Skip to main content

மழை வெள்ளம் கற்பிக்கும் பாடம்


 


 முற்றிலும் ஸ்தம்பித்துக் கிடக்கிறது தமிழகத்தின் தலைநகரம். வடகிழக்குப் பருவ மழை சென்னையைப் புரட்டிப்போட்டுவிட்டது. தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியதால், மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இத்தகவலால் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். நகரின் பல பகுதிகளில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துவிட்ட நிலையில், உதவிக்காகக் காத்திருக்கிறார்கள் மக்கள்.
மழையால் பாதிக்கப்படாத இடங்களே சென்னையில் இல்லை எனலாம். பல பகுதிகளில் 10 அடிக்கும் மேல் தண்ணீர் நிற்கிறது. 4 நாட்களாகப் பல பகுதிகளில் மின் இணைப்பு இல்லை. யாரும் யாருடனும் தொடர்புகொள்ள முடியாத நிலை. அவசர உதவிக்குக்கூட யாரிடமும் உதவிகோர முடியாத நிலை.
மழை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை. ஒரு லிட்டர் பால் ரூ. 100-க்கும் அதிகமாக விலை வைத்து விற்கப்படுகிறது. பல ஏ.டி.எம்.கள் மூடிக் கிடக்கின்றன. திறந்திருக்கும் ஏ.டி.எம்.கள் முன்னால் நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கிறார்கள். அதேபோல், பல அலுவலகங்களில் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுவதால் எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் நிரப்பவும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருக்கின்றன. அதேபோல் உணவு வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பவர்களையும் பார்க்க முடிந்தது.
சென்னை விமான நிலையம் மழை வெள்ளத்தில் மிதக்கிறது. விமானங்கள் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன. வெளியூர்களுக்குச் செல்லும் பல பேருந்துகள் இயங்கவில்லை. ஆட்டோக்களில் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்திக் கேட்கின்றனர். சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப் பூண்டி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் ஆகிய முக்கிய வழித்தடங்களில் புறநகர் மின்சார ரயில்கள் ஓடவில்லை. சென்னை சென்ட்ரலில் இருந்தும் எழும்பூரிலிருந்தும் அனைத்து எக்ஸ்பிரஸ் மெயில் ரயில்களின் சேவையும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால், சென்னை மழை வெள்ளத்திலிருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்று நினைத்தவர்களும் வேறு வழியின்றி மினி லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் ஏறி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.
மழை, வெள்ளம் காரணமாக கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டிருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகமும் மாநகரப் போக்குவரத்துக் கழகமும் முழு அளவில் செயல்பட முடியவில்லை. சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான சாலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எல்லா ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியும் குடியிருப்புப் பகுதிகளில் இன்னமும் வெள்ளம் வடியவில்லை. மழைநீரும் சாக்கடை நீரும் கலந்து மிகப்பெரிய சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், மாநில அரசு ஆகியவற்றுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை. ராணுவத்தின் முப்படைகளும் தேசியப் பேரிடர் மேலாண்மை முகமையும் களத்தில் இறங்கியும் மக்களின் துயர்கள் தொடர்கின்றன. கர்ப்பிணிகளும் முதியவர்களும் முதல் மாடியிலும் இரண்டாவது மாடியிலும் சிக்கிக்கொண்டு தொலைக்காட்சிகள் மூலமாக வேண்டுகோள் விடுத்தும் உதவி சென்றடைய முடியாத நிலையில் மீட்பு, நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.
பல ஆண்டு உழைப்பிலும் சேமிப்பிலும் கட்டிய வீடுகள், வாங்கிய பொருட்கள், வாகனங்கள் தங்கள் கண் முன்னே கடும் சேதத்துக்கு உட்பட்டிருப்பதைத் தாங்க முடியாமல் கதறுபவர்களின் குரல்களைக் கேட்க முடிகிறது. சென்னையில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்களிலிருந்து, பிளாட்ஃபாரங்களில் வசிக்கும் மக்கள் வரை லட்சக்கணக்கானோர் தங்கள் உடைமைகளை இழந்து தவிப்பதைப் பார்க்க முடிகிறது. மழை வெள்ளத்தால் ரூ. 15,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தொழில் கூட்டமைப்பான அசோசேம் மதிப்பிட்டிருக்கிறது. ஆனால், மழை தொடர்வதால் இன்னும் எத்தனை கோடி இழப்பு ஏற்படுமோ தெரியவில்லை.
காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என்று அதிகாரிகளும் அரசுப் பணியாளர்களும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், மீட்புப் பணிகளும், உணவுப் பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட பணிகளும் இன்னும் பல இடங்களைச் சென்றடையவில்லை. தமிழக அரசுத் தரப்பிலிருந்து தீர்க்கமான நடவடிக்கைகள் எதையும் பார்க்க முடியவில்லை. இதுபோன்ற பேரிடர் காலத்தில் மக்களிடம் அச்சம் பரவாமல் இருக்க வேண்டுமானால், தகவல் தொடர்பு சாதனங்கள் முழுவீச்சில் இயங்க வேண்டியது அவசியம். இத்தனை நாட்கள் மின் இணைப்பு இல்லாமல், என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறார்கள் மக்கள். பல இடங்களில் நிவாரணப் பணிகள் நடக்கவே இல்லை என்று புகார்கள் வந்திருக்கின்றன. தன்னார்வலர்கள் பலரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
நகர்மயமாதல், திட்டமிடப்படாத வளர்ச்சி போன்றவை இந்தப் பேரழிவின் பின்னணியில் இருப்பதை அசோசேம் சுட்டிக்காட்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு தவறுகளைத் திருத்திக்கொண்டு, பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் அதிலிருந்து மீண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும்.

