிரி மேற்பார்வைக் குழு தலைவர் சசி சேகர் கர்நாடகா, தமிழக அரசின் தலைமை செயலருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். பின்னர், இது தொடர்பாக காவிரி மேற்பார்வைக் குழுவின் த‌லைவர் சசி சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் அளவு, கர்நாடகா - தமிழகம் ஆகிய இரு மாநில அணைகளில் உள்ள நீர்மட்ட அளவு, அணைகளின் நீர்வரத்து மற்றும் வெளியேற்ற அளவு, பயிரிடப்பட்டுள்ள நிலப்பரப்பின் அளவு ஆகியவற்றை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து காவிரி மேற்பார்வை குழு சில முடிவுகளை எடுத்துள்ளது.
அதன்படி கர்நாடக அரசு வரும் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி (2.6 டிஎம்சி) காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும். இந்த முடிவில் இரு மாநில அரசுகளுக்கும் ஆட்சேபம் இருந்தால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். எங்களது முடிவு குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப் படும்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான சிக்கலை தீர்க்கும் வகையில், இனி காவிரி மேற்பார் வைக் குழு கூட்டத்தை அவ்வப் போது நடத்த முடிவு செய்யப்பட் டுள்ளது. புதிய முறையாக 4 மாநில அரசுகளின் ஒத்துழைப் புடன் செயற்கைக் கோள் உள்ளிட்ட நவீன அறிவியல் கருவி களின் உதவியோடு காவிரி ஆற்றின் உண்மை நிலை கண்காணிக்கப் படும்.
இதன் மூலம் கர்நாடக- தமிழக காவிரி நீர்ப்பாசன பகுதியின் மழைபொழிவு, அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்ற‌ அளவு ஆகிய வற்றை கண்டறிந்து இனி இணையதளத்தில் வெளியிடப் படும். இதற்கான செலவினங்களை மாநில அரசுகளே ஏற்க வேண்டும். காவிரி மேற்பார்வைக் குழுவின் கடமையை நிலைநாட்டும் நோக்கில் வருகிற பிப்ரவரி வரை மாதந்தோறும் கூட்டம் நடத்தப்படும். அப்போதைய நிலையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். அடுத்த கூட்டம் அக்டோபர் மாதத்தில் நடத்தப்படும்.


Popular posts from this blog

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழம் மரத்தை பற்றி

Spanish cherry என்று அழைக்கப்படும் இந்த மரம் ஒரு சிற்றின மரம் . இதில் நிறைய மருத்துவ பழங்கள் உள்ளவை. இது சங்க காலங்களில் பயன்படுத்தப்பட்டவை . இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும். ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர், புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக் மகிழம் பூ: இதன் பழம் சாப்பிட உகந்தவை . இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர். இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தி...

பூலான் தேவி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பூலான் தேவி ( Phoolan Devi , Aug 10, 1963 - Jul 25, 2001), கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பிரபலக் கொள்ளைக்காரியும் பின்னாளில் அரசியல்வாதியுமாக இவர் அறியப்படுகிறார். பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் ஒடுஇக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டி பிழைத்து வந்தது. பூலான்தேவிக்கு 4 சகோதரிகள். 11 வயதில் பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன். திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான். அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள். முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வே...

ஆர்க்டிக் டெர்ன் பறவை

ஆர்க்டிக் டெர்ன்  (Arctic Tern) என்பது (Sterna paradisaea)என்ற குடும்பத்தைச் சேர்ந்த கடற்பறவை ஆகும். உலகிலேயே அதிக தூரம்வலசை வரும் பறவையாகும். வட துருவ ஆர்க்டிக்கிலிருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களின் வழியே தென்துருவ அன்டார்க்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் வலசை போகின்றன. வலசை போவதன் மூலம் ஆர்டிக் டெர்ன் சுமார் 35,000 கி. மீ. தொலைவு ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் ஆகும். சுமார் ஒரு அடி நீளமுள்ள இப்பறவையானது, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது. வலசை வரும் நேரங்களில் இவை உணவும் உண்பதில்லை. அதே சமயம் அவை ஒரே சமயத்தில் நில்லாமல் சுமார் 4,000 கி. மீ தூரம் வரை பறந்து பயணிக்கிறது. இது ஒரு முறை வலசை சென்று திரும்பி வரும் வரை சுமார் 70,900 கி.மீ பயணித்து விடுகிறது. [3] இது உலகில் அறியப்படும் நீண்ட தூரம் வலசை போகும் மற்ற விலங்கினங்களை விட அதிகமான வலசை போகும் தூரமாகும். இப்பறவை ஆர்க்டிக் வட்டமான துந்திராவில் இனப்பெருக்கம் செய்கிறது.