எந்தவொரு நாட்டில் விவசாயி நன்றாக இருக்கிறானோ, அந்த நாட்டில் சட்டம்&ஒழுங்கு நிலை சிறப்பாக இருக்கும் என்பது கீழைநாட்டின் கிராமத்து பழமொழி. இது நூற்றுக்கு நூறு சரியானது என்பதை இப்போதைய நிலையில் உணர முடிகிறது. விவசாயப் பொருட்கள் விலை குறைவாக இருந்தால், ஏழைகள் பாதிக்கப்பட மாட்டார்கள். இதன் மூலம், அவர்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும். போராட்டங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் வேலையில்லாமல் போய்விடும்.
ஆனால், இப்போது நாட்டில் வித்தியாசமான சூழ்நிலை காணப்படுகிறது. ஒரு பகுதியில் விற்பனையே ஆகாமல் உற்பத்திப் பொருட்கள் அழிக்கப்படுகின்றன. மற்றொரு பகுதியில் அதற்கு கடும் தேவை ஏற்பட்டு, பல மடங்கு விலை கொடுத்து வாங்கும் பரிதாபம் உள்ளது.
சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.20. மிளகாய் ஒரு கிலோ ரூ.15, சின்ன வெங்காயம் ரூ.20 முதல் ரூ.30 வரை. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.2, மிளகாய் ரூ.8, சின்னவெங்காயம் ரூ.15. அரும்பாடுபட்டு உழைத்த விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு, உற்பத்தி விலை கூட கிடைக்கவில்லை. நஷ்டம் தொடர்ந்தால், அது அவர்களுக்கு மட்டுமே அல்ல, நாட்டுக்கே கேடு. நஷ்டத்தை சமாளிக்க முடியாமல், ஒரு விவசாயி அத்தொழிலை விட்டால், சுமார் 100 பேருக்கு 10 நாளுக்கு தேவையான உணவுப்பொருட்களின் உற்பத்தி இழக்கப்படுகிறது என்பதை அறிய வேண்டும்.
காஷ்மீரில் ஒரு காலத்தில் ஆப்பிள்களுக்கு விலை கிடைக்காத பரிதாபமான நிலை இருந்தது. விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதன் விளைவாக, பல பகுதிகளில் அதிக டன் கொள்ளளவு கொண்ட குளிர்சாதன கிடங்குகள் நிறுவப்பட்டன. இப்போது காஷ்மீர் விவசாயிகளால் ஆண்டு முழுவதும் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை கிடங்குகளில் வைத்து கொண்டு, நல்ல விலை கிடைக்கும் நேரத்தில் விற்க முடியும். இதனால்தான், இப்போது ஆண்டு முழுவதும் காஷ்மீர் ஆப்பிள்கள் விற்பனைக்கு கிடைக்கிறது.
அதே போல், தமிழகத்திலும் விவசாயப் பொருட்களுக்கு எல்லா பகுதிகளிலும் ஒரே விலை கிடைக்கும் வகையில் சமநிலை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு பெரிய சந்தையிலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் குறித்த தகவல் பலகைகளும் வைக்கப்பட வேண்டும். இதன் மூலம், தங்களுடைய விளைபொருட்களுக்கு எந்த ஊரில் நல்ல விலை பெற முடியும் என்பதை உணர்ந்து விவசாயிகள் அதற்கான நடவடிக்கைகளில் இறங்குவார்கள். விவசாயிகளுக்கு செய்யும் உதவி, நமக்கு, நாமே செய்து கொள்வதாகத்தான் அர்த்தம்.