Popular posts from this blog

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழம் மரத்தை பற்றி

Spanish cherry என்று அழைக்கப்படும் இந்த மரம் ஒரு சிற்றின மரம் . இதில் நிறைய மருத்துவ பழங்கள் உள்ளவை. இது சங்க காலங்களில் பயன்படுத்தப்பட்டவை . இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும். ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர், புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக் மகிழம் பூ: இதன் பழம் சாப்பிட உகந்தவை . இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர். இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தி...

பூலான் தேவி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பூலான் தேவி ( Phoolan Devi , Aug 10, 1963 - Jul 25, 2001), கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பிரபலக் கொள்ளைக்காரியும் பின்னாளில் அரசியல்வாதியுமாக இவர் அறியப்படுகிறார். பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் ஒடுஇக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டி பிழைத்து வந்தது. பூலான்தேவிக்கு 4 சகோதரிகள். 11 வயதில் பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன். திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான். அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள். முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வே...

ஆர்க்டிக் டெர்ன் பறவை

ஆர்க்டிக் டெர்ன்  (Arctic Tern) என்பது (Sterna paradisaea)என்ற குடும்பத்தைச் சேர்ந்த கடற்பறவை ஆகும். உலகிலேயே அதிக தூரம்வலசை வரும் பறவையாகும். வட துருவ ஆர்க்டிக்கிலிருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களின் வழியே தென்துருவ அன்டார்க்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் வலசை போகின்றன. வலசை போவதன் மூலம் ஆர்டிக் டெர்ன் சுமார் 35,000 கி. மீ. தொலைவு ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் ஆகும். சுமார் ஒரு அடி நீளமுள்ள இப்பறவையானது, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது. வலசை வரும் நேரங்களில் இவை உணவும் உண்பதில்லை. அதே சமயம் அவை ஒரே சமயத்தில் நில்லாமல் சுமார் 4,000 கி. மீ தூரம் வரை பறந்து பயணிக்கிறது. இது ஒரு முறை வலசை சென்று திரும்பி வரும் வரை சுமார் 70,900 கி.மீ பயணித்து விடுகிறது. [3] இது உலகில் அறியப்படும் நீண்ட தூரம் வலசை போகும் மற்ற விலங்கினங்களை விட அதிகமான வலசை போகும் தூரமாகும். இப்பறவை ஆர்க்டிக் வட்டமான துந்திராவில் இனப்பெருக்கம் செய்கிறது